Monday, November 17, 2014

"யாதுமாகி நின்றாய் காளீ!'

உடல்நலக்குறைவு காரணமாக 22 ஆண்டுகளாக தட்சிணேஸ்வரம் காளி கோயிலில் செய்த அர்ச்சகர் பணியை ராமகிருஷ்ணர் விட்டு விட நேர்ந்தது. புற்றுநோய் தீவிரமாகி, படுத்த படுக்கையாகி விட்டார். ஆனால், ஆன்மிக தாகம் அதிகரித்துக் கொண்டே போனது. காளி நாமத்தை மட்டும் இடைவிடாமல் ஜெபித்து வந்தார். தன் லட்சியத்தை நிறைவேற்றப் போவது யார் என்னும் ஏக்கம் அவரை வாட்டி வதைத்தது.
""காளித்தாயே! என் உயிர் பிரிவதற்குள் என் குறிக்கோளை நிறைவேற்றும் நல்லவரை எனக்கு கண்ணில் காணச் செய்!'' என பிரார்த்தித்தார்.
ராமகிருஷ்ணரைத் தரிசிக்கவும், உடல் நலம் விசாரிக்கவும் பலரும் வந்தனர். அப்படி வருபவர்களின் ஒவ்வொருவரின் முகத்தையும் ஆர்வத்தோடு பார்த்தார். தகுதியான நபராக யாரும் தென்படவில்லை. வேதனை தான் அதிகரித்தது.
அவர் எதிர்பார்த்துக் காத்திருந்த நாளும் வந்தது!
சட்டக்கல்வி பயிலும் மாணவர் ஒருவர் ராமகிருஷ்ணரைக் காண வந்தார். அந்த இளைஞர் ஏற்கனவே ராமகிருஷ்ணருக்கு அறிமுகமானவரும் கூட. நரேந்திரன் என்பது அந்த இளைஞரின் அப்போதைய பெயர்.
""குருஜி! நான் நரேந்திரன் வந்திருக்கிறேன்!'' என்றார்.
அந்தக் குரலைக் கேட்டதும் சட்டென கண்களைத் திறந்தார் ராமகிருஷ்ணர். "இவரே நான் எதிர்பார்க்கும் லட்சிய மனிதர்' என்று அவரின் உள்ளுணர்வு தெளிவுபடுத்தியது. அவரிடம் சிறிது நேரம் பேசிய நரேந்திரன் கிளம்ப ஆயத்தமானார்.
அப்போது அவரின் கைகளைப் பற்றிக் கொண்ட ராமகிருஷ்ணர், ""நான் மேற்கொண்ட ஆன்மிகப்பணியை தேசம் முழுவதும் பரப்பும் தகுதியான நபரை கண்ணில் காட்ட வேண்டுமென காளியிடம் வேண்டாத நாளில்லை. அதற்குரிய நபர் நீ தான் எனக்குத் தோன்றுகிறது. நிறை வேற்றுவாயா?'' என்று கேட்டார்.
சிறிது நேரம் மவுனம் காத்த நரேந்திரர், தான் சட்டம் பயில்வதாகவும், வக்கீலாக பணியாற்ற விரும்புவதாகவும் தெரிவித்து விட்டு சட்டென கிளம்பி விட்டார். ராமகிருஷ்ணருக்கு சற்றே வருத்தம்.
இரண்டு நாளில் ராமகிருஷ்ணரின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது.
அப்போது திடீரென, ""குருஜி'' என்று சொன்னபடி ராமகிருஷ்ணரின் கைகளைத் தொட்டார் இளைஞரான நரேந்திரன். கண் விழித்துப் பார்த்தார் ராமகிருஷ்ணர்.
எதிரே துறவிக்கோலத்தில் இளைஞரான நரேந்திரன் நின்றிருந்தார்.
""இப்போது நான் சட்டம் படிக்கும் மாணவராக உங்கள் முன் நிற்கவில்லை. தங்களின் குறிக்கோளுக்கு இணங்க ஆன்மிகத்தை உலகமெங்கும் பரப்பும் நோக்கத்துடன் வந்திருக்கிறேன்,'' என்று நா தழுதழுக்க கூறினார். ராமகிருஷ்ணர் ஆனந்தக் கண்ணீருடன் "காளீ! காளீ!'என்று கூவினார். "யாதுமாகி நின்றாய் காளீ!' என்று எங்கும் ராமகிருஷ்ணரின் கண்ணுக்கு காளியின் திருவுருவே தெரிந்தது.
அந்த இளைஞரான நரேந்திரரே, நாடு போற்றும் விவேகானந்தராக உயர்ந்து, ஆன்மிகத்தை அகிலம் எங்கும் பரப்பி, தர்மத்தை நிலைநாட்டினார்.

No comments:

Post a Comment