Tuesday, November 25, 2014

எல்லா உயிரிலும் கடவுள்!

எல்லா உயிரிலும் கடவுள்!
உயிர்களை எக்காரணம் கொண்டும் வதைக்கக் கூடாது. ஜனமேயஜயர் மகாராஜாவின் கதை தெரிந்தால், மற்ற உயிர்கள் மீது நமக்கு கை வைக்கவே தோன்றாது.அர்ஜுனனுக்கும், சுபத்ரைக்கும் அபிமன்யு பிறந்தார். அபிமன்யுவுக்கும் அவரது மனைவி உத்தரைக்கும் பிறந்தவர் பரீட்சித்து மகாராஜா. பரீட்சித்துவுக்கும் அவர் மனைவி மாத்ரவதீக்கும் பிறந்த மகனே ஜனமேஜயர். அதாவது அர்ஜுனனின் கொள்ளுப்பேரர். இவருக்கு சிருதசேனர், உக்ரசேனர், பீமசேனர் என்ற சகோதரர்கள் இருந்தனர்.ஜனமேஜயருக்கு யாகங்களைச் செய்வதில் அலாதிப்ரியம். இதன் மூலம் நாட்டு மக்களுக்கு பலவித நன்மைகள் நடந்தன. ஒருமுறை தீர்கஸத்ரம் என்னும் அரிய பலன்களைத் தரும் யாகத்தை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு நாய்க்குட்டி யாக குண்டம் அருகே வந்து விட்டது. அது அசுத்தம் செய்து விடுமோ என்ற பயத்தில், ஜனமேஜயரின் சகோதரர்கள் அதை அடித்து விரட்டினர். அது வலி தாங்காமல்,தன் தாயிடம் போய் முறையிட்டது. நாயின் தாய் ஜனமேஜயரிடம் போய், எனது குட்டி அசுத்தம் செய்து யாகத்துக்கு பங்கம் ஏற்பட்டிருந்தால் அதை அடித்திருக்கலாம்.
அப்படி ஏதும் செய்யாமல், யாக குண்டம் அருகே நின்று வேடிக்கை பார்த்ததற்காக உங்கள் சகோதரர்கள் அடித்திருக்கிறார்கள். எனவே அவர்கள் மீது நீங்கள் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். எனக்கு நீதி வேண்டும், என்றது.நாயின் கோரிக்கையை ஜனமேஜயர் கண்டுகொள்ளவில்லை.இதன் விளைவாக அந்த நாய், என் குட்டியை அநியாயமாக தாக்கிய உன்னை எந்நேரமும் பயம் ஆட்டிப் படைத்துக் கொண்டே இருக்கும், என சாபம் கொடுத்து விட்டது. அதன் பிறகு தான் பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்தார் ஜனமேஜயர் . நாய் சாபமிட்டபடியே, இனம் புரியாத பயம் அவரை எந்நேரமும் வாட்டி வதைத்தது.பயம் நீங்க அவர் பல யாகங்களைச் செய்தார். ஆனால், நீங்கவில்லை. ஒரு உயிரை தேவையின்றி துன்புறுத்தி, எத்தனை யாகங்கள், பிரார்த்தனைகள் செய்தாலும் இறைவன் அதைக் கண்டுகொள்ள மாட்டார் என்பதைப் புரிந்து கொண்டார்.இந்நேரத்தில் வைசம்பாயனர் என்னும் மகான் வந்தார். இவர் மகாபாரதத்தை இயற்றிய வியாசரின் பிரதம சீடர்.ஜனமேஜயா! பாரதக் கதையைக் கேட்டால் பயம் நீங்கும். மகாபாரதத்தில் பாண்டவர்கள் கிருஷ்ணரின் அருளால் பயமின்றி இருந்தனர், என்றார். அந்தக்கதையை அவரே கூறக்கேட்டு பயம் நீங்கப்பெற்றார்.அதன்பின், எந்த ஒரு பிராணிக்கும் துன்பம் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இவரது தந்தை பரீட்சித்து மகாராஜா பாம்பு தீண்டி தன் 60ம் வயதிலேயே இறந்து விட்டார். எனவே, பாம்புகளுக்கு தீங்கு செய்யாதவரை அவற்றிடம் இருந்து மனிதர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் வகையில் யாகம் ஒன்றை நடத்தினார். ஜரத்காரோர் ஜரத்கார்வாம்ஸமுத்பந்நோ மஹாயசா:!ஆஸ்திகஸ ஸத்யஸந்நோ மாம்பந்நேகப்யோபிரக்ஷிது!! என்னும் மகாபாரதத்திலுள்ள ஸ்லோகம் ஒன்றைச் சொன்னால், பாம்புகள் கடிக்கக்கூடாது என்ற வரத்தை பாம்புகளின் தலைவனான தட்சகனிடம் பெற்றார். இனியாவது, எல்லா உயிர்களையும் கடவுளாகவே பாருங்கள். அவற்றுக்கு துன்பம் இழைக்கத் தோன்றாது.

No comments:

Post a Comment