Monday, November 17, 2014

பாடுவோர் பாடினால்...!

இதிகாச புராணங்களில் மகான்கள் ஆற்றிய அருட்செயல்கள் அளவில்லாதவை. நல்லவர்கள் துன்பப்படும் போது வியாசர், நாரதர் போன்றவர்கள் வந்து வழிகாட்டி துயர் களைவார்கள். அதெல்லாம் புராணத்தில் மட்டும் தான் என்ற எண்ணம் தோன்றலாம்.
18ம் நூற்றாண்டில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றை தெரிந்து கொண்டு முடிவுக்கு வாருங்கள்.
மகான் ஒருவர் திருப்பதியில் தரிசனம் முடித்து விட்டு வந்து கொண்டிருந்தார்.
வழியில் புத்தூர் என்னும் ஊருக்கு வந்தபோது, ஒரு தெருவிலுள்ள கோயில் வாசலில் சிலர் கூடி நின்றனர். அதில் ஒரு பெண் அழுது கொண்டிருந்தாள். இதைக் கண்ட மகான் தன் சீடனிடம் என்ன நடந்தது என்பதை அறிந்து வர அனுப்பினார்.
சீடனும் சென்று விசாரித்தான். ""சுவாமி! மனைவியுடன் திருப்பதி சென்று கொண்டிருந்த பக்தன் ஒருவன், இருட்டில் வழி தவறி இங்கே வந்து விட்டான். அவன் வந்த சமயத்தில் எல்லா வீடுகளும் தாள் போட்டு மூடப்பட்டிருந்தது.
விலங்குகளின் நடமாட்டம் இருக்கும் என்பதால், அந்தக் காலத்தில் இருளில் கதவைத் தட்டினால் யாரும் திறக்க மாட்டார்கள். யாரும் திறக்காததால், பக்தர் இந்த கோயிலுக்கும் வந்து பார்த்தார். அதுவும் சாத்தப்பட்டிருந்தது.
வேறு வழியில்லாமல் சுவர் ஏறிக் குதித்து கோயில் கதவைத் திறக்க முடிவெடுத்தார்.
மனைவியிடம் சொல்லி விட்டு, கோயில் சுவர் ஏறியும் குதித்தார். அவர் குதித்த இடத்தில்..... கோயில் கிணறு இருந்தது. அதில் விழுந்து இறந்து விட்டார். நடந்ததை அறியாத பக்தரின் மனைவி இரவு முழுவதும் கணவனைக் காணாமல் தவித்தாள்.
மறுநாள் கோயிலைத் திறந்த போது, விஷயம் ஊர் முழுவதும் பரவி கூட்டம் கூடி விட்டது. அது தான் அங்கே கூட்டமாக இருக்கிறது'' என்று முடித்தான் சீடன்.
மகான் அருகில் சென்று தரையில் கிடத்தப்பட்டு இருந்த பக்தனைப் பார்த்தார். கழுத்தில் துளசி மாலையுடன் இருந்த அவனைப் பார்த்ததும், ""ஹே! ராமா! உன்பக்தர்களுக்கு இந்த கதி வரலாமா?'' என்று முறையிட்டு பிலஹரி ராகத்தில் ஒரு கீர்த்தனை பாடி, துளசி தீர்த்தத்தை அவன் உடம்பில் தெளித்தார்.
இறந்த பக்தன், அப்படியே உயிர் பெற்று எழுந்தான். அங்கு நின்ற அனைவரும் மகானின் கால்களில் விழுந்து வணங்கி மகிழ்ந்தனர். துயர் தீர்க்கும் மகான்கள் புராண காலத்தில் மட்டுமல்ல! இந்த காலத்திலும் இருக்கிறார்கள் என்பதை விளக்கும்
சம்பவம் இது.
அந்த மகான் யார் என்று கேட்கிறீர்களா? அவர் தான் தியாகராஜ சுவாமிகள்

No comments:

Post a Comment