Thursday, November 20, 2014

வாழ்நாள் நேரத்தினை வீணாக்காது பகவத் சேவைகளில் மனத்தை செலுத்துவோம்.

முதல் யுகமான க்ருத யுகத்தில் பத்தாயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்தால் ஒரு பக்தனால் என்ன சாதிக்க இயலுமோ, அதனை இரண்டாவது யுகமான த்ரேதா யுகத்தில் நூறு ஆண்டு காலத்தினில் வேள்வி மற்றும் யாகங்கள் செய்து சாதிக்க இயலும்.
அதேபோல மூன்றாவது யுகமான துவாபர யுகத்தினில் அதே பயனை தான-தருமங்கள் செய்வதன் மூலமாக ஒரு வருடத்தினில் சாதித்து விடலாம். 
ஆனால் இந்த யுகமான கலியுகத்திலோ அதே பயனை பரமாத்மாவான நாராயணனின் திவ்ய திருநாமங்களை ஒரு நாள் இடையயராது நினைத்தாலே பெற்று விடலாம்..!
(அதற்காக ஒரே ஒரு நாள் இவ்வாறு பெருமானை நினைத்து விட்டு மற்ற நாட்களில் வெறுமனே இருந்து விடலாம் என்று அர்த்தம் அல்ல.)
ஏன் இவ்வாறு பெருமான் ஏற்படுத்தி வைத்துள்ளான்?? என்றால்,
நம்முடைய ஆயுள் தான் அதற்கு காரணம்.
ஆம். இந்த கலியுகத்தில் மனிதனின் ஆயுள் நூறு வருடங்கள், ஆனால் துவாபர யுகத்தினில் ஆயிரம் கணக்கில் இருக்கும். த்ரேதா யுகத்தில் இன்னும் அதிகரிக்கும். அதேபோல முதல் யுகமான க்ருத யுகத்தில் அதை விட பல்லாயிரம் ஆண்டுகள் இருக்கும்.
ஆக இருக்கின்ற இந்த அற்ப ஆயுலுக்குள் இவன் எல்லாவற்றையும் செய்து ஆக வேண்டும் என்பதாலேயே எம்பெருமான் இந்த கலியுகத்தினில் இந்த அறிய வாய்ப்புகளை மானுடர்களான நமக்கு அளித்து உள்ளான்.
அதனை எவ்வாறு பயன்படுத்தி உள்ளோம் அல்லது எவ்வாறு பயன்படுத்த போகிறோம் என்பதே நம்முடைய பிறவிப்பயனை முடிவு செய்ய வல்லது என்றால் அதுவே சத்தியம்.
"வேத சாஸ்திரத்தில் உள்ளபடி நூறு வருட காலங்கள் மனிதர்கள் வாழ்ந்திருப்பர்களேயானாலும், அந்த நூறு வருடங்களில் பாதியான ஐம்பது வருடம் உறக்கத்தாலே கழியும்; 
மீதமுள்ள ஐம்பது வருடங்களில் சிறு குழந்தை பிராயத்திலே கொஞ்ச காலமும், 
பாலகன் என்னும் பிள்ளை பருவத்தினில் கொஞ்ச காலமும்,
வாலிபம் எனும் சபல வயதினில் கொஞ்ச காலமும்,
அதிலும் மீதம் உள்ள காலங்கள் பிணியாளும், வயிற்றுக்கு உணவு தேடுவதற்காகவும், மேலும் மூப்பு என்கிற வயது தளர்ந்த நிலையிலேயும் மற்றும் பல துன்பங்களாகவும் வீணாகவே கழியும்.
இப்படி மனிதனின் ஆயுல் முழுவதும் பயன்இன்றி வீணாகவே கழிகின்றது.
ஆகவே வாழ்நாள் நேரத்தினை வீணாக்காது பகவத் சேவைகளில் மனத்தை செலுத்தி,
சிந்தை, சொல், செயல் ஆகிய மூன்றாலும் பரமாத்மாவான ஸ்ரீமந் நாராயணனையே என்றும் எண்ணுவோம்.

No comments:

Post a Comment