Tuesday, November 18, 2014

எல்லோருக்கும் தந்தை இறைவன்

எல்லோருக்கும் தந்தை இறைவன்
தயானந்தர் துறவி ஆவதற்கு முன் மூல்சங்கர் என்று பெயர் பெற்றிருந்தார். ஒரு சிவராத்திரியன்று அவர் கோயிலுக்குச் சென்றார். அப்போது, ஒரு எலி சிவனின் சிலை மீது அமர்ந்து எதையோ கொறித்துக் கொண்டு இருந்தது. கடவுள் அதை ஏன் மிரட்டி விரட்டவில்லை என்று அவர் ஆச்சரியப்பட்டார்.
அப்போது அவர் மனதில் பட்டது இதுதான்.
""கடவுள் மீது யாராவது மலம் கழித்தாலும் கூட, அதற்காக அவர் கோபமாக அவனிடம் நடக்கப் போவதில்லை. காரணம், அந்த நபர் கடவுளுக்கு குழந்தை போல. பெற்றவர்களின் முகத்தில் குழந்தை எச்சில் செய்தாலும் கூட அதை நேசிக்கிறார்கள். தூசி படிந்த உடம்போடு வரும் குழந்தை, தன் தாய் பனாரஸ் பட்டு உடுத்தியிருந்தாலும், அன்போடு அவள் மேல் சாயும். அப்போதும் அதை பாசத்தோடு தான் கொஞ்சுவாள்.
குழந்தை ராமன், வெளியே விளையாடி விட்டு, தூசியுடனும், அழுக்காகவும் தசரதரிடம் வந்த போது, அந்த சக்கரவர்த்தி புன்னகையுடன் அவனைத் தூக்கி மடிமீது கிடத்திக் கொண்டார் என்று ராமசரித மானஸில் (இந்தி ராமாயணம்) துளசிதாசரால் கூறப்பட்டிருக்கிறது.
கடவுளுடன் நமக்கு வித்தியாசமான உறவு இருக்கிறது. அது காவல்துறைக்கும் குற்றவாளிக்கும் உள்ள உறவு போல் அல்ல! பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் உள்ள உறவு. எனவே, கடவுளைக் கண்டு பயப்படாதீர்கள். உங்கள் செயல்களைக் கண்டு பயப்படுங்கள்.

No comments:

Post a Comment