Thursday, November 13, 2014

விநாயகர் சிலைகளை கரைப்பது ஏன்?

விநாயகர் சிலைகளை அழகழகாக செய்கிறோம். பூஜை முடிந்ததும், கடலிலோ நதிகளிலோ விசர்ஜனம் (கரைத்தல்) செய்து விடுகிறோம். இப்படி செய்யலாமா என்ற கேள்விக்கு இதோ பதிலளிக்கிறேன்.
ஒரு முக்கியத் தலைவருக்கு நாம் எல்லாரும் சேர்ந்து மரியாதை அளிக்கிறோம். அந்தத்தலைவர் நேரே வந்து விட்டால் பரவாயில்லை. வரமுடியாத பட்சத்தில், அவரது படத்துக்கு மரியாதை செய்கிறோம். தலைவர் வந்து விட்டால், அந்த படத்துக்கு அவசியமில்லாமல் போய் விடுகிறது. உள்ளே எடுத்து வைத்து விடுகிறோம். அந்த நாளில், அந்தப் படத்துக்கு அவ்வளவு தான் மரியாதை.
"த்யாயாமி; ஆவாஹயாமி' என்றெல்லாம் கூறி, எங்கும் பரந்திருக்கும் கடவுளை ஒரு சிறு உருவத்திலோ, களிமண்ணிலோ, சிறிதளவு மஞ்சளிலோ செய்த <உருவத்திற்குள் நாம் கொண்டு வந்து விடுகிறோம். பூஜை முடிந்த பிறகு "யதாஸ்நானம் உத்வாஸயாமி' என்று சொல்லி, அந்த தட்டையே நாம் நகர்த்தி விடுகிறோம். அதற்குப் பிறகு, அந்த மஞ்சள் உருவில் கடவுள் இருப்பதாக நாம் நினைப்பதில்லை.
அதே போல, விநாயகர் உருவத்தை நாம் விநாயகர் சதுர்த்தி சமயத்தில் கொண்டு வந்து, பிராண பிரதிஷ்டை செய்து பூஜை செய்கிறோம். அதற்கு நைவேத்யம் செய்து வணங்குவோம். பூஜை முடியும்வரை யாரும் அதைத் தொடக்கூட அனுமதிக்கமாட்டோம். ஆனால், விழா முடிந்த பிறகு, அதை நதியிலோ, கிணற்றிலோ, சமுத்திரத்திலோ இறக்கி விட்டு விடுவோம்.
ஒருவர் பதவியில் இருக்கும்போது, அவரை நாம் அமைச்சர் என்று மதிக்கிறோம். பதவியை விட்டு இறங்கிவிட்டால், அவர் அமைச்சரல்ல. அதேபோல, பிராண பிரதிஷ்டையெல்லாம் செய்து பூஜிக்கும்போது, அந்த உருவத்தை களிமண் என்று நினைக்காமல், கடவுள் என்றே கருதுகிறோம். பூஜை முடிந்ததும், அந்த உருவம் களிமண் என்ற மதிப்பையே திரும்பவும் அடைகிறது. பூஜை ஆரம்பத்தில் களிமண்ணாகவும், மஞ்சள் பொடியாகவும் இருந்தது போல, மீண்டும் அதே நிலைக்கு மாறி விடுகிறது.
எதுவாக இருந்ததோ அந்த நிலையையே அது அடைகிறது. அவ்வளவு தான். மற்றபடி சிறப்பு காரணங்கள் ஏதுமில்லை.

No comments:

Post a Comment