Tuesday, November 18, 2014

அந்த பயம் இருக்கட்டும்!

புகழ் மிக்க மதுரை நகரில் தான் சிவன் 64 திருவிளையாடல்களை நிகழ்த்தினார். சிவபெருமானே தலைமைப் புலவராக இருந்து சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது அங்கு தான்!
மதுரை மன்னரிடம் அமைச்சராய் இருந்த மாணிக்கவாசகர், குதிரை வாங்க கொடுத்த பொன்னில், சிவனுக்கு கோயில் திருப்பணி செய்து விட்டார். இது எல்லோருக்கும் தெரிந்த கதை தான். "மன்னன் கொடுத்த அரசாங்கப் பொது செல்வத்தில் இப்படி செய்தது சரியா?'' என்ற கேள்வி சிலருக்குள் எழும். ஆனால், இதுபற்றிய உண்மை அறிய, கைலாயம் வரை போய் விட்டு மறுபடியும் மதுரைக்கே வந்து விடலாம்.. வாருங்கள்!
துர்வாசர் சிவபெருமானைத் தரிசிக்க கைலாயம் சென்றார். அங்கே வாசலில் ஏராளமான தங்கத்துகள்கள் மலை போலக் குவிந்திருந்தது. கைலாய தரிசனத்திற்கு வந்த தேவர்களின் மணி மகுடங்கள் ஒன்றோடொன்று உராய்ந்ததால் உதிர்ந்த தங்கத்துகள்கள் தாம் அவை.
துர்வாசர், தன் கையிலிருந்த தண்டத்தை அத்துகள்கள் மீது ஊன்றி வைத்து விட்டு உள்ளே போய் சிவனைத தரிசித்தார். திரும்பிய போது, தண்டத்தின் அடியில் ஏராளமான தங்கம் ஒட்டிக் கொண்டு விட்டது. அதைக் கவனிக்காமல், மதுரை மீனாட்சி சொக்கநாதரைத் தரிசிக்கப் புறப்பட்டார். மதுரை வந்த பின் தான், தண்டத்தில் ஒட்டியிருந்த தங்கத்தைக் கவனித்தார். அதை அப்படியே வாசலில் தட்டி விட்டு, தரிசனத்தை முடித்து விட்டுக் கிளம்பி விட்டார்.
அதன் பிறகு, கோயிலுக்கு வந்த மதுரை மன்னன், தங்கத்துகளை கஜானாவில் சேர்த்து விட்டான். குறிப்பிட்ட காலத்திற்கு வங்கியில் டெபாசிட் செய்த பணம் இரண்டு, மூன்று மடங்காவது போல... மதுரை கஜானாவில் சேர்த்த கயிலைநாதரின் தங்கமே, பிற்காலத்தில் பன் மடங்காகி மாணிக்கவாசகரால் சிவன் கோயில் திருப்பணிக்குப் பயன்படுத்தப் பட்டது. இதன் மூலம் துர்வாசர் முதலான மகான்களின் தூய்மையும், கடவுளின் செல்வம், அவருக்கே மீண்டும் பயன்படுத்தப்பட்டது என்ற உண்மையும் விளங்கும்.
ஆனால், இந்த கலியுகத்தில் கோயில் சொத்து எப்படி பராமரிக்கப்படுகிறது என்பது எல்லாரும் அறிந்த ஒன்று. ஒன்று மட்டும் நிச்சயம்!
கடவுளுக்குத் தெரியும்- தனது சொத்தை எப்போது எப்படி யார் மூலம் மீட்க வேண்டும் என்று. தனது சொத்தை அவர் மீட்க நினைக்கும் நேரத்தில், அதைக் கையில் வைத்திருப்பவர்களின் குடும்பம் என்னவெல்லாம் ஆகப்போகிறதோ!
என்ன! கோயில் சொத்தை தங்களிடம் வைத்திருப்பவர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கிறதா! எதற்கு இந்த அவஸ்தை! கடவுளின் பணத்தை அவரிடமே ஒப்படைத்து விடுங்களேன்

No comments:

Post a Comment