Monday, November 17, 2014

எடுத்து வச்சாலும் கொடுத்து வைக்கணுமே!

புரோகிதர் வீட்டின் சுவர், ஒரு பக்கமாக இடிந்து விட்டது. அவர் கொத்தனாரை வரவழைத்து சரி செய்ய வேண்டினார்.
புரோகிதர் வீட்டுக்கு வந்த கொத்தனார் வாசலில் ஒரு பொட்டலத்தைப் பார்த்தார்.
என்னவாக இருக்குமென பிரித்துப் பார்த்த போது, அது நிறைய தங்கக்கட்டிகள் இருந்தன. அவருக்கு ஆச்சரியம்...அதிர்ஷ்டம் தன்னைத் தேடி வந்தது கண்டு மகிழ்ந்தார்.
புரோகிதர் வீட்டுக்குள் அதை வைத்து விட்டு, வேலையைச் செய்தார். புரோகிதரின் மனைவி கொத்தனாரிடம், "" பொட்டலத்தில் என்ன இருக்கிறது?'' என்றாள்.
""அது வேறு ஒண்ணுமில்லே மாமி! குழந்தைங்க மைசூர்பாகு வேணுமுனு கேட்டாங்க! அதான் வாங்கி வச்சிருக்கேன். வேலையை முடிச்சுட்டு வீட்டிலே போய் கொடுக்கணும்,'' என்றார்.
மாமிக்கு மைசூர்பாகு என்றால் ஏக இஷ்டம். கொத்தனார் சாப்பிடப்போன நேரத்தில், ஒன்றை எடுத்து சாப்பிட்டு விட்டால், அவருக்கென்ன தெரியவா போகிறது என்ற எண்ணத்தில் பொட்டலத்தை பிரித்தாள். உள்ளே தங்கக் கட்டிகளைப் பார்த்ததும் அதிர்ந்தாள். அதேநேரம், மூளை வேகமாக வேலை செய்தது. அவசர அவசரமாக கடைக்குப் போய் ஒரு பொட்டலம் மைசூர்பாகு வாங்கி வந்தாள். அதை வைத்து விட்டு, தங்கக்கட்டி பொட்டலத்தை மறைத்து விட்டாள்.
திரும்பி வந்த கொத்தனார் வேலையை முடித்து விட்டு, பொட்டலத்தை கையில் எடுத்தார். எடை குறைவாக இருந்தது. பிரித்துப் பார்த்தால் உள்ளே மைசூர் பாகு...
அப்போது அசரீரி ஒலித்தது.
""கொத்தனாரே! அந்த கட்டிகள் புரோகிதரை உன் மூலமாக அடைய வேண்டும் என்ற விதியிருந்தது. அதன்படி அது நடந்தது. அதேநேரம், புரோகிதர் மூலமாக உனக்கு மைசூர்பாகு வர வேண்டும் என்பது விதி. அதுவும் சரியாக நடந்தது. யாருக்கு என்ன வர வேண்டுமோ அதைச் சரியான நேரத்தில் கொடுத்து விடுவேன்,'' என்றது.
கொத்தனாருக்கு மனசு கஷ்டமாயிருந்தாலும், யாருக்கு எதெது கிடைக்க வேண்டும் என்பது தெய்வத்தின் முடிவல்லவா என்ற ஆறுதலும் கிடைத்தது.

No comments:

Post a Comment