Monday, December 15, 2014

பகவான் கண்ணன்


பகவான் கண்ணன் பெண் பித்தன்,பெண்கள் குளிப்பதை ஒளிந்து இருந்து பார்த்தவன் என்று ஏகப்பட்ட கதைகள் கடவுள் மறுப்பாளார்கள் மட்டுமல்ல கடவுள் உண்டு என்பவர்களிடமும் உண்டு...அவர்களுக்கு ஒரே ஒரு வார்த்தை.
கிருஷ்ணர் பெண்களின் ஆடைகளை திருடிய பொழுது அவரின் வயது பத்து என்பது தெரியுமா?..
கோபியர்கள் குளிப்பதை மறைந்து இருந்து பார்த்தார் என அதன் உட்பொருள் அறியாமல் உளறுபவர்களுக்காக இந்த பதிவு...
சராசரி மனிதர்களை ஆட்டிப்படைக்கும், காமம், குரோதம், பேராசை, மாயை, அகந்தை என அத்தனை குணங்களும் கண்ணனுடன் ராசலீலையில் பங்கேற்றவர்களுக்கு தொலைந்தது. பரமாத்மாவுடன் ஜீவாத்மா கலக்கும் இதில் பாலினத்துக்கே வேலை இல்லை. ஆனால் இன்று வரை ராசலீலைக்காக கிருஷ்ணர் தவறாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இத்தனைக்கும் ராசலீலை புரிந்தபோது கிருஷ்ணரின் வயது வெறும் பத்து.....
இந்த வயதில் காமம் என்பது கண்ணனை குறை சொல்பவர்களின் தாய் தந்தையரின் வளர்ப்பு சரி இல்லாத காரணத்தால் வேண்டுமானால் வந்து இருக்கலாம்...கண்ணனுக்கு இல்லை....
கண்ணனைச் சுற்றிய கோபியர்கள்: கோபியர்களின் ஆடை அவிழ்ந்து கிடக்கின்றது. அத்தனை கோபியர்களும், நதியில் நீராடி, மூழ்கித் திளைத்து சுகானுபவம் பெற இறங்குகின்றனர். நதியில் மூழ்க,மூழ்க அந்த நீரின் இனிய அனுபவத்தில் மூழ்கிப் போகின்றனர். கரையில் இருக்கும் ஆடைகளின் நினைவோ, ஏன், கண்ணன் நினைவோ கூட இல்லை அவர்களுக்கு! பார்த்தான் கண்ணன், தன் குழலெடுத்து ஊதுகின்றான். கோபியர் திரும்பிப் பார்க்கின்றனர். உடனே சட்டென அவர்கள் ஆடைகளை எடுத்துக் கொண்ட கண்ணன் மரத்தில் ஏறி மறைகின்றான். கோபியர் பதறுகின்றனர். ஆஹா, ஆடை இல்லாமல் எப்படி வெளியே வருவது??? கண்ணா,மணிவண்ணா, கோவிந்தா, கோபாலா, ஆடைகளைக் கொடுத்துவிடு, ஸ்ரீதரா, ருஷிகேசா, தாமோதரா, கேசவா, ஆடைகளைக் கொடுப்பாய்! நந்தகோபன் மகனே! இது என்ன விளையாட்டு?? கொடுத்துடுப்பா! கொடுத்துடு!...
ம்ஹும், கண்ணனா கொடுப்பான்? மறுக்கின்றான். பின்னே என்ன செய்வது?? என்னிடம் வாருங்கள்! வந்து கேளுங்கள் கொடுக்கப் படும் என்று உணர்த்துகின்றான் கோவிந்தன். கோபியர்களுக்குப் புரிகின்றது...
இது தான் ராசக்ரீடை என்னும் அழகிய காட்சி...சற்று விளக்கமாய்ப் பார்ப்போமா??
இங்கே கோபியர்களாய் இருப்பவர்கள் அனைவரும் இவ்வுலக மக்களாகிய நாமே தான். பிறக்கும்போது ஞானத்துடனேயே பிரம்மமாய்த் தான் பிறக்கின்றோம். ஆனால் நாளாவட்டத்தில், சம்சாகர சாகரம் என்னும் நதியில் மூழ்கி, கடலில் மூழ்கி, நம்மை நாமே மட்டுமில்லாமல், இந்த உலகையும், நம்மையும் படைத்தவன் ஒருவன் இருக்கின்றான் என்பதையே மறக்கின்றோம்.
நாம் கழட்டிய ஞானம் தான் இங்கே கரையில் இருக்கும் ஆடைகள். இறைவன் நாம் ஞானத்தைத் துறந்து அஞ்ஞானமாகிய சாகரத்தில் மூழ்கிக் கிடப்பதை அறிந்து நம்மைக் கூப்பிடுகின்றான். எனினும் இந்த உலக மயக்கத்தில் மூழ்கி இருக்கும் நமக்கு அது காதில் விழுவதில்லை. அதனால் ஞானமாகிய ஆடையை இறைவனே திரும்ப எடுத்துக் கொண்டு விடுகின்றான். நமக்குத் துன்பம் வரும்போது தாங்கும் சக்தி குறைவது அதனாலேயே. அப்போதுதான் இறைவனைப் பூரணமாய் நினைக்க ஆரம்பிக்கின்றோம். அவனிடம் பிரார்த்திக்கின்றோம். எனக்கு விடிவு இல்லையா? என் கஷ்டங்களுக்கு முடிவு இல்லையா எனக் கேட்கின்றோம்.
கண்ணன் சொல்கின்றான்:"வா, என்னிடம் வந்துவிடு! என்னிடம் சரணாகதி அடைந்துவிடு! உன்னை நான் காக்கின்றேன்." என்று சொல்கின்றான். ஞானமாகிய ஆடையைக் காட்டுகின்றான். என்னிடம் வா, தருகின்றேன் என்று ஆசை காட்டுகின்றான். இறைவனைச் சரணடைந்தால் ஞானமும், அதைத் தொடர்ந்த மோட்சமும் கிட்டும் என உணர்த்துகின்றான்...
எந்த மக்கள் கண்ணனையே சிந்திக்கின்றார்களோ அவர்களின் யோக நலத்தை தான் தாங்குவதாய்க் கூறுகின்றான் கண்ணன். கண்ணனையே நினைத்து, கண்ணனுக்கே மனத்தை அர்ப்பணம் செய்து, கண்ணனுக்கே பக்தி செலுத்தி, கண்ணனுக்கே வழிபாடுகள் செய்து, கண்ணனைத் தவிர வேறொருவரைத் தொழாமல், கண்ணனையே அடையவேண்டும் என்று எண்ணுவதே இந்த ராசக்ரீடையின் உட்பொருள்....

No comments:

Post a Comment