Friday, December 19, 2014

நன்றி

நன்றி' என்ற வார்த்தை தமிழ் அகராதியிலே மிகவும் வலிமையான வார்த்தை என்றே கூறலாம். நாம் ஒருவருக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பின்றி செய்கின்ற உதவியாக இருந்தாலும், நமக்கு மற்றொருவர் செய்கின்ற உதவியாக இருந்தாலும் 'நன்றி' என்ற வார்த்தையின் அடிப்படையிலேயே செய்யப்படுகிறது.
'நன்றி' பற்றி பகவத்கீதை கூறுவது:
‘கர்மத்தை செய், பலனை என்னிடம் விட்டு விடு’. அதாவது 'உன்னுடைய கர்மம் நன்மை செய்வதானால்' அதையாருக்கு வேண்டுமானாலும் செய். ‘எதை செய்ய விரும்புகிறாயோ அதை செய்து கொண்டே போ’. அதுவே சுதர்மம். நன்மை செய்வது என்று தீர்மானித்து விட்டால் நன்று கெட்டவனுக்குக்கூட செய். காரணம், நீ செய்யும் நன்மை ஏதோ ஒரு வடிவத்தில் மிக்க பலனோடு உனக்கு திரும்பி விடுகிறது. அவன் செய்கிற தீமை வட்டியோடு அவனுக்கு போய்ச் சேருகிறது.
நன்றி பற்றிய கதை ஒன்று:
"தேள் ஒன்று கங்கையில் மிதந்து சென்றது. அதன் மீது பரிதாபப்பட்ட ஒரு சந்நியாசி, அதை எடுத்து வெளியில் விட முயன்றார். அது அவரைக் கொட்டிவிட்டு மறுபடியும் நீரில் விழுந்தது. மீண்டும் அவன் எடுத்து விட்டார். மீண்டும் அது கொட்டிற்று. 'ஏன் இப்படிச் செய்தீர்கள்?' என்று ஒருவர் கேட்டார். சந்நியாசி சொன்னார்: 'கடைசி வரை அது தன் சுபாவத்தை விட வில்லை'. அது போல நானும் நன்றி செய்கின்ற எனது கடமையில் இருந்து தவறவில்லை' இதுவே சுதர்மம்”.

நன்றி பற்றி ஒளவையார் கூறுவது: 
•'நன்றி மறவேல்', 'நன்மை கடைபிடி'.
•'ஐயம் புகினும் செய்வன செய்' - பிச்சையெடுத்து வாழும் வறுமை நிலையில் ஏற்பட்டாலும் செய்ய வேண்டிய நல்ல செயல்களை இயன்ற அளவு செய்.
பயன் கருதாது அறம் செய்க:
நிலைபெற்றுத் தளராமல் வளர்கின்ற தென்னை மரமானது தான் அடியால் உண்ட தண்ணீரைத் தன் முடியாலே சுவையுள்ள இளநீராக்கித் தானே தருவதுபோல், நற்குணமுடைய ஒருவனுக்கு உதவி செய்வதால் அவ்வுதவியை அவன் எப்பொழுது திருப்பிச் செய்வானோ என்று ஐயுறு வேண்டுவதில்லை (அவ்வுதவி நமக்குத் தவறாமல் வந்து சேரும்).

நல்லோர்க்குச் செய்த உதவி:
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போற் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர்மேல் எழுத்திற்கு நேர்.
பொருள்: நற்குணமுடைய ஒருவருக்குச் செய்த உதவியானது கருங்கல்லின் மேல் வெட்டப்பட்ட எழுத்தைப் போல அழியாது விளங்கும்.. நல்லவர் அல்லாத அன்பில்லாத மனமுடையார்க்குச் செய்த உதவியானது நீரின் மேல் எழுதப்பட்ட எழுத்திற்கு ஒப்பாகும்(அழிந்து விடும்).

'நன்றி' பற்றி கூறுகையில் வள்ளுவப் பெருந்தகை சற்று விலகி இவ்வாறு கூறுகிறார். 
•'ஏதோ, உதவி செய்ய வேண்டும் என்று நீ எல்லோருக்கும் செய்யாதே. யாருக்குச் செய்கிறோம் என்று அறிந்து செய்'. அதாவது நன்றியுள்ள ஒருவனுக்கு, உண்மையாகவே தேவைப்படுகிறவனுக்குச் செய்யப்பட வேண்டும்.
•ஒருவன் தீமை செய்து இருந்தால் அதை மறந்து விட வேண்டும். ஆனால் ஒருவர் நமக்குச் செய்த நன்மையைய் மறப்பது 'நன்றன்று' என்பது இவர் கருத்து.

குறள்:
உதவி வரைத்தன் றுதவி உதவி 
செய்யப்பட்டார் சால்பின் வரைத்து.
குறள் விளக்கம்: உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச் சிறப்படைவதில்லை. அந்த உதவியைய் பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்.

No comments:

Post a Comment