Friday, December 19, 2014

சபரிமலை ஐயப்பன் வரலாறு

பாற்கடலை கடைந்தபோது அசுரர்களை மயக்குவதற்காக திருமால் மோகினி வடிவம் எடுத்தார். அந்த வடிவைக்கண்டு பரவசம் அடைந்த சிவபெருமான் அவளை தழுவி நின்றார். அவ்வேளையில் சிவவிஷ்ணுவின் ஆற்றல்கள் அனைத்தும் ஒன்றாகி தர்மசாஸ்தா அவதரித்தார்.

அவரது இந்த பிறப்பிற்கு காரணம் இருந்தது. கரம்பன் என்ற அசுரனின் மகளான மகிஷி எருமைத்தலையுடன் பிறந்தாள். இவளது சகோதரன் மகிஷாசுரனை சண்டிகாதேவி கொன்றாள் என்பதற்காக அச்செயலுக்கு பழிக்கு பழி வாங்குவதற்கு விந்தியமலைக்கு சென்று தவமிருந்தாள். தன்னை யாராலும் அழிக்க முடியாத வரத்தை கேட்டாள்.

பிரம்மா மறுக்கவே, ஒரு ஆணுக்கும் மற்றொரு ஆணுக்கும் பிறக்கும் குழந்தையால்தான் தனக்கு அழிவு வரவேண்டும் என வேண்டிக்கொண்டாள். அந்த மகிஷியை அழிக்கவே, தர்மசாஸ்தாவின் அவதாரம் நிகழ்ந்தது. அழியா வரம் பெற்ற மகிஷி பூவுலகிற்கு வந்தாள். அவளை அழிக்கும் எண்ணம் கொண்ட சிவன் சுந்தரன் என்ற ஆண் மகிஷத்தை உருவாக்கினார்.

மகிஷி அவன்மீது காதல் கொண்டாள். அவர்கள் இணைந்து வாழ்ந்து வந்தனர். தர்மசாஸ்தா ஆரம்பத்தில் சிவனுடன் கயிலாயத்திலேயே வாழ்ந்தார். பின்னர் மகிஷியை அழிப்பதற்காக 12 ஆண்டுகள் மானிடனாக வாழ்வதற்கு பூவுலகிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அவ்வாறு பூவுலகில் அவர் பிறந்தநாளே மார்கழி மாதம் சனிக்கிழமை உத்திர நட்சத்திரத்தில் ஆகும். ஹரிஹரபுத்திரன் - மகாவிஷ்ணுவை தாயாகவும், மகேஸ்வரனை தந்தையாகவும் பெற்றார்.

திருமாலின் அவதாரமான கிருஷ்ண பகவான் உலக மக்களுக்காக அருளிய ஸ்ரீமத் பகவத்கீதையின் பதினெட்டு யோகங்களை பதினெட்டுப் படிகளாகக் கொண்டு அமர்ந்துள்ள ஐயப்பனின் சத்தியப் படிகளைக் கடந்து தம்மை வந்தடையும் பக்தர்களுக்கு திருவருள் புரிகின்றார் என்பதை குறிப்பதாகும்.

ஐயப்ப பக்தர்கள் மாலைக்கு மதிப்பளித்து ஒரு மண்டல காலம் விரத முறைகளை நெறியாகவும், முறையாகவும் கடைபிடித்து `தான்' என்னும் அகங்காரத்தை விட்டொழித்து இறைவனிடம் முழு நம்பிக்கை வைத்து, முழு சரணாகதி அடைந்து ஒரு முகமாக வழிபட்டால் இறைவனின் அருள் காடாட்சம் குறைவில்லாமல் கிடைக்கும்.

படிகள் எற ஏற அவர்கள் தன் வாழ்வில் உயர்ந்து கொண்டே இருப்பார்கள் என்பது பலரும் அனுபவித்த உண்மை. 

No comments:

Post a Comment