Thursday, December 18, 2014

அகல் விளக்கின் தொன்மை சிறப்பு

கார்த்திகை தீபத் திருவிழாவில்கோவில் களிலும், வீடுகளிலும் வரிசையாக அகல்விளக்குகளை ஏற்றி இறைவனை வழிபடுகிறோம். களிமண்ணால் செய்யப்பட்டு, வரிசையாக ஏற்றப்படும் அகல் விளக்குகள் தொன்மைச் சிறப்பு வாய்ந்தவை. மனிதன் நாகரீகம் முன்னேற்றம் அடைந்த புதிய கற்காலத்தில், ஓரிடத்தில் தங்கி குடியிருப்புகளை அமைத்துக் கொண்டு வாழத் தொடங்கினான்.

இக்காலத்தில் அவனுக்கு விளக்கின் அவசியம் தேவைப்படலாயிற்று. எனவே, கையால் ஈரமான களிமண்ணை சற்று குழியாக சிறு விளக்கு போன்று செய்து பயன்படுத்திக் கொண்டான். இந்த சிறிய மண் பாத்திரம், `அகல்' என்று அழைக்கப்பட்டது. அடுத்த வந்த இரும்பு காலத்தில், பெரிதும் முன்னேற்றம் அடைந்த நிலையில் சக்கரத்தில் யானைகள், சிறு விளக்குகள் செய்யத் தொடங்கினான்.

ஈரமான களிமண்ணில் செய்து பின்னர் அதை சூளையில் இட்டு செய்துகொள்ளும் திறனைப் பெற்று விளங்கினான் என்பதை தமிழகத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளின் மூலம் அறிய முடிகிறது. சங்க இலக்கியங்களான அகநானூறு, நற்றினை போன்றவை கார்த்திகை நாளில் அகல் விளக்குகள் வரிசையாக ஏற்றி வைத்திருந்ததைப் பற்றி குறிப்பிடுகின்றன.

இவை மலர்கள் அடுக்கடுக்காய் பூத்திருப்பது கார்த்திகை நாளில் மகளிர் ஏற்றி வைத்த விளக்குகள் போன்று உள்ளன என்று, அவ்வையார் ஒரு பாடலில் குறிப்பிடுகின்றார். கி.பி. 10 - 11ம் நூற்றாண்டுகளில் களிமண் அகல் விளக்குகளில் 4 திரிகள், 6 திரிகள், 8 திரிகள் போடும் அளவுக்கு செய்யப்பட்ட விளக்குகள் பழையாறை, தாராசுரம், திருவாமாத்தூர், போளுவாம்பட்டி போன்ற இடங்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்துள்ளன.

இத்தகைய விளக்குகளில் நடுப்பகுதி சற்று மேடாக, நீளமான நூல்திரி வைப்ப தற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது. அகல் விளக்குகள் களிமண்ணால் மட்டும் செய்யப்படவில்லை. திருச்சோற்றுத்துறை கோவிலுக்கு செம்பினால் ஆன 32 அகல் விளக்குகள் அளிக்கப்பட்டதை ஒரு கல்வெட்டினால் அறிய முடிகிறது.

திருவண்ணாமலை திருக்கோவிலில் கார்த்திகை திருநாளில் அகல் விளக்குகளை ஏற்ற, தானம் அளித்ததாக முதலாம் இராஜேந்திர சோழன் கால கல்வெட்டில் அறிய முடிகிறது. களிமண் அகல் விளக்குகளில் ஏற்றப்படும் தீபம் மிகச் சிறந்தது என ஆன்மிகப் பெரியோர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment