Thursday, December 11, 2014

மகாகவி சுப்பிரமணிய பாரதி

நம் நாடு, நம் தேசம் என்றே வாழ்ந்து எழுத்துகளாலும், பாடல்களாலும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிற மகத்தான மாமனிதர் பாரதியின் பிறந்த தினம் இன்று (டிசம்பர் 11,1882).
ஒரு சில நிகழ்வுகள் பார்ப்போம் :
ஒருமுறை ராஜாஜி வீட்டில் அண்ணல் காந்தியடிகள் தங்கி இருந்தபோது, அவரது அறைக்குள் தலைப் பாகையுடன் கோட்டும் அணிந்து நிமிர்ந்த நடையுடன் அண்ணலின் அருகில் சென்று அமர்ந்தார் பாரதி. “”இன்று மாலை திருவல்லிக்கேணி கடற்கரையில் சுதந்திரப் போராட்டப் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசப் போகிறேன். நீங்கள் தலைமை தாங்க வர முடியுமா?” என்று கேட்டார் பாரதி. “”இன்று எனக்கு வேறொரு இடத்தில் கூட்டம் இருக்கிறது. நாளை வேண்டுமானால் வருகிறேன்” என்றார் காந்தி.
“எனது நிகழ்ச்சியை உங்களுக்காக நான் மாற்றிக் கொள்ள முடியாது. நான் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு வெளியேறிவிட்டார் பாரதி.
கூட்டத்துக்கு வரச் சொன்ன அந்த வித்தியாசமான மனிதர் யாரென்று காந்தி, ராஜாஜியிடம் கேட்டபோது, அவர்தான் மகாகவி சுப்பிரமணிய பாரதி என்றாராம். வியப்பில் ஆழ்ந்த காந்தியடிகளோ, “”இந்த மாமனிதரை பத்திரமாகப் பாதுகாத்து வாருங்கள்” என்றாராம்.
இந்தியா முழுவதும் சுதந்திரப் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த நேரத்தில் புதுச்சேரியில் பாரதியாரும் அவரது மாணவர் பாரதிதாசனும் தங்கி இருந்தனர். இருவரும் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் பாரதத் தாய்க்கு ஒரு சிலை செய்ய வேண்டும் என்ற அவரது விருப்பத்தை பாரதிதாசனிடம் கூறியிருக்கிறார் பாரதி.
பாரதிதாசனும் ஒரு சிற்பியை வரவழைத்து பாரதத் தாய்க்கு சிலை அமைக்குமாறு கேட்டுக் கொண்டார். சிற்பி சிலை தயாரிக்கத் தொடங்கியபோதே அவருக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கிறது. சிலையை ஏழ்மையாக இருப்பது போல் எளிமையாகச் செய்வதா? அல்லது ஆடை ஆபரணங்களுடன் வசதியாக இருக்கும்படி செய்வதா? என்று கேட்டார் சிற்பி.
இதைக் கேட்ட பாரதிக்குக் கோபம் வந்துவிட்டது. “என் பாரதத் தாயை ஏழை என்று எப்படிச் சொல்லலாம்? எல்லாச் செல்வங்களும், வளங்களும் என் பாரதத்தாய்க்கு இருக்கத்தானே செய்கின்றன. தங்கம், வைரம், நெல், கோதுமை இவையெல்லாம் எங்கள் நாட்டில் விளையவே இல்லையா? என்றுமே வற்றாத ஜீவநதிகளும், ஆறுகளும் ஓடத்தானே செய்கின்றன. எனவே, என் பாரதத் தாயை மிகுந்த செல்வச் செழிப்போடும், ஆடை, ஆபரணங்களோடும் இருப்பது போலச் செய்யுங்கள்” என்று கர்ஜித்தாராம் பாரதி.
பாரதத் தாயின் மீது பாரதியார் வைத்திருந்த மதிப்பைக் கண்டு பாரதிதாசன் சிறிது நேரம் மெய்சிலிர்த்துப் போனார். இன்று நாம் காணும் பாரதத் தாய் பாரதியின் விருப்பப்படியே ஆடை, ஆபரணங்களோடு வடிவமைக்கப்பட்டுக் காட்சி தருகிறாள்.
வாசலில் வந்து நின்ற குடுகுடுப்பைக்காரன் உடுக்கையடித்து “நாட்டுக்கு நல்லகாலம் பொறக்குது” என குறி சொன்னதற்காக, தான் அணிந்திருந்த வேட்டியைக் கூட சிறிதும் யோசிக்காமல் அவிழ்த்துக் கொடுத்த வள்ளல்தான் பாரதி. “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?, தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்!, அச்சமில்லை, அச்சமில்லை என்பன போன்ற பல பாடல்களைப் பாடி, சோர்ந்து கிடந்த இளைஞர்களையும் எழுந்து உட்கார வைத்து சுதந்திர தாகத்தைத் தூண்டி அவர்களது மனங்களை உழுதவர் மகாகவி.
வறுமை, தான் வாழ்ந்த இறுதி நாட்கள் வரை கூடவே கைகோர்த்துக் கொண்டே வந்தபோதும்கூட சுதந்திரத்துக்காகவும் சமத்துவத்துக்காகவும் போராடத் தயங்காத மாமனிதன். கூனாதே, குனியாதே! என்று தன்னுடன் இருந்த இளைஞர்களைக் கூட வளைய விடாமல் இருந்து ஒரு ராணுவ வீரனைப் போல நடந்து வந்த புரட்சியாளன்.
“ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா” என்று பாப்பா பாடல்கள் மூலம் சின்னஞ்சிறு பிஞ்சுகளின் உள்ளங்களைக் கூடப் பாட்டால் உழுத விவசாயி.
ஒருமுறை சுதந்திரப் போராட்டத்துக்காக நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிவிட்டு மேடையிலிருந்து இறங்கினார் பாரதி. “”உங்கள் வீரம் செறிந்த உரைவீச்சு என்னை மிகவும் புத்துணர்ச்சி உடையவனாக்கி விட்டது. தங்களுக்கு ஏதேனும் பலகாரம் வாங்கித் தருகிறேன். உங்களுக்கு என்ன பலகாரம் வேண்டும்?” என்றார் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர். அதற்கு பாரதியோ, “”எனக்கு வீரப் பலகாரம்தான் வேண்டும்” என்றார்.
அது என்ன வீரப் பலகாரம்? இதுவரை அப்படி ஒன்றை நான் கேள்விப்பட்டதே இல்லையே! என்று குழம்பி அவரிடமே அதற்கான விளக்கத்தைக் கேட்டார். “”பஜ்ஜி, மெதுவடை, இட்லி இதெல்லாம் கோழைப் பலகாரங்கள்.
பக்கோடா, காராபூந்தி, முறுக்கு இதெல்லாம்தான் வீரப் பலகாரங்கள். வாய்க்குள் இவற்றைப் போட்டதும் “”நொறுக்கு, நொறுக்கு” என்றும் “”கடக்கு, முடக்கு” என்றும் பல்லுக்கு வீரமான வேலை கொடுக்கும். அதனால் தான் இவற்றை வீரப் பலகாரம் என்று சொன்னேன். வெள்ளைக்காரனை நம் நாட்டைவிட்டே ஓட, ஓட விரட்டுறதுக்கு வீரம் தானே அவசியம்” என்றாராம் பாரதி.

No comments:

Post a Comment