Sunday, December 28, 2014

நளன் கதையை கேட்டால் ஏழரை, அஷ்டம சனி விலகும்!

நளன் கதையை தொடர்ந்து கேட்டால், , ஏழரை, அஷ்டமம் என்று பல விதங்களில் மனிதர்களை பிடித்து ஆட்டிப்படைக்கும் சனி நம்மை விட்டு விலகும்’ என, வில்லிபாரத சொற்பொழிவில், திருச்சி கல்யாணராமன் கூறினார். ராம்நகர் கோதண்டராமர் கோவிலில் நடந்து வரும் மார்கழி மாத வில்லிபாரத சொற்பொழிவில், திருச்சி கல்யாணராமன் பேசியதாவது: தர்மபுத்திரர்களுக்கு, வியாச மகரிஷி நளசரித்திரம் சொன்னார். நளனை தமயந்தி மணந்து கொண்டதால், சனி பகவான் கோபித்துக்கொண்டு, ஏழரை ஆண்டுகள் நளனை பிடித்தார். இதனால், புஷ்கரனோடு சூதாடி அனைத்தையும் இழந்தான் நளன். சூதாட்டத்தில் மனைவியை, வைக்கக் கூறியபோது, ஆட்டத்தை நிறுத்து என்று நளன் கூறினார். வியாசர், தர்மபுத்திரனிடம், ’கதையை கேட்கிறாயா’ என்றார். அப்போது தருமர், ’நளனுக்கு பிடித்தது சனி; என்னை பிடித்தது சகுனி. அதனால் தான், திரவுபதியை வைத்து சூதாடினேன்; எல்லாவற்றையும் இழந்தேன்’ என்றார்.

நளன் தமயந்தியை, காட்டில் பிரிந்தான். தமயந்தியை காட்டில் வேடன் ஒருவன் துரத்தினான். தமயந்தி, அவளது கற்பினால் வேடனை தகனம் செய்தாள். நளனை கார்கோடகன் என்ற பாம்பு கடிக்க, குள்ள உருவமாக மாறினான். வாகுகன் என்ற பெயரில் அயோத்தியின் தேரோட்டியாக போனான். பிறகு தந்தை வாயிலாக நளனை கண்டுபிடிக்க, பின் தமயந்தியும், நளனும் ஒன்று கூடினர். அதன் பின் சூதாட்டத்தில் ஈடுபட்டு, மீண்டும் ஆட்சியை பிடித்தான். சனிபகவான் காட்சியளித்து, ’உனக்கு என்ன வேண்டும்?’ என, கேட்டார். ’நீங்கள் யாரை பிடித்திருக்கிறீர்களோ; அவர்கள், என்னுடைய கதையை முழுமையாக கேட்கவேண்டும். அப்போது, அவர்களை ஒன்றும் செய்யமாட்டேன் என்று வரம் கொடுங்கள்’ என்றார். சனியும், ’அப்படியே ஆகட்டும்’ என்று கூறினார். ஏழரை, அஷ்டமம் என, சனி பிடித்தவர்கள், நள சரித்திரம் கேட்டு பயனடைய வேண்டும். இவ்வாறு, திருச்சி கல்யாணராமன் பேசினார்.

No comments:

Post a Comment