Saturday, November 29, 2014

ஹோம குண்டத்தில் பெண்கள் எதையும் போடவே கூடாது

உங்கள் வீட்டில் நீங்கள் ஹோமம் செய்யும் போது, உங்கள் வீட்டில் உள்ள பெண்கள் ஹோமத்தில் எதையும் போடக்கூடாது. அப்படி செய்தால் ஹோம பலன் இல்லை என்பதை மறவாதீர்கள். ஹோமம் செய்வதற்கு முன்பே, அங்கு உள்ள பொருட்கள் அனைத்தையும் உங்கள் வீட்டில் உள்ள பெண்கள் முதலில் தொட்டுவிடவேண்டும்.அவ்வளவுதான். நேரிடையாக ஹோம குண்டத்தில் பெண்கள் எதையும் போடவே கூடாது. இது மிக முக்கியம்.
அதேபோல் ,ஹோமம் செய்தவுடன், அது அறுபதாம், அல்லது என்பதாம் கல்யாணமாக இருந்தாலும் சரியே, அல்லது வேறுவித ஹோமம் செய்தாலும் சரியே, ஹோமம் முடிந்தவுடன், உங்களுக்கு மங்கள ஸ்நானம் இருந்தால், உங்களை உட்காரவைத்து, ஹோமம் செய்த அய்யர்தான் உங்களுக்கு ஜலம் விடவேண்டும். அப்போதுதான் உங்களுக்கு பலிக்கும். எந்த காரனத்தைகொண்டும், நமது வீட்டில் உள்ளவர்கள் விட்டால் அது பிரயோசனமில்லை.
இந்த குளியலின் பொது, பெண், கணவனுக்கு இடது பக்கத்தில் உட்காரவேண்டும். வலது பக்கத்தில் உட்கார்ந்தாள் செல்லாது

Friday, November 28, 2014

ஸ்ரீமன் நாராயணன் கலியுகத்திலே எப்போது அவதாரம் பண்ணப் போகிறார்?

ஸ்ரீமன் நாராயணன் கலியுகத்திலே எப்போது அவதாரம் பண்ணப் போகிறார்?
குறையொன்றுமில்லை ----எட்டாம் பாகம்
முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார்
அர்ஜுனனிடம் சர்வக்ஞத்வத்தை எடுத்துச் சொன்ன பகவான் அதற்கும் மேல், தான் வந்து அவதரித்தது தன்னுடைய சங்கல்பத்தினாலே என்று அழகாக எடுத்துக் காட்டுகிறான்.
பகவான் மேலும் அர்ஜுனனிடம் சொல்கிறான்.
" பிறப்பற்றவனாய் உன்னை இருக்கச் செய்ய நான் பலவிதமாய் வந்து பிறக்கிறேன்.அவ்வாறு நான் பிறப்பதற்கு கர்மாக்கள் காரணமல்ல. தர்மமானது வாட்டமுறும் தருணத்தில், அதர்மம் தலை விரித்தாடும் தருணத்தில் நான் வந்து பிறக்கிறேன். என்னை நான் சிருஷ்டித்துக் கொள்கிறேன். "ஆத்மாநாம் ஸ்ருஜாமி".
இரண்டு பொருள் சொல்லலாம் இதற்கு. லோகத்திலே பகவானும் வந்து பிறக்கிறான். பகவானுடைய ஆத்ம ஞானிகளையும் பிறப்பிக்கச் செய்கிறான்.
" ஆச்சார்ய புருஷர்களான ஞானிகளை பிறப்பிக்கச் செய்து அவர்கள் மூலமாகவும் உலகத்தைத் திருத்திப் பணி கொள்கிறேன். நானும் வந்து பிறக்கிறேன். உயர்ந்த மகான்களையும் உலகத்தில் பிறப்பிக்கச் செய்கிறேன்" என்றான் பரமாத்மா.
" என்னுடைய அவதார பிரயோஜனம் என்ன என்று கேட்கிறாயா?
பரித்ராணாய சாதுநாம் 
விநாசாய ச துஷ்க்ருதாம் 
தர்ம சம்ஸ்தாப நார்த்தாய
சம்பவாமி யுகே யுகே
ரொம்பவும் அழகாகச் சொல்கிறான் பகவான். " அவதார பிரயோஜனம் என்ன என்றால், சாதுக்களை ரக்ஷிப்பதற்கும், துஷ்டர்களை சிக்ஷிப்பதற்கும் தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் யுகம்தோரும் நான் வந்து பிறக்கிறேன்" என்கிறான்.
நாம் கதை கேட்கிறோம். " த்ரேதா யுகத்திலே இப்படி நடந்தது. துவாபர யுகத்திலே இப்படி நடந்தது. க்ருத யுகத்திலே இப்படி நடந்தது. பகவான் அப்போ அவதாரம் பண்ணினான். இப்போ அவதாரம் பண்ணினான்" என்றெல்லாம் புராணங்களில் சொல்லிக் கேட்கிறோம்.
ஆனால், 'கலியுகம் பிறந்து ஐயாயிரம் வருஷங்களுக்கு மேல் ஆகி விட்டதே .. பகவான் இப்போது ஒரு அவதாரம் பண்ணக் கூடாதா! பரமாத்மா?' என்று ஒரு சந்தகம் நமக்கு எழுகிறது.
ஒரு ஹிரண்ய கசிபு இருக்கிற போது பரமாத்மா அவதாரம் பண்ணினானே; ஒரு ராவணன் இருக்கிற போது அவதாரம் பண்ணினானே; ஒரு சிசுபாலனை வாதம் பண்ண அவதாரம் பண்ணினானே.... தத்துல்யமாய் ( கண்ணுக்கு எதிரே) இப்போது நிறைய பேர் அசுரர்களாக உள்ளார்களே இந்த லோகத்திலே! ஒருத்தருக்காக அவதாரம் பண்ணினவன் இப்போது பல அசுரர்கள் இருக்கிற போது ஏன் அவதாரம் பண்ணவில்லை?' என்று சந்தேகம் வரும்.
அதனால் தான் கீதையிலே இந்த சந்தேகத்தைப் போக்குகிறான் பகவான்.
இதை விளக்கத்தான் அழகாக ஒரு 'ச' போட்டிருக்கிறான் இந்த ஸ்லோகத்திலே. 'விநாசாய ச துஷ்க்ருதாம்'.
அனுஷ்டுப் சந்தஸ்ஸில் ஸ்லோகம் என்றால் 32 அக்ஷரத்திலே எழுத வேண்டும். 31 அக்ஷரம் வந்துவிட்டது. ஒன்று வரவில்லை என்றால் ஒரு'ச' வைப் போட்டு விட்டால் சந்தஸ் பூர்த்தியாகிவிடும்.
ஆனால் பகவானுடைய வாக்கிலே ---கீதையிலே வந்த 'ச' காரம் சந்தஸ்ஸை நிரப்ப மட்டும் வந்ததல்ல. அதன் நோக்கம் உயர்ந்தது. அது எதைக் காட்டுகிறது என்றால் பகவானுடைய அவதாரத்துக்கு முக்கிய பிரயோஜனம் என்ன என்பதைக் காட்டுகிறது.
'துஷ்க்ருத் விநாசனம்' என்பது அவதாரத்தின் முக்கிய நோக்கமல்ல.
அவனுடைய அவதாரத்தின் முக்கிய நோக்கம் சாது சம்ரக்ஷணம் ( பரம பாகவதர்களைக் காப்பாற்றுதல்). துஷ்க்ருத் விநாசனம் என்பது அதன் ஊடே நடக்கக் கூடியது தான்....... இதைத் தான் அந்த 'ச' காரமானது காட்டுகிறது.
இப்போது பகவான் அவதாரம் பண்ணினானேயானால் அவனுக்கு நிறைய ஹிரண்ய கசிபுகள் கிடைப்பார்கள்; நிறைய ராவணர்கள் கிடைப்பார்கள்; நிறைய சிசுபாலர்கள் கிடைப்பார்கள் .
ஆனால் ஒரே ஒரு பிரஹலாதன் கிடைப்பானா? பகவான் அந்த ஒரு ப்ரஹலாதனுக்குத் தான் காத்துக் கொண்டிருக்கிறான்.
பிரஹலாதன் போல ஒரு நிஜ பக்தனுக்குக் கெடுதல் ஏற்பட்டால் இந்த க்ஷணமே பகவான் அவதாரம் பண்ணி விட சித்தமாயிருக்கிறான். அப்படிப் பட்ட நிஜ பக்தி உள்ளவன் ஒருத்தன் இருந்தால் கூட போறும் -- பகவான் அரை குலைய, தலை குலைய ஓடி வருவான். சாதுக்களைக் காப்பாற்றுவது தான் பகவானுக்கு முக்கியம் என்பதை இந்த 'பரித்ராணாய சாதூனாம்' என்கிற ஸ்லோகம் நிதர்சனமாக எடுத்துக் காட்டுகிற

பத்தாயிரத்து எட்டு ஹோமங்கள் உள்ளன

ஹோமங்கள், யாகங்கள், என நிறைய இருக்கிறது. ஆனால் நாம் ஒரே ஒரு கணபதி ஹோமத்தை மட்டும், அதுவும், சுமார் அரை மணிநேரம் செய்துவிட்டு, நாங்கள் ஹோமம் செய்துவிட்டோம் என சொல்கிறார்கள்.
பொதுவாக,
கணபதி ஹோமம் பத்து மணி நேரம் ஆகிறது.நிறைய மந்திரங்கள் உள்ளன.
சில பெரிய யாகங்கள், உத்திராயனத்தில் மட்டுமே செய்யப்படுகிறது. அவைகள்,
அஸ்வமேத யாகம்,
அதி ராத்ர சோம யாகம்
வாஜபேய யாகம் 
சௌதாமினி யாகம் 
ஐந்தர யாகம் 
ராஜசூய யாகம் 
தர்சபூர்ண யாகம் 
இதுபோல் ஆயிரக்கணக்கில் உள்ளது அன்பர்களே. இந்த இடம் போதாது சொல்லுவதற்கு.
எதற்காக நான் இதை இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், சிலபேர், கணபதி ஹோமன் நவகிரக ஹோமம்,இவைகளை மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் செய்துவிட்டு, எல்லாம் செய்துவிட்டதாக சொல்லிகொண்டிருக்கிறார்கள்.
பத்தாயிரத்து எட்டு ஹோமங்கள் உள்ளன. இவைகள் பொதுவாக,அம்பாளுக்கும், சிவனுக்கும்,முருகனுக்கும்,விஷ்ணுவுக்கும் சொல்லப்பட்டுள்ளன.
முக்கியமாக, முழுமுதற்கடவுளாகிய வினாயகப்பெருமானுக்கு மட்டும் ஐம்பத்தி ஒரு விதமான ஹோமங்கள் உள்ளன.
வாழ்நாள் நமக்கு போதாது.
உத்திராயனத்தில் செய்யும் ஹோமங்களில் ,அதி ராத்ர சோம யாகமும், வாஜபேய யாஹமும், மிகவும் முக்கியம் வாய்ந்தவை 

நமஸ்காரம்

நம் வீட்டில் இருப்பவர்களும் சரி, அல்லது வீட்டுக்கு வந்த விருந்தாளிகலானாலும் சரி,
நாம் முன்பே நமஸ்காரம் செய்துவிடவேண்டும். ஊருக்கு கிளம்பும்போது நமஸ்காரம் செய்தல் ஆகாது.
அதாவது வீட்டிலேயே இருப்பவர்களுக்கு ,ஊருக்கு செல்பவர்கள் நமஸ்காரம் செய்யலாம். ஆனால், வீட்டில் இருப்பவர்கள் , ஊருக்கு செல்பவர்களுக்கு, கிளம்பும்போது செய்யக்கூடாது

அகங்காரம் கொண்டவர்கள் துயரத்தைச் சந்தித்து தான் ஆக வேண்டும்.

தேனில் மூழ்கி, இறக்கும் வண்டைப் போல், ஆணவம் கொண்ட மனம், ‘தான்’ என்கிற அகங்கார மாயைக்குள் அகப்பட்டு, தன்னுடைய அழிவைத் தேடிக் கொள்கிறது. மேலும், ஆசை வயப்பட்ட மனமானது, பற்றுதலில் சிக்குண்டு, ஏமாற்றத்தை எதிர்கொள்ளும் போது, வன்மத்தையும், வெறுப்பையும் பிரதிபலிக்கிறது."
கிருபானந்த வாரியார் ஒரு சொற்பொழிவில் சொன்னது:
ஒரு நண்பருடன் அவர் தோட்டத்துப் பாதையில் சென்று கொண்டிருந்தேன். அப்போது, வழியில் தென்பட்ட நிலத்தில் பயிர்கள் நன்றாக விளைந்திருந்தது. அது, அவருடைய நிலம் என்பதால், ‘பயிர்கள் நன்றாக செழித்து வளர்ந்திருக்கிறதே…’ என்றேன். உடனே அவர், ‘நாசமாப் போக; மூணுமாசத்துக்கு முன்னால தான் இந்த நிலத்த வித்தேன்; இப்ப இது விளைஞ்சா என்ன, விளையாட்டி என்ன…’ என்றார் கடுப்புடன்.
அந்த நிலத்தை அவர் நல்ல விலைக்குத் தான் விற்றிருக்கிறார்; இருந்தாலும், நிலத்து மேல் இருந்த பற்று, கோபமாக வெளிப்பட்டு விட்டது, என்று கூறினார் கிருபானந்த வாரியார்.
அதே போன்று தான் அகங்காரம்! அறியாமையின் இருப்பிடமான இந்த அகங்காரமே மனிதனின் அழிவிற்கும் அவனுடைய கர்ம வினைக்கும் காரணமாக இருக்கிறது.
அகங்காரத்தால் அழிந்து போன தேவலோக பசுக்களின் கதை இது:
ஒரு சமயம்… சிவபெருமான் ஆழ்ந்த தவத்தில் இருந்தார்.
அப்போது, தேவலோக காராம் பசுக்கள், வெறிபிடித்து, ஆகாய மார்க்கமாக, ஹூங்காரம் இட்டப்படி போய் கொண்டிருந்தன. அவ்வாறு சென்று கொண்டிருந்த போது, கீழே தவத்தில் இருந்த சிவபெருமானைப் பார்த்து, ‘அடடே… சிவபெருமான் சடைமுடியோடு தவம் செய்து கொண்டிருக்கிறாரே… இவருக்கு யார் காராம் பசு பாலால் அபிஷேகம் செய்யப் போகின்றனர். நாம் செய்தால் தான் உண்டு…’ என்று, அகங்காரத்துடன் ஆகாய வீதியில் இருந்தபடியே சிவபெருமானின் திருமுடியில் பாலைப் பொழிந்தன.
சிவபெருமான் நிமிர்ந்து பார்த்தார்; காராம் பசுக்கள் அப்படியே இறந்து விழுந்தன.
காராம் பசுவின் பாலைக் கொண்டு, இறைவனுக்கு அபிஷேகம் செய்வது மிகவும் விசேஷம்.
அப்படி இருக்கையில், காராம் பசுக்களுக்கு ஏன் அந்த நிலை ஏற்பட்டது?
அகங்காரம் தான்! எவ்வளவு தான் உயர்ந்த நிலையில் இருந்தாலும், அகங்காரம் கொண்டவர்கள் துயரத்தைச் சந்தித்து தான் ஆக வேண்டும்.
பி.என்.பரசுராமன்
விதுர நீதி!:
துன்பமும், எதிர்ப்பும் கண்டு வருந்தாதவன், கவனமாகவும், கடுமையாகவும் உழைப்பவன், சூழ்நிலை கருதி, துன்பங்களை பொறுத்துக் கொள்பவன் எவனோ, அவனே, மனிதர்களில் முதன்மையானவன்; அவன், எல்லா எதிரிகளையும் வென்று விடுவான்

கோயிலுக்குள் ஓடாதீர்கள்......

கோயிலுக்குள் ஓடாதீர்கள்......
கோயில்களில் மூலவர் பிரார்த்தனை முடிந்ததும், பிரகார வலம் வந்து வணங்குவது வழக்கம். சிலர், வேலைக்குப் போக வேண்டும், ஊருக்கு அவசரமாக கிளம்ப வேண்டும் என்ற நோக்கத்தில், வேக வேகமாக கோயிலை வலம் வருவார்கள். சில நேரங்களில் ஓட்டப்பந்தயம் கூட நடப்பதுண்டு.
சிலர் ஒரு கையால் நமஸ்கரித்து விட்டு, அல்லது வாயருகே கையைக் கொண்டு வந்து முத்தம் கொடுப்பது போல் பாவனை செய்து விட்டு வேகமாக கோயிலைக் கடப்பார்கள். இவையெல்லாம் சாஸ்திரப்படி தவறு.
ஒரு நிறைமாத கர்ப்பிணி, எப்படி பவ்யமாக நடப்பாளோ, அந்தளவு வேகத்தில் தான் பிரகாரத்தை வலம் வர வேண்டும். அப்போது, அந்த தெய்வத்தின் நினைவு மட்டுமே இருக்க வேண்டும். கதை பேசிக்கொண்டும், சேஷ்டைகள் செய்தபடியும் கோயிலை வலம் வரக்கூடாது.
குழந்தைகள் சப்தம் செய்தால், அவர்களுக்கு பக்குவமாக எடுத்துச்சொல்லி, அமைதிப்படுத்த வேண்டும். இவ்வாறு வலம் வருவதால், முன் ஜென்ம பாவங்கள் எல்லாம் விலகி விடும்.

அம்பாள் இருக்க அஹம்பாவம் ஏன் ?

அம்பாள் இருக்க அஹம்பாவம் ஏன் ?
'''நாம் இதைச் சாதித்தோம், அதைச் சாதித்தோம்' என்று அகம்பாவப்பட கொஞ்சம்கூட நியாயம் இல்லை. நாம் எதையும் சாதிப்பதற்கான புத்தியோ, தேக பலமோ எங்கிருந்து வந்தது? இந்தப் பிரபஞ்ச காரியங்கள் அனைத்தையும் செய்கிற ஒரு மஹா சக்தியிடமிருந்தே நம்முடைய, சக்தி எல்லாம் வந்திருக்கிறது. அது இல்லாவிட்டால் நம்மால் ஒரு சுவாசம்கூட விடமுடியுமா? ஒருநாள், இத்தனை சாதித்ததாக எண்ணிக் கர்வப்படுகிற நம்மைவிட்டுச் சுவாசம் போய் விடுகிறது. அதைப் பிடித்து வைத்துக் கொள்கிற சாமர்த்தியம் நமக்குக் கொஞ்சம்கூட இல்லை. அப்போது நம் சக்தி எல்லாமும் சொப்பனம் மாதிரிப் போய்விடுகிறது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால்கூட, சக்தி சமுத்திரமாக இருக்கப்பட்ட அம்பாளின் ஒரு சிறு துளி அநுக்கிரகத்திலேயே நடக்கிற காரியங்களை, நம்முடையதாக நினைத்து அகம்பாவப்படுவது அசட்டுத் தனம்தான் என்று தெரியும். எத்தனைக்கெத்தனை இதை அநுபவத்தில் தெரிந்துகொண்டு அம்பாளுக்கு முன் ஒரு துரும்பு மாதிரி அடங்கிக் கிடக்கிறோமோ அத்தனைக்கத்தனை அவள் அநுக்கிரஹமும் அதிகம் கிடைக்கும்.''

பிராமணன் என்றால் யார்?


பிராமணன் என்றால் யார்?
சாம வேதம்
வச்சிர சுசிகோ உபநிடதம் 
9 சுலோகங்கலில் சொல்வதைக் கேட்க.
சுலோகம்1.
இந்த உபநிடதம் அஞ்ஞானத்தை அகற்றும் சாத்திரம்
சுலோகம் 2.
பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திர் என்று நான்கு வருணங்கள் உள்ளன.அவற்றுள் பிராமணன் என்றால் யார்? சீவனா?,தேகமா? சாதியா? ஞானமா? கருமமா? தருமமா?
சுலோகம் 3.
முதலில் சீவன் பிராமணன் என்றால் அஃது ஒவ்வாது.
சென்றதும் வரப் போவதுமான பல தேகங்களில் சீவன் ஒரே வடிவாயிருப்பதாலும், ஒருவனேயானாலும் கரும வசத்தால் பல உடல்கள் ஏற்படுவதாலும், எல்லா உடல்களிலும் சீவன் ஒரே மாதிரி இருப்பதாலும் சீவன் பிராமணன் இல்லை.
சுலோகம் 4.
உடல் பிராமணன் என்றால் அதுவும் பொருந்தாது. அனைத்து சாதியினருக்கும் உடல் ஒரே மாதிரி இருக்கிறது. உடலில் வெள்ளை, சிவப்பு, மஞ்சள், கருப்பு எனப் பல நிறங்கள் இருந்தாலும் உடல் பிராமணன் இல்லை.
சுலோகம் 5.
பிறப்பின் அடிப்படையில் வரும் சாதியினால் ஒருவன் பிராமணனா என்றால் அஃதும் இல்லை. உருசிய சிருங்கர், கௌசிகர், ஜாம்புகர், வால்மீகி, வியாசர், கௌதமர், வசிட்டர், அகத்தியர் போன்ற பல இருடிகள் பிராமண குலத்தில் பிறக்கவில்லை. ஆகையால் பிறப்பின் அடிப்படையில் ஒருவன் பிராமணன் இல்லை.
சுலோகம் 6.
அறிவால் பிராமணன் என்றால் அதுவும் பொருந்தாது, அனைத்து சாதியிலும் அறிவாளிகள் இருக்கிறார்கள். ஆகையால் அறிவைால் பிராமணன் என்பதும் இல்லை.
சுலோகம் 7.
கருமத்தால் பிராமணன் என்றால் அதுவும் இல்லை. எல்லா உயிர்களுக்கும் பிராரத்துவம், சஞ்சிதம், ஆகாமியம் என்ற கருமங்கள் பொதுவாகக் காணப்படுவதால், பூருவ கருமத்தின் விளைவால் சனங்கள் கிரியைகளைச் செய்கிறார்கள். ஆகையால் கருமத்தாலும் பிராமணர்கள் இல்லை.
சுலோகம் 8.
தானங்கள் வழங்குவதால் பிராமணர்கள் என்றால் அதுவும் இல்லை. சத்திரியர் முதலான பிற சாதியினரும் தானங்கள் செய்கிறார்கள்.
சுலோகம் 9.
அப்படியானால் யார் தான் பிராமணன்?
எவனொருவன் இரண்டற்ற சச்சிதானந்த சொரூபனாகவும், சாதி, குணம், கிரியை அற்றதும், பிறப்பு முதலான நிலைகள் இல்லாதவனாகவும், சத்தியம் ஞானம் அனந்தம் என்ற சொரூபமாகவும், தான் நிர்விகல்பமாகவும், எல்லா உயிர்களுக்குள்ளும் உள்ளே நின்று இயங்குவதாயும் சமம், தமம் உள்ளவன், விருப்பு வெறுப்பு அற்றவன், ஆசை மோகம் முதலியவை இல்லாமல் அகங்காரம் விட்டவன். இவனே பிராமணன். இவனே பிராமணன் என்பது சுருதி, சிமிருதி, புராண, இதிகாசங்களின் கருத்து. இதற்குப் புறம்பாகப் பிராமணத் தன்மை இல்லவே இல்லை.
சச்சிதானந்தமானதும் இரண்டற்றதுமான பிரமமாக ஆத்மாவை உணரவேண்டும்.

அழகும் கொடூரமும்.

அழகும் கொடூரமும்.
அவர் ஒரு ஓவியர், உலகிலேயே மனிதருள் ஒரு அழகான முகத்தையும், ஒரு கொடூரமான முகத்தையும் வரையவேண்டும் என்று ஆவல் கொண்டார். முதலில் அழகான முகம் வரைவதற்காக அலைந்து தேட ஆரம்பித்தார்.
கடும் உழைப்பிற்குப் பின் அவர் எதிர் பார்த்தபடி ஒரு அழகான ஐந்து வயது சிறுவனைக் கண்டார். அவர் அக்குழந்தையின் பெற்றோர்களின் அனுமதி பெற்று அக்குழந்தையை தத்ரூபமாக வரைந்து முடித்தார்.
பின்னர், கொடூர முகத்தை தேடிய அவருக்கு ஆண்டுகள் பல ஆகின. பின்னர், சிறைச் சாலைகள் தான் அதற்குத் தகுந்த இடம் என்று தோன்றியது. இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் ஒரு சிறையில் அவர் எதிர் பார்த்த கொடூரமான முகம் தெரிந்தது. அவருடைய களைப்பு மறைந்து உற்சாகம் தொற்றிக் கொண்டது. சிறை அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி அக்கொடியோனை வரைய ஆரம்பித்தார். வரையும்போது அவனுடைய ஒத்துழைப்புக்கிடைக்க அவனுடன் பேச்சுக் கொடுத்தார்.
அவன் ஊர்,பேர், பெற்றோர் பற்றிய விபரங்கள் கேட்டு, அவன் சொன்னபோது, அவர் கடும் அதிர்ச்சிக்குள்ளானார். அவன் வேறு யாருமில்லை. அழகான முகம் என்று எச்சிறுவனின் படத்தை வரைந்தாரோ, அதே சிறுவன், இன்று காலத்தின் கோலத்தில் மிகப் பெரிய குற்றவாளியாகக் கொடூரமாகக் காட்சி அளிக்கிறான்!
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அழகும் கொடூரமும் குடி கொண்டுள்ளன. அவன் சூழ்நிலைகள்தான் அவற்றில் ஒன்றை மிகைப்படுத்தியோ, குறைத்தோ காட்டி விடுகிறது.

நுறு வருடங்கள் வாழ முடிவதில்லயே .. ஏன் ..?விதுர நீதி :

நுறு வருடங்கள் வாழ முடிவதில்லயே .. ஏன் ..?
எவையெல்லாம் நம் ஆயுளை குறைகின்றன ...?
விதுர நீதி :
திருதராஷ்டிரன் விதுரரைப் பார்த்து, மனிதனுக்கு ஆயுள் நூறு வருடங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இருந்தும், முழுமையான ஆயுள் வரை யாரும் வாழ்வதாகத் தெரியவில்லையே...இது ஏன்..? என்று கேட்டார்.
அதற்கு விதுரர், ஆறு கூரிய வாள்கள் தான் மனிதனின் ஆயுளை அழிக்கின்றன - குறைகின்றன என்றார் ...
அவை:
அதிக கர்வம் கொள்ளுதல்
அதிகம் பேசுதல் 
தியாக மனப்பான்மை இல்லாமை 
கோபம்
சுய நலம் 
நண்பர்களுக்கு துரோகம் இழைப்பது 
போன்றவை என்றார்
விதுரர் கூறீய அந்த ஆறு வாள்கள் எப்படியிருக்கும் ? அதைப் போக்க என்ன செய்ய வேண்டும் ...?
1. தான் கெட்டிக்காரன், தான் செல்வந்தன், தான் கொடையாளி, தான் நல்லவன், பிறர் கெட்டவர்கள் என்று நினைப்பதால் கர்வம் அதிகரிக்கிறது. கர்வம் கொண்டவனைக் கடவுள் சீக்கிரம் அழித்து விடுவார். ஆகவே, கர்வம் கொள்ளாமலிருக்க வேண்டுமானால், தன் விஷயத்தில் குற்றங்களைப் பார்க்க வேண்டும். பிறர் விஷயத்தில் குணங்களைப் பார்க்க வேண்டும்.
2. அதிகம் பேசுகிறவன் வீண் விஷயங்களைப் பற்றிப் பேசி, வீண் வம்பை விலைக்கு வாங்குவான். அதனால்தான் பகவான் கீதையில் கூறுகிறார்; கடுமையில்லாததும், உண்மையானதும், பிரியமானதும், நன்மையைக் கருதியதுமான வார்த்தை எதுவோ, அது வாக்கினால் செய்யப்படும் தவம்.
3. எல்லாவற்றையும் நாம்தான் அனுபவிக்க வேண்டும் என்கிற ஆசையின் காரணமாகத்தான் நமக்குத் தியாக மனப்பான்மை ஏற்படுவதில்லை. நாம் இந்த உலகில் பிறந்ததே நமக்காக அல்ல, பிறருக்கு உதவுவதற்காகத்தான் என்று உணர்ந்தால் தியாக மனப்பான்மை ஏற்படும்.
4. கோபம்தான் மனிதனுடைய முதல் எதிரி. கோபத்தை வென்றவன்தான் யோகி, அவன்தான் உலகில் சுகப்படுவான். கோபத்துக்கு வசப்பட்டவன், தர்மம் எது? அதர்மம் எது? என்ற விவேகத்தை இழந்து பாவங்கள் செய்கிறான். என்ன தீமைகள் ஏற்பட்டாலும், யார் நம்மைக் கோபித்துக் கொண்டாலும் அவற்றைச் சகித்துக் கொள்ளக் கற்றுக் கொள்ள வேண்டும்.
5. சுயநலம்தான் எல்லாத் தீமைகளுக்கும் காரணம். சுயநலம் பாராட்டுகிறவர்கள், தங்கள் காரியம் ஆக வேண்டும் என்பதற்காக எந்தப் பாவத்தையும் செய்ய அஞ்ச மாட்டார்கள். பிறர் இன்புறுவதைக் கண்டு நாம் இன்புற வேண்டும். பிறர் துன்புறுவதைக் கண்டு நாம் துன்புற வேண்டும். இப்படிச் செய்தால் சுயநலம் போய்விடும்.
6. உலகில் நல்ல நண்பர்கள் கிடைப்பது அரிது. அப்படியிருக்க, அவர்களுக்குத் துரோகம் செய்வதைப் போன்ற அநியாயம் உண்டா? பகவான் கீதையில் கூறியிருப்பது போல, நாம் எல்லோருடனும் வெறுப்பின்றியும், நட்பு மனப்பான்மையுடனும், கருணையுடனும் பழக வேண்டும்.

Thursday, November 27, 2014

நமது கடமைகள் ....

நமது கடமைகள் ....
யஜுர் வேதம் --- தைத்திரீய உபநிஷதம் ..
கல்வி முடிந்து வெளியேறுகின்ற மாணவர்களுக்கு, பிரியும் வேளையில் ஆச்சாரியர் அளிக்கும் செய்திபோல் அமைகிறது இந்தப் பகுதி. குருகுலவாசம் முடிந்த பின் மாணவர்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான கடமைகள் இதில் கூறப்படுகின்றன. அவற்றை பார்ப்போம்...
வேதங்களைக் கற்பித்த பிறகு ஆச்சாரியார் மாணவர்களுக்கு சில அறநெறிகளைப் போதிக்கிறார்: உண்மை பேசுங்கள். தர்ம வழியில் செல்லுங்கள். கல்வியைக் கைவிடாதீர்கள்.ஆச்சாரியருக்கு விருப்பமான செல்வத்தைக் கொடுத்து அவரை மன நிறைவு பெறச் செய்யுங்கள். சந்ததிச் சங்கலியை வெட்டாதீர்கள். உண்மையில்ருந்து விலகாதீர்கள். தர்மத்திலிருந்து விலகாதீர்கள். நன்மை தருபவற்றிலிருந்து விலகாதீர்கள். நற்செயல்களிருந்து விலகாதீர்கள். கற்பதிலிருந்தும் கற்றுக்கொடுப்பதிருந்தும் விலகாதீர்கள். தேவர்களுக்கும் முன்னோர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளிருந்து விலகாதீர்கள்.
தாயைத் தெய்வமாகப் போற்றுங்கள். தந்தையைத் தெய்வமாகப் போற்றுங்கள். ஆசிரியரைத் தெய்வமாகப் போற்றுங்கள். விருந்தினரைத் தெய்வமாகப் போற்றுங்கள். தீமை விளைவிக்காத செயல்களையே நீங்கள் செய்ய வேண்டும். மற்றவற்றைச் செய்யக் கூடாது. நற்பண்புகளை வளர்க்கின்ற செயல்களையே நீங்கள் செய்ய வேண்டும். மற்றவற்றைச் செய்யக்கூடாது. நம்மைவிட உயர்ந்தவர்களோ தூயவர்களோ வரும்போது எழுந்து, அவர்கள் அமர இருக்கை அளித்து, அவர்களின் களைப்பைப் போக்கி உபசரிக்க வேண்டும். நம்பிக்கை மிக்க ஈடுபாட்டுடன் தானம் செய்ய வேண்டும்; ஏனோதானோ என்று தானம் செய்யக் கூடாது. வருமானத்திற்கு ஏற்ப தானம் செய்ய வேண்டும். பணிவுடனும் மரியாதையுடனும் தகுந்த அறிவுடனும் தானம் செய்ய வேண்டும்.
உங்கள் கடமை என்ன, குறிப்பிட்ட சூழ்நிலையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பவை பற்றி உங்களுக்குச் சந்தேகம் எழுமானால் சான்றோர்களைப் பின்பற்ற வேண்டும். ஆழ்ந்து சிந்திக்கின்ற, மன ஒருமைப்பாடு மிக்க, சுதந்திரமான, கோணல் புத்தி இல்லாத, நல்வழியில் நடக்கின்ற அந்த சான்றோர்கள் அந்த விஷயங்களில் எப்படி நடந்து கொண்டார்களோ அப்படி நீங்களும் செயல்படுங்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களை அணுகும் போதும், அதுபோலவே, சான்றோர்களைப் பின்பற்றுங்கள்.
இதுவே கட்டளை. இதுவே அறிவுரை. இதுவே வேத ரகசியம். இதுவே இறையானை. இவ்வாறு செய்ய வேண்டும். இவ்வாறே செய்யப்பட வேண்டும். மேலே குறிப்பிடபட்டவை அனைத்தும் வேதங்களை கற்பித்தவர்களுக்கு மட்டுமில்லாது அனைவரும் தங்கள் வாழ்வில் பின்பற்றபட வேண்டிவை.
இவ்வாறாக ஆச்சாரியார் சீடர்களுக்கு உபதேசித்தார்.

கடவுளின் பட்டியல்

கடவுளின் பட்டியல்.
நள்ளிரவு நேரம், அவன் ஆழமான தூக்கத்தில் இருந்தான். அப்போது அறைக்குள் ஏதோ சத்தம். மெல்லக் கண் திறந்து பார்த்தான். ஒரு அழகான தேவதை அவன் அருகில் அமர்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தது. அவன் அருகில் சென்றான். எதிரே விரித்து வைக்கப் பட்டிருந்த ஒரு தங்கப் புத்தகத்தில் மயிலிறகு கொண்டு எழுதிக் கொண்டிருந்த தேவதை நிமிர்ந்து பார்த்தது.
''என்ன எழுதிக் கொண்டிருக்கிறாய்?'' அவன் கேட்டான்.
''யாரெல்லாம் இறைவனை நேசிக்கிறார்கள் என்று பட்டியல் தயாரித்துக் கொண்டிருக்கிறேன்,'' என்றது தேவதை.
''அதில் என் பெயர் இருக்கிறதா?''என்று ஆவலுடன் கேட்டான்.
ஒன்றும் சொல்லாமல் உதட்டைப் பிதுக்கியது தேவதை.
அவன் மனம் உடைந்து விடவில்லை. கம்பீரமாக தேவதையைப் பார்த்து சொன்னான்,'' என்பெயரை சக மனிதர்களை நேசிப்பவர்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்.''
கண் சிமிட்டும் நேரத்தில் மறைந்து விட்டது தேவதை.
மறுநாள் இரவு. மறுபடியும் வந்தது தேவதை.
''தனது அன்புக்குப் பாத்திரமானவர்களின் பெயர்கள் உள்ள பட்டியல் ஒன்றைக் கடவுள் என்னிடம் கொடுத்தார். 
அதை நீ பார்க்கின்றாயா?'' என்று கேட்டது. அவன் ஒன்றும் பேசவில்லை. தேவதை அதுவாகப் பட்டியலைத் திறந்து காண்பித்தது.
அதில் முதலில் இருந்து அவன் பெயர்தான்,..!
மனித தன்மை அறிந்து கொள்ள முதல் கடவுள் தன்மை அறிந்து கொண்டதாக முத்திரை குத்திகொள்கிறான் மனிதன். அதனால்தான் தனது கடவுளுக்காக மனிதனையே அவன் கொலையும் செய்ய தயங்குவது இல்லை. அவன் சக மனிதர்களை நேசிப்பவன் கடவுளை நேசிப்பவனே என்பதை அறியாத மூடனே.

இந்து மதம் அற்புதம்

இந்து மதம் அற்புதம்
நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப் பட்டுள்ளன. உடலின் அநேக நரம்புகள் நெற்றிப் பொட்டின் வழியாகச் செல்கின்றன. ஆகவே நெற்றிப் பகுதி அதிக உஷ்ணமாகவே இருக்கும். நம் அடிவயிற்றில் நெருப்பு சக்தியிருக்கிறது. ஆனால் அந்த சூட்டின் தாக்கம் அதிகமாக உணரப் படுவது நெற்றிப் பொட்டில்தான். அதனால்தான் காய்ச்சல் என்றால் நெற்றியில் கைவைத்து உஷ்ணத்தின் தன்மையை அறிகிறோம். வாகனங்க ளின் எஞ்சின் தொடர்ந்து இயங்கும்போது அதிகம் சூடாகும். இந்த சூட்டைக் குறைத்து எஞ்சினுக்கு அதிக ஆயுளைக் கொடுப்பது ரேடியேட்டர். அதுபோல நமது மூளையையும், அதை இணைக்கும் நரம்புகளையும் குளிரச் செய்வதே நாம் நெற்றியில் பூசும் சந்தனக்குழம்பு செய்யும் தலையாய கடமை.
தலையில் ஏற்படும் வியர்வை, தலை மேல் விழும் பனித்துளிகள் மற்றும் தண்ணீர் போன்றவற்றின் சிறுபகுதி கெட்டிப்பட்டுத் தலைப்பகுதியில் தங்கிவிடும். இதனால் தலைவலி, தூக்கமின்மை ஏற்படும். இப்படிப்பட்ட கெட்ட நீரை உறிஞ்சி வெளியேற்றவே விபூதி தரிப்பதன் நோக்கம். நெற்றிப்பகுதி அதிக சூடாவதால் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிருமித் தொற்றைத் தடுக்கவே மஞ்சள்; அதிலிருந்து தயாரிக்கப்படும் குங்குமம். குங்குமம், சந்தனம், விபூதி ஆகிய மூன்றும் சிறந்த கிருமிநாசினிகள். அதை மறந்து பெண்கள் இன்று மஞ்சள், குங்குமத்தை ஒதுக்கி வருகின்றனர். பெரும்பாலான பெண்கள் ஸ்டிக்கர் பொட்டையே நம்பியிருக்கிறார்கள். ஸ்டிக்கர் பொட்டு உடல்நலனுக்குக் கெடுதியே செய்யும். அதில் தடவியிருக்கும் ஒட்டும்பசை ரசாயனத்தால் ஆனது. இது நெற்றியில் எரிச்சலை ஏற்படுத்தும். மற்றும் சூரிய ஒளி நெற்றிப் பொட்டில் விழுவதைத் தடுத்துவிடும். கண் மற்றும் புருவங்களுக்கு ஸ்டிக்கர் பொட்டு ஆபத்தானது.

நான் உன்னிடம் பிச்சை கேட்டுத் தான் வந்தேன். நீயோ இறைவனிடம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தாய்

ஆன்மீக கதை
மன்னர் ஒருவர் பக்திமான் என்பதால், துறவிகள் யார் வந்தாலும் விசாரணையின்றி தனது அரண்மனைக்குள் அனுமதிக்கப்படலாம் என உத்தரவிட்டிருந்தார். ஒருநாள் ஒரு துறவி வந்தார். அவர் ஏழைகளுக்கு தன்னாலான உதவி செய்பவர்.
தன்னைக் காண வரும் பணக்காரர்கள் அளிக்கும் நிதியைக் கொண்டு தகுதியான நபர்களுக்கு உதவி செய்து வந்தார். அவரிடம் உள்ள நிதி காலியாகி விட்டதால், மன்னரிடம் நிதிபெற்று வழங்கலாம் என நினைத்தார்.
உள்ளே சென்றதும், பிரார்த்தனை அறையில் மன்னர் இருப்பதை அறிந்து அங்கு சென்றார். மன்னர் கண்மூடி, கைநீட்டியபடியே, இறைவா! என் நாடு இன்னும் விரிவடைய வேண்டும்.
செல்வச்செழிப்புடன் வாழ போதுமான செல்வத்தை தந்தருள வேண்டும். அதைக் கொண்டு மக்களையும் நன்றாக வாழ வைக்கும் வல்லமையைத் தர வேண்டும், 
என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
மன்னர் பிரார்த்தனையில் மூழ்கியிருந்ததால், துறவி அவரை தொந்தரவு செய்யவில்லை.பிரார்த்தனை முடிந்து அவர் துறவியை நோக்கி வரவே, துறவி ஏதும் கேட்காமல் கிளம்பிவிட்டார்.
துறவியே! தங்களைக் காக்க வைத்ததால் கோபமா! பிரார்த்தனை அத்தியாவசியமானது என்பது தங்களுக்குத் தெரியாதா! என்றார். மன்னா! அது எனக்குத் தெரியும்.
நான் உன்னிடம் பிச்சை கேட்டுத் தான் வந்தேன். நீயோ இறைவனிடம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தாய். ஒரு பிச்சைக்காரனிடம், இன்னொரு பிச்சைக்காரன் யாசகம் கேட்கலாமா? அது மட்டுமல்ல! உனக்கு படியளப்பவன் இறைவன் என நீ முழுமையாக நம்புகிறாய்.
அவன் தானே எனக்கும் படியளக்க வேண்டும். எனவே, அவன் தந்தால் ஏற்றுக் கொள்கிறேன், என்று சொல்லிவிட்டு வேகமாகப் போய்விட்டார். இறைவன் யாருக்கு என்ன படியளக்கிறானோ, அதைக் கொண்டு நாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வைக்க வேண்டும்.

திருமணங்களில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்.?


திருமணங்களில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்.?
தற்போது திருமணங்களை பிரமாண்டமானதாக நடத்துவது தான் கௌரவமானது என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதுவரை பார்ப்பனர்களை அழைத்து திருமணச்சடங்குகளை செய்யாத சமுகங்கள் கூட யாககுண்டம் வளர்த்து, வேதங்கள் முழங்க திருமணம் செய்வதை பெருமையாக கருதுகிறார்கள்.பார்ப்பன‌ சடங்குகளின் படி நடைபெறும் திருமணங்களில் முக்கியச் சடங்கு “அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது”. இதில் அருந்ததி யார்? நாம் ஏன் அருந்ததியை பார்க்க வேண்டும்? என்ற கேள்விக்கு விடை தேடலாம்….
ஒரு காலத்தில் பூமியில் வாழ்ந்ததாக கூறப்படும் மிகச்சிறந்த “பிரம்மரிசிகள்”(முனிவர்கள்) ஏழுபேரும் (சப்த-_ஏழு) வானில் நட்சத்திரங்களாக ஒளி வீசுகிறார்கள். ஏழு நட்சத்திரங்களில் ஆறாவதாக இருப்பவர் (நட்சத்திரம்) வசிஷ்டர். இவரின் மனைவிதான் அருந்ததி. வசிஷ்டர் அருந்ததிக்குமான தனிச்சிறப்பு உண்டு. என்னவென்றால் மற்ற ரிஷிகள் சபலத்தால் ரம்பா, மேனகா, ஊர்வசி போன்ற வானதேவதைகளிடம் நிலை தடுமாறியவர்கள். இவர்களின் மனைவிமார்களும் தேவேந்திரனைப் பார்த்து தன்னிலை மறந்தவர்கள். இதில் வசிஷ்டரும், அருந்ததியும் விதிவிலக்கானவர்கள். எனவே அவர்கள் இணைந்தே இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து வாழ்க்கையில் இணைபிரியாது வாழவேண்டும் என்பது ஒரு புராணக்கதை, இனி உண்மை ….
இரவு நேரத்தில் வடக்கு வானில் மிக எளிதாக அடையாளம் காணக்கூடிய நட்சத்திரக் கூட்டங்களில் ஒன்று சப்தரிசி மண்டலம்”. இந்த நட்சத்திரத் தொகுதிக்கு (தொகுதி என்பது நம் கண்களுக்கு தொகுப்பாக தெரிகிறது என்பதால் மட்டுமே. உண்மையில் இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு தொலைவுகளில் உள்ளவை) ஒவ்வொரு நாட்டிலும் வேறுவேறு பெயர்கள் உண்டு. உலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறான வடிவங்களில் தெரிவதால் பெரும்கரண்டி, கலப்பை என மேலைநாடுகளில் அழைப்பர். இந்தியாவில் பொதுவாக இதனை சப்தரிசி (ஏழு முனிவர்கள்)என அழைக்கின்றனர். இதில் உள்ள ஏழு நட்சத்திரங்களுக்கும் இந்தியாவில் ஏழு முனிவர்களின் பெயர்கள் உண்டு. அவை கிரது, புலஹ, புலஸ்த்ய, அத்ரி, அங்கிரஸ், வசிஷிட, மரீசி என்பனவாகும்.
இந்த ஏழு நட்சத்திரங்களில் ஆறாவதாக உள்ள வசிஷ்ட நட்சத்திரத்தின் அருகில் சற்று கூர்ந்து கவனித்தால் மங்கலான வெளிச்சத்தில் தெரிவதுதான் அருந்ததி நட்சத்திரம். இவை இரண்டுக்குமான விஞ்ஞானப் பெயரும் உண்டு. வசிஷ்ட நட்சத்திரம் மிஸார் எனவும், அருந்ததி அல்கோர் எனவும் அழைக்கப்படுகிறது. வசிஷ்டரும், அருந்ததியும் இரட்டை நட்சத்திரங்கள் அல்ல. ஆனால் ஒவ்வொன்றும் தனித்தனியே இரட்டை நட்சத்திரங்கள். அதிலும் மிஸார் என அழைக்கப்படும் வசிஷ்ட நட்சத்திரம்தான் வானவியல் வரலாற்றில் முதலில் கண்டுபிடிக்கப்ட்ட இரட்டை நட்சத்திரம். 35,000 மில்லியன் மைல்கள் இடைவெளியில் மிஸார்_ எ,மிஸார்_பி என்ற இருநட்சத்திரங்களும் ஒற்றை ஒன்று சுற்றிக் கொள்கின்றன.
சப்தரிசி மண்டலத்தில் உள்ள ஏழு நட்சத்திரங்களும் ஒரே தன்மை உள்ளவை அல்ல. துபே, அல்கெய்ட், மிஸார் மேராக், ஃபெக்டா, மெக்ரஸ்,வரிசையில் ஒன்றைவிட ஒன்று மங்கலானது. துபே சற்று ஆரஞ்சு நிறம் கொண்ட 5000 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொண்டதாகும். மற்றவை வெண்மை நிறமுடைய 18,000 டிகிரிக்கும் மேலான வெப்பம் உள்ளவை. சப்தரிசி மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு நட்சத்திரமும் வெவ்வேறான திசைகளில் அதிவேகமாக பயணம் செய்கின்றன. அதனால் சப்தரிசி மண்டலம் தற்போதுள்ள தோற்றத்தில் ஒருலட்சம் ஆண்டுகளுக்கு முன்னிருந்ததில்லை. ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு பின் தற்போதைய தோற்றத்தில் இருக்கபோவதில்லை.(படம் 1ல் சப்தரிசிமண்டலத்தின் முன்று நிலைகளும் காட்டப்பட்டுள்ளது. முதல் நிலை 1லட்சம் ஆண்களுக்கு முந்தையது, நடுவில் இருப்பது தற்போதைய நிலை, அடுத்ததாக இருப்பது 1லட்சம் ஆண்டுகளுக்கு பின் ஏற்படப் போகும் நிலை)
சப்தரிசி மண்டலத்தின் முதல் ,இரண்டாவது நட்சத்திரமான துபே, மெராக்கும் காட்டிகள்” என அழைக்கப்படுகின்றன. ஏன் என்றால் இந்த இரு நட்சத்திரங்களிலிருந்து அமையும் கற்பனைக்கோடு தற்போதுள்ள துருவ நட்சத்திரமான போலாரிஸ்க்கை காட்டும். (இதற்கான விளக்கப் படம் 2)பூமியின் தற்சுழற்சி அச்சு தற்போது இதனை நோக்கித் தான் அமைந்துள்ளது. இதனால் மற்ற நட்சத்திரங்கள் பூமியின் நகர்வுக்கு ஏற்ப இடம்மாறினாலும் துருவநட்சத்திரம் ஒரே இடத்தில் தான் இருக்கும்.
அருந்ததி – ஒரு குறியீடு. முற்காலங்களில் அரசர்களுக்கு ஆயிரக்கணக்கான மனைவிகள் (தசரதனுக்கு 60 ஆயிரம் மனைவிகள்) இருந்தாக புராணங்கள் கதை கூறுகின்றன‌. இது தவிர போரின் வெற்றியாக பிறன்மனைவி கவர்தல்(எதிரியின் மனைவியை கவர்ந்து வருதல்) என்பதை சங்ககாலப் பாடல்களில் கூறப்படும் செய்தி. அருந்ததியைப் பார்க்கும் பழக்கம் எப்பொழுது ஏற்பட்டது என்பது தனியான ஆய்வுக்குரியது. ராமாயணத்தில் ராமனும், சீதையும் லட்சிய தம்பதிகளாக சொல்லப்படும் கதையும், சிலப்பதிகாரத்தில் முறைதவறிய கணவனை திருத்தி கணவனுக்காக மதுரையை எரித்த கண்ணகி, கோவலன் கதைகளும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நியதியை நிலைநாட்டுவதற்காக வரலாறு நெடுக தனிச்சொத்துடமை கருத்தாக்கத்தை உருவாக்க சொல்லப்பட்டு வரும் கதைகளாகும்.
திருமணத்தின் போது நல்லநாள், பிறந்த நட்சத்திரங்களின் பொருத்தம், நல்ல நேரம், ஜாதகப்பெருத்தம் பார்பதைவிட தம்பதிகளின் மனப்பொருத்தம், மருத்துவ ரீதியான சோதனைகள் பார்ப்பது தம்பதிகளின் எதிர்கால வாழ்க்கைக்கு நல்லது

குடியிருக்கும் வீட்டிற்குத்தான் வெள்ளையடிப்பார்கள். வாரியார் சுவாமிகள்

ஒரு சமயம் வாரியார் சுவாமிகள் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். காலையில் கண் விழித்து எழுந்தவர், கை,கால், முகம் கழுவித்துடைத்துக் கொண்டு வந்து, தன் இருக்கையில் அமர்ந்து, திருநீற்றைக் கை நிறைய எடுத்துத் தன் நெற்றி நிறையப் பூசிக் கொண்டார்.
அவர் எதிரில் அமர்ந்திருந்த இளைஞன், நக்கலாகக் கேட்டான். ‘‘பெரியவரே, ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?”.
வாரியார் சுவாமிகள் வேறு யாராவது பணிவாகத் திருநீறு பூசுவதைப்பற்றிக் கேட்டிருந்தால், திருநீற்றின் அருமை, பெருமைகளைப் பற்றி அற்புதமாக விளக்கம் கொடுத்திருப்பார்.
ஆனால் இந்த மாதிரி நக்கலடிக்கும் ஆசாமிகளுக்கு எப்படிப் பதில் சொல்வது? அல்லது எடுத்துச் சொன்னால்தான் விளங்கப் போகிறதா? கேட்டுக் கொள்ளப் போகிறார்களா?.
வாரியார் சுவாமிகள் அவனை பார்த்து, ‘‘தம்பி, குடியிருக்கும் வீட்டிற்குத்தான் வெள்ளையடிப்பார்கள். என் நெற்றிக்குள் இறையன்பு குடியிருக்கின்றது. நல்லுணர்வுகள் குடியிருக்கின்றன. ஆகவேதான் வெள்ளையடித்தேன். காலி வீட்டிற்கு யாரும் அடிக்கமாட்டார்கள்,’’ என்று அவன் மொழியிலேயே அவனுக்கு பதில் சொன்னார்.

கண்ணனின் அழிவிற்க்கு காரணமான அம்பு...

மகாபாரத நாயகர்கள் (பர்பரீக் (பார்பரிகா) )
கண்ணனின் அழிவிற்க்கு காரணமான அம்பு...
ஜரா என்ற வேடனின் (முற்பிறவியில் வானர வேந்தன் வாலி ஆவான்) கவனத்தைக் கவர்ந்து புத்தியை மறைத்து தனது இடது கால் பெருவிரல் அவனுக்கு ஒரு மானின் கண்ணாகத் தோற்றமளிக்கச் செய்து, அவன் எய்த பாணம் காலைச் சிதைத்து விட உயிர் துறந்தார் கிருஷ்ண பரமாத்மா என்பதை நாம் நன்கறிவோம். கிருஷ்ண பரமாத்மாவின் உடலில் பலவீனமாக உறுப்பு ஒன்று இருந்தது என்றால், அது கால் பாதப் பகுதிதான்.
ஒரு சமயம் துர்வாச மகரிஷி தேவகி நந்தனுக்கு வரம் ஒன்று அளித்திருந்தார், அதாவது, எந்த ஆயுதத்தாலும் அவரது உடலின் மீது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. கால் பகுதியைத் தவிர என்பதே அந்த வரம். அதுவே ஒருவிதத்தில் சாபமாகவும் மாறிவிட்டது. பலவீனமாக்கப்பட்ட அந்த இடது கால் பாண்டவர்களுக்குப் பலமாகவே அமைந்துவிட்டது என்பதைப் பின்வரும் சம்பவத்தின் மூலம் அறியலாம். குரு÷க்ஷத்திரப் போரின் விளைவை மாற்றியமைத்த பெருமை அதற்கு உண்டு! மானுடனாக அவதறித்தால் அதற்கே உரிய மரணநிலையைத் தேர்ந்தெடுத்து வைகுண்டம் ஏக விருப்பம் கொண்டவர் அல்லவோ அந்த மாலவன்! அதற்கும் அந்தக் கால் காரணமாகி விட்டது.
அந்தப் பின்னணி நிகழ்வைப் பார்ப்போம்... தனது ஞான திருஷ்டியால் சஞ்சயன் பாரதப் போரின் நிகழ்வுகளை மன்னன் திருதராஷ்டிரனுக்கு எடுத்துச் சொன்னான். சஞ்சயனைத் தவிர மேலும் இருவர் போர் நிலவரத்தைக் கண்காணித்தார்கள். அர்ஜுனனின் மகன் அரவான் போர் ஆரம்பிக்கும்முன் களப்பலி கொடுக்கப்பட்டான். மற்றொருவன், பீமனின் பேரனும், கடோத்கஜனின் புத்திரனுமான பர்பரீக், குருதட்சணையாகத் தன் சிரசையே ஸ்ரீகிருஷ்ணருக்குக் காணிக்கை ஆக்கியவன்!
இருவரது விருப்பத்தையும் நிறைவேற்றும் விதமாகப் போர்களத்தின் அருகிலிருந்த ஒரு குன்றின் மீது அவர்களின் தலையை இருத்தி, போர்க்கள நடப்புகளைப் பார்வையிட வைத்தான் மாதவன்! மாவீரன் பர்பரீக்குக்கும், கிருஷ்ணரின் மறைவுக்கும் இடையே உள்ள சம்பந்தத்தைத் தான் நாம் பார்க்கப் போகிறோம்.
பராக்கிரமசாலி கடோத்கஜனுக்கும், தேவி காமாக்யாவின் உபாசகியும், மந்திரத் தந்திரங்களில் கைதேர்ந்தவளும் நரகாசுரனின் சேனாதிபதி முரனின் புத்திரியுமான மவுர்விக்கும் பிறந்தவன் பர்பரீக் (பார்பரிகா) சிறு வயதிலிருந்தே ஒப்புயர்வற்ற சிறந்த வீரனாக விளங்க, அவனுக்கு அனைத்துப் போர் வித்தைகளையும் அவனது தாயாரும், பாட்டி இடும்பியும் கற்றுத் தந்தார்கள். இவன் பரமேஸ்வரரிடமிருந்து இலக்கைத் துல்லியமாகக் கணிக்கும் இணையில்லா மூன்று அம்புகளைப் பெற்றான். அக்னி தேவன் மூவுலகையும் வென்று வெற்றி வாகை சூடக் கூடிய ஒரு தனுசை அவனுக்கு அளித்தான். ஸ்ரீகிருஷ்ணரைத் தன் மானசீகக் குருவாக ஏற்று, அவரிடமும் சிட்சை பெற்றான். அவனது முதல் அம்பு அழிக்க வேண்டிய இலக்குகளைக் குறிப்பெடுத்துவிட்டு அவனிடமே திரும்பிவிடும். யாரையெல்லாம் காப்பாற்ற வேண்டுமோ அவர்களை அடையாளமிட்டுத் திரும்பும் இரண்டாவது அம்பு. குறியிடாதவர்களை மூன்றாவது அம்பு அழித்துவிட்டுத் திரும்பும். ஆதலால் போர்க்களத்தில் அவனொருவனே வெற்றி வீரனாக திகழ்வான்.
இப்படிப்பட்ட சக்தி வாய்ந்த பர்பரீக், தன் தாயாரிடம் ஒரு வாக்குறுதியையும் அளித்திருந்தான். அதன்பின் விளைவுகளை அறியாமலேயே போர்களத்தில் எந்தப் பக்கத்து சேனை வலுவிழந்து நிற்கிறதோ அந்தப் பக்கம் சேர்ந்து போரிடுவேன் எனச் சத்தியமளித்திருந்தான். அதன்படி பார்த்தால், மாறிமாறி இரு புறமும் நின்று போரிட வேண்டிய கட்டாயம் ஏற்படும்! முடிவில் அவன் ஒருவனே மிஞ்சியிருப்பான். கவுரவ சேனையை விட பாண்டவர்களின் சேனை பலம் குறைவாகவே இருந்ததால் பர்பரீக் பாண்டவர்கள் பக்கம் இருக்கவே தீர்மானித்தான். பாண்டவர்களைக் காப்பாற்ற விழைந்த கிருஷ்ணர் அவனை மடக்க யோசிக்காமலா இருப்பார். 
பர்பரீக்கைச் சோதிக்க எண்ணியவர் போல அவனை ஒரு அரசமரத்தின் அருகே அழைத்துச் சென்று அதன் இலைகளையெல்லாம் ஒன்றுவிடாமல் கட்டச் சொன்னார். சவாலை ஏற்றுக் கொண்ட பர்பரீக், சில வினாடி கண் மூடி தியானித்தான். இத்தருணத்தையே எதிர் நோக்கிய மாயக் கண்ணன் மரத்திலிருந்து ஒரே ஒரு இலையைப் பறித்துத் தன் இடது பாதத்தின் கீழ் மறைத்து வைத்துக் கொண்டான். பர்பரீக்கின் முதல் அம்பு மரத்திலுள்ள எல்லா இலைகளையும் கோர்த்துக் கொண்டு முடிவில் கிருஷ்ணரின் பாதங்களைச் சுற்றிச் சுற்றி வந்தது.
ஏதுமறியாததுபோல் ஏன் இப்படி? என்று கிருஷ்ணரும் வினவ பாதத்தின் கீழ் இலை ஒன்று இருக்கிறது. அதைக் குறியிடாமல் அம்பு திரும்பாது என்று பர்பரீக் கூற, கிருஷ்ணரும் தன் பாதத்தைச் சுற்றி தூக்கினார். அம்பும் கிருஷ்ணரின் காலில் ஊடேறிச் சென்று இலையைக் குறியிட்டது! மூன்றாவது அம்பு எல்லா இலைகளையும் கட்டாகக் கட்டிவிட்டது. அதனாலேயே கிருஷ்ணரின் இடது பாதம் பலவீனமாகி அவரது மறைவுக்கும் காரணமாகிவிட்டது! அவனைப் போர்களத்திலிருந்து விலக்கி வைக்க முடிவெடுத்தார். அவன் எடுத்த சபதம் அறிவுக்கு எவ்வளவு பொருத்தமாயிற்று என்பதை விளக்கினார். அதனை ஏற்ற பர்பரீக் குருவின் விருப்பப்படி முடிவெடுக்கத் தீர்மானித்தான். குரு தட்சணையாக அவனது சிரசையே கிருஷ்ணர் தானமாகக் கேட்க பர்பரீக்கும் சற்றும் தயங்காமல் தன் கழுத்தைச் சீவி காணிக்கையாக்கினான். அவனது விருப்பப்படி அவன் சிரசு குரு÷க்ஷத்திரத்தின் அருகிலுள்ள ஒரு குன்றின் மீது சகலவித மரியாதைகளும் செய்விக்கப்பட்டு அரவானுடன் சேர்ந்து பர்பரீக்கும் பாரதப்போரின் நிகழ்வுகளைக் கண்காணித்தான்.
மேலும் அவனது வேண்டுகோளின்படி ஷ்யாம் எனும் தன் மற்றொரு பெயராலேயே அவனைக் கலியுகத்தில் எல்லாராலும் போற்றி வணங்கிட கிருஷ்ணர் வரமளித்தார். கலியுகக் கண்ணனாக விளங்கும் ஷ்யாம் பர்பரீகாவை வழிபடுபவர்கள் அவன் பெயரை உச்சரித்த மாத்திரத்திலேயே நற்கதியடைவார்கள். விருப்பங்கள் நிறைவேறும். எதிர்கொள்ளும் சங்கடங்கள் தீரும் என்றும் அருளினார். மோட்சம் கிடைத்தது அவனுக்கு மட்டுமல்ல. ஸ்ரீகிருஷ்ணரை மாய்த்த வேடன் ஜராவுக்கும் வைகுண்டப் பிராப்தி கிடைத்தது.

செய்யும் தொழிலே தெய்வம்


செய்யும் தொழிலே தெய்வம். இவன் தெய்வ குற்றம் செய்ய மாட்டான்
திருச்செங்கோடு ஆசிரமத்தில் ஒரு நிகழ்ச்சி.
இராஜாஜி ஆசிரமத்தைச் சுற்றியுள்ள மக்களைக் கூப்பிடுகிறார். எல்லோரிடம் ஒரு சத்தியத்தைப் பெறுகிறார். நாளை முதல் குடிக்கமாட்டேன். இதுதான் அந்தச் சத்தியம்.
மது அரக்கனுக்கு எதிரானவர் ராஜாஜி. 40 குடும்பங்கள் சத்தியம் பண்ணிக் கொள்கின்றனர். மக்கள் கலைந்து அவரவர் வேலையை பார்க்கச் சென்று விடுகின்றனர்.
மறுநாள் காலை ஒரு பெண் ஆசிரமத்தை நோக்கி ஓடி வருகிறார். "எஜமான்.. என் கணவர்கிட்ட குடிக்கக் கூடாதுன்னு சத்தியம் வாங்கினீங்க. ஆனா ராத்திரியே குடிச்சுட்டு வந்து என்னை அடிச்சுப்புட்டாரு எஜமான்' முறையிட்டாள்.
"உன் கணவர் என்ன வேலை செய்கிறார்?' இது ராஜாஜி கேள்வி.
"செருப்பு தைக்கும் வேலை' இது அந்தப் பெண்மணி.
"சரி நாளைக்காலை குளிச்சுட்டு திருநீறு எல்லாம் பூசியபடி அவரை இங்கு அழைத்துவா நான் பேசிக் கொள்கிறேன்' இது ராஜாஜி.
காலைக் கதிரவன் பூமியை வெளிச்சமாக்கிக் கொண்டிருந்த நேரம். அந்தப் பெண்ணும், அவள் கணவரும் ஆசிரமம் வந்தார்கள்.
என்னப்பா குடிச்சு உன் மனைவியை அடிச்சையா? இந்தக் கேள்வியைக் கேட்டதும் தலையை ஆட்டி குற்றத்தை ஒப்புக் கொண்டு தலை கவிந்தான் அந்தத் தொழிலாளி.
"சரி வெளியில போய் உன் செருப்பை ஆசிரமத்திற்குள் எடுத்து வா' ராஜாஜி கட்டளையிட்டார்.
தூய்மையான ஆசிரமத்திற்குள் நம் காலில் போட்ட செருப்பா பதைபதைத்துப் போனான் தொழிலாளி. தயங்கினான்
. "நான் சொல்வதைச் செய்' - ராஜாஜியின் குரல் உயர்ந்தது.
சொன்னபடியே செருப்பைக் கைகளில் பிடித்தபடி நின்று இருந்தவனைப் பார்த்துத் தன் அருகில் உள்ள நாற்காலியில் வைக்கச் சொன்னார். பெரியவரின் வேண்டுகோளை ஏற்று அப்படியே செய்தான்.
"இந்தா பாருப்பா. இந்த செருப்பு மீது சத்யம் செய். இனி குடிக்கமாட்டேன் என்று' கண் கலங்கினான் அந்தத் தொழிலாளி. செருப்பின் மீது அவன் கை பட்டது சத்திய வார்த்தைகள் காற்றில் மிதந்து அங்குள்ளவர்களுக்கும் கேட்டது.
"செய்யும் தொழிலே தெய்வம். இவன் தெய்வ குற்றம் செய்ய மாட்டான். எனக்குத் தெரியும். இந்தப் பழக்கம் இன்றுடன் இவனை விட்டுப் போய்விடும். அழைத்துப் போ பெண்மணியே' என்றார் மூதறிஞர்.
அந்தத் தொழிலாளி தான் சாகும் வரை குடிக்கவில்லை

வாரியாரின் நகைச்சுவை

வாரியாரின் நகைச்சுவை
வாரியார் சுவாமிகள், ஒரு கோயிலில் திருவிளையாடல் புராணம் சொற்பொழிவு வழங்கிக் கொண்டு இருந்தார்.
வாரியார் சுவாமியின் சொற்பொழிவு கேட்பவர்கள் மிகக் கவனமாக கேட்பார்கள். ஏனெனில், அரங்கத்தில் அமர்ந்திருப்பவர்களிடம் திடீரென்று கேள்விகள் கேட்பார். எனவே, முன்வரிசையில் அமர்பவர்கள் மிக்க கவனத்துடன் இருப்பார்கள்.
சிவபெருமானின் பெருமைகளைச் சொன்னபடி இருந்த கிருபானந்தவாரியார் திடீரென்று ஒரு சிறுவனை எழுப்பி "தம்பி! தருமிக்கு பாட்டு எழுதிக் கொடுத்தது யாரு?" என்று கேட்டார்.
அப்போது திருவிளையாடல் படம் வெளிவந்திருந்த சமயம்.
அந்த பையன் சட்டென்று எழுந்து "சிவாஜி" என்றான்.
அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
வாரியார் அனைவரையும் நோக்கி "ஏன் சிரிக்கிறீங்க? அந்தப் பையன் சரியாத்தான் சொல்லியிருக்கான்"
"நீங்க நேருவை நேருஜி -ன்னு சொல்றீங்க, காந்தியை காந்திஜி -ன்னு சொல்றீங்க, அதைப் போல்தான் இந்தப் பையன் சிவாவை சிவாஜி-ன்னு சொன்னான், வடக்கே ஒருத்தரை உயர்வா மரியாதையாய் அழைக்க 'ஜி' சேர்ப்பது வழக்கம் , அந்த அர்த்தத்தில் சிவாஜின்னு சொல்லி இருக்கான் " என்றாரே பார்க்கலாம்.
கூட்டம் வாரியாரின் நகைச்சுவைத் திறமை கண்டு வழக்கம் போல் அதிசயித்து நின்றது

சிதை கொடியதா! சிந்தை கொடியதா!

இதை விட இது கொடுமை
சீடர் கேட்டார்: சிதை கொடியதா! சிந்தை கொடியதா! வேதகுரு சொன்னார்: சிதையை விட சிந்தையே கொடியது. "சிதை உயிரற்ற உடலைத் தான் எரிக்கும். உணர்ச்சியற்ற உடலை எரிப்பதால், அதற்கு என்ன சிரமம் வந்து விடப்போகிறது! ஆனால், சிந்தை நடந்தவற்றையும், நடக்கப் போகிறவற்றையும் எண்ணி எண்ணி உயிருடன் உடலை எரிக்கிறது. மனதைக் காயப்படுத்துகிறது. "அவன் எனக்கு செய்த துரோகத்தை நினைத்தால் வயிறு எரிகிறதே! "என் வயிறு எரியும்படியாக அவன் நடந்து கொள்கிறானே! "உடம்பெல்லாம் பற்றி எரியும்படி நடந்து கொள்கிறானே! என்று மனிதர்கள் பல சந்தர்ப்பங்களில் ஆதங்கத்தைக் கொட்டுகிறார்கள். வேதத்திலேயே சிதையை விட சிந்தை தான் கொடியது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் நல்ல சிந்தனைகள் மட்டும் மனதில் பிறக்கட்டும்.

எத்தனை கடவுள்கள் .


எத்தனை கடவுள்கள் .
மதபோதகர் ஒருவர் அந்த ஊர் மக்கள் அறிந்திருந்த பல கடவுள்கள் பற்றிப் உபதேசித்தார். மக்கள் இந்தக் கடவுள்கள் எல்லாம் தங்களோடு வாழ்வதாக நம்பினார்கள்.
சில நாட்கள் கழித்து அதே ஊரில் ஒரு மனிதன் வந்து கடவுள் இல்லவே இல்லை என்று வாதிட்டான். கேட்டவர்களில் பலருக்கு மகிழ்ச்சி. ஏனெனில் அவர்கள் எங்கே, தாங்கள் செய்த தவறுகளுக்குக் கடவுள் தண்டிப்பாரோ என்று அச்சம் கொண்டவர்கள். கடவுள் இல்லை என்று சொன்னதும் அவர்களுக்கு நிம்மதி.
இன்னும் சில நாட்கள் கழிந்தன. புதிதாக ஒரு மனிதன் வந்து, ஒரே ஒரு கடவுள்தான் உண்டு, என்று தீவிரமாகப் பேசினான். இதைக் கேட்டவர்களுக்கு ஏமாற்றமும் அச்சமும் ஏற்பட்டது. பல கடவுள் இருந்தால் ஒருவர் இல்லாவிடினும் ஒருவர் தங்கள் தவறுகளை மன்னிக்க வாய்ப்புண்டு. ஒரே கடவுள் என்றால் அவர் எப்படிப்பட்டவர் என்று தெரியாது. தாங்கள் செய்யும் தவறுகளுக்கு கோபப்படுவாரா மன்னிப்பாரா என்று அறிய முடியாமல் கவலைப்பட்டார்கள்.
அடுத்து வந்த வேறு ஒருவன்,''கடவுள் மூன்று பேர் உண்டு. அவர் மூவருக்கும் கருணை வடிவான ஒரு அன்னை உண்டு,'' என்று சொன்னான். இப்போது ஊர் மக்கள் திருப்தி அடைந்தனர்.கடவுள் மூவர் என்பதால், நாம் செய்தது பாவமா, இல்லையா என்று உறுதியான முடிவுக்கு அவர்களால் வர இயலாது என்றும் அவர்கள் அப்படியே பாவம் என்று முடிவு செய்தாலும் கருணை வடிவான தாய் மன்னித்து விடுவாள் என்றும் எண்ணினர் .
அந்த ஊர் மக்கள் இன்று வரை மொத்தம் எத்தனை கடவுள்கள் என்பதில் ஒரு முடிவுக்கு வர முடியாமல் இருக்கிறார்கள் என்று கதை முடிவுபெறுகிறது.
இப்படிதான் பலர் இன்று ஒவ்வொருதரின் கேட்பார் சொல் கேட்டு கற்பனை கடவுள் உலகில் வாழ்கிறார்கள். நீங்களாக தியானவழியில் தேடி விடைகான வேண்டும். இல்லாவிடில் கற்பனைகளே சிறகு விரித்து சென்று கொண்டு இருக்கும்.

Wednesday, November 26, 2014

அறுபதாம் கல்யாணம் நடத்துவது ஏன்?

அறுபதாம் கல்யாணம் நடத்துவது ஏன்?
 
கணவருக்கு அறுபது வயது பூர்த்தியானதும் மீண்டும் மணவிழா நடத்தி இணைவதே அறுபதாம் கல்யாணம்.  இதை சஷ்டியப்தபூர்த்தி, மணிவிழா என்றும் குறிப்பிடுவர். இதற்கு ஒரு தத்துவப்பின்னணி உண்டு. உலகவாழ்வில் ஈடுபட்டிருக்கும் மனிதன் ஆசாபாசங்களை ஏற்று அனுபவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறான். அவனுடைய அறுபதாம் வயது வாழ்வின் திருப்புமுனையாக அமைகிறது. இளமையில் செய்த திருமணத்தின் அடிப்படையில் குடும்பத்தைப் பேணுதல், பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குதல் போன்ற இல்லறக்கடமைகள் நிறைவேறுகின்றன. அதன்பின் பிள்ளை மற்றும் உறவுகளையும், வாழ்வியல் இன்பங்களையும் சுதந்திரமாக விடுத்து, கடவுளை முழுமையாகச் சரணடைய வேண்டும். இந்த ஆன்மிகக் கடமையை நினைவுபடுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

இந்த வாழ்வில் நான் ஆனந்தமாக உள்ளேன் கெடுத்து விடாதே”

ஒரு குரு நிறைந்த சீடர்களுடன் மிக உயர்ந்த நிலையில் இருந்து வந்தார். ஒரு முறை அவர் தனது மறுபிறப்பின் தன்மையை காண முடிவு செய்து ஒரு நதிக்கரையில் அமர்ந்து தவமேற்கொண்டார்.
தவத்தின் பயனாக மறுபிறப்பில் தான் ஒரு பன்றியாக பிறப்பெடுப்பதை அறிந்தார், மிக உயர்ந்த நிலையில் உள்ள நாம் முன்வினை காரணமாக இப்படி ஒரு பிறப்பை எடுத்து சில காலம் வாழும் நிலை வந்ததை அறிந்து மிகவும் மனவேதனை அடைந்தார்.
தனது சீடர்களில் ப்ரியமானவனை அழைத்து தன் நிலையை சொல்லி அவன் கையில் ஒரு வாளைக் கொடுத்து இப்போதே புறப்படு, இன்னும் ஐந்து வருடங்களில் இந்த ஊரில் நான் பன்றியாக பிறந்திருப்பேன், என்னை கண்டவுடன் அந்த பன்றியுருவத்தின் நெற்றியில் என் உருவம் உனக்கு மட்டும் தெரியும் கண்டவுடன் “என்னை வெட்டிவிடு” என்று மிக உருக்கமாக அவனிடம் கேட்டுக்கொண்டார். அதனை கேட்ட சீடனும் சரி என்று சொல்லி புறப்பட்டு போனான்.
கால் நடையாகத்தானே போகவேண்டும், சுற்றி அலைந்து குருநாதர் சொன்ன ஊரை வந்து சேர்ந்தான் சீடன். அந்த ஊரில் உள்ள பன்றிகளை ஒவ்வொன்றாக நெற்றியை பார்த்தவாறே அலைந்தான். ஆனால் அந்த பன்றியை காணவில்லை.
அந்த ஊர்க்காரர்களிடம் இங்கே பன்றிகள் எங்கே அதிகம் இருக்கும் என கேட்டான், அவர்கள் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு ஊரின் எல்லை தாண்டி ஒரு மலக்குவியல் உள்ள இடம் உண்டு, அங்கே நிறைய இருக்கும் ஆனால் அங்கே போகமுடியாது. துர்நாற்றம் வீசும் என்றார்கள். சரி என்று சொல்லிவிட்டு அந்த இடம் நோக்கி நடந்தான் சீடன்.
நெருங்கநெருங்கவே இந்த இடம் இருப்பது தெரிந்துவிட்டது சீடனுக்கு. அந்த அளவு துர்நாற்றம். மூக்கை பிடித்துக்கொண்டு குருநாதரை தேடினான். ஒரு இடத்தில் மெகாசைஸ் பன்றி ஒன்று தனது குட்டிகளுடன் ஒரு பெரிய மலக்குழியில் படுத்து விளையாடிக் கொண்டிருந்தது. அருகில் சென்று பார்த்தான் அதன் நெற்றியில் குருநாதர் உருவம் தோன்றி மறைந்தது.
உடனே வாளை உருவி குருவே என்று கூவியபடி பாய்ந்தான். சடாரென்று திரும்பிய அந்த பன்றி ஒரு நொடியில் அவன் கையை எட்டிப்பிடித்து “சீடா இந்த வாழ்வில் நான் ஆனந்தமாக உள்ளேன் கெடுத்து விடாதே” என்று கெஞ்சியது. விக்கித்து நின்றான் சீடன்

ஹநுமாரின் பன்னிரண்டு நாமாக்களை கொண்ட ஸ்தோத்திரங்கள்

ஹநுமாரின் பன்னிரண்டு நாமாக்களை கொண்ட ஸ்தோத்திரங்கள் இரண்டுள்ளன.
இந்தப் பன்னிரண்டு நாமாக்கள் அடங்கிய ஸ்லோகத்தை இரவில் தூங்கப் போகும்போதும், காலையில் எழுந்த உடனும் ராமதூத ஹநுமாரை தியானித்து சொல்வதால் எவற்றிலும் பயமற்று செயல்புரிந்து வெற்றியடைவோம்.
ஹநுமான் அஞ்ஜநாஸூநு: வாயுபுத்ரோ மஹாபல: |
ராமேஷ்ட: பால்குந-ஸக: பிங்காக்ஷோsமிதவிக்ரம: ||
உததிக்ரமண: சைவ ஸீதாசோக விநாசன: |
லக்ஷ்மண: ப்ராணததா தசக்ரீவஸ்ய தர்பஹா ||
ஏவம் த்வாச நாமாநி ராமதூதஸ்ய: படேத் |
ஸ்வாபகாலே ப்ரபோதேச நிர்பயோ விஜயீ பவேத்
இரண்டாவது;
ஸர்வாரிஷ்ட-நிவாரகம் சு'ப'கரம் பிங்காக்ஷமக்ஷாபஹம்
ஸீதாந்வேஷணதத்பரம் கபிவரம் கோடீந்து-ஸூர்யப்ரபம் |
லங்காத்வீப-ப'யங்கரம் ஸகலதம் ஸுக்ரீவ-ஸம்மாநிதம்
தேவேந்த்ராதி-ஸமஸ்ததேவ-விநுதம் காகுத்ஸ்த-தூதம் பஜே ||
ஏவம் த்வாச நாமாநி ராமதூதஸ்ய: படேத் |
ஸ்வாபகாலே ப்ரபோதேச நிர்பயோ விஜயீ பவேத்
வாயுசுத:
மாருதி ராய வானர காயா நமிதோ மீ பாயா ஸ்ரீராமா சே பஜன கரீதோ ஹேமஜ குணகாயா!

உங்கள் கைரேகை என்ன சொல்கிறது?


உங்கள் கைரேகை என்ன சொல்கிறது?
குழந்தை பாக்கியம் யாருக்கு எவ்வாறு அமையும் என்பதை கைரேகை கொண்டும் கணிக்கலாம். மேலே படத்தில் உள்ளது போன்று, சதைப்பற்றுடன் திகழும் செவ்வாய் மேடு சந்திரமேடு நோக்கி விரிவடைய... செவ்வாய் மேட்டில் ஆழமான வெட்டு ரேகை அமைந்து, திருமண ரேகை மிகவும் மெலிந்து, அதில் குழந்தை ரேகைகள் இல்லையெனில், அந்தப் பெண்ணுக்கு தைராய்டு சுரப்பி கோளாறு காரணமாக குழந்தைப் பிறப்பு தள்ளிப்போகும்.
* ராகு பகுதியில் அநேக குறுக்குக் கோடுகள் மற்றும் தொங்கு ரேகைகள் காணப்பட்டு, சந்திர மேடு கங்கண ரேகையை நோக்கி விரிந்து வீங்கியதுபோல் திகழ... திருமண ரேகை பலவீனமாகவும், ஆயுள் ரேகையிலும் தொங்கு ரேகை காணப்பட்டால், கடுமையான வயிற்று வலி இருக்கும். அதீத உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்றுவலி கருச் சிதைவுக்கும் காரணமாகிவிடும்.
இவர்கள் திருமண ரேகை வலுவாக உள்ள காலத்தை அறிந்து, உரிய சிகிச்சை பெறுவதுடன், ராகு-கேது பரிகார ஸதலங்களுக்குச் சென்று வழிபாடு செய்யலாம். அத்துடன், கருப்பை ஆரோக்கியத்துக்கு உளுந்து, கொள்ளு ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால், குழந்தை பாக்கியம் பெற இயலும்.
உயிரணு எண்ணிக்கைக் குறைவினாலும் குழந்தை பாக்கியம் தடைப்படும். இந்த நிலையைச் சுட்டிக்காட்டும் கைரேகை அமைப்பை அறிவோம்.
* குரு மேடு தட்டையாகவும் சுருங்கியும் திகழ, அந்த மேட்டில் குறுக்குக் கோடுகள் காணப்படும்.
* சுக்கிரமேடும் சந்திர மேடும் ஒடுங்கி, கங்கண ரேகை பாகத்தை நெருக்கி உப்பியதைப்போன்று காணப்படும்.
* இருதய ரேகை சனி மேட்டினை அடைந்து, திருமண ரேகை பலவீனமாகக் காணப்படும். இப்படியான ரேகை அமைப்புடைய ஆண்களுக்கு உயிரணு உற்பத்தியில் பாதிப்புகள் ஏற்படும். போதிய எண்ணிக்கையில் உயிரணுக்கள் இருக்காது. மேலும் உயிரணுக்கள் ஆரோக்கியக் குறைவுடனும் இருக்க வாய்ப்பு உண்டு.
இவர்கள், அனுதினமும் குரு காயத்ரீ மந்திரம் சொல்லி பிரார்த்திப்பதுடன், குரு பரிகார திருத்தலத்துக்குச் சென்று குருபகவானை வழிபடலாம். உயிரணுக்களின் உற்பத்தி எண்ணிக்கை அதிகரிப்பதற்குத் தேவையான இயற்கை உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
உணவால் உடலையும், வழிபாடுகளால் உள்ளத்தையும் ஆரோக்கியமாக்கிக் கொள்ள, பலமான திருமண ரேகை அமையும் வயதில் குழந்தை பாக்கியம் வாய்க்கும்

அன்பு இல்லாத உனக்கு ஆண்டவன் எப்படி குழந்தை வரம் தருவார்?

நல்ல மனசு வேணும்!
விதைக்காமலே அறுவடை செய்ய வேண்டும். மூலதனம் போடாமல் முதலாளியாக வேண்டும். உழைக்காமலே உயர வேண்டும் என்று விரும்பும் காலம்... இது இன்று நேற்றல்ல.. எந்தக் காலத்திற்கும் பொருந்துவதாக அமைந்திருக்கிறது. இதைப் பற்றி உத்தமர் ஒருவர் பாடம் நடத்துகிறார். அந்த வகுப்பிற்குப் போகலாம் வாருங்கள்! வேதத்தில் கரை கண்டவர் சிதம்பர தீட்சிதர். தான் பிறந்ததே பிறர் மீது அன்பு செலுத்தி அவர்களின் துயர் தீர்ப்பது தான் என்று வாழ்ந்தவர். அல்லல் பட்ட அனைவரும் அவர் துணை நாடினர். அவரும் தக்கபரிகாரம் சொல்லி தீர்த்து வந்தார். ஒருநாள்... பெண் ஒருத்தி அவரிடம் வந்தாள். சுவாமி! மணமான எனக்கு மழலைச் செல்வம் வாய்க்கவில்லை. தக்க வழிகாட்டி ஆசீர்வாதம் செய்யுங்கள்! என வேண்டினாள். தீட்சிதர் கை நிறைய கொத்துக் கடலையைக் கொடுத்து,அம்மா! கொஞ்சநேரம் ஆகட்டும். நான் கூப்பிடும் வரை அந்தக் கதவு அருகில் உட்கார். என்றார். அவளும் அப்படியே அமர்ந்து கடலையை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தை அவளிடம் வந்து, எனக்கு கொஞ்சம் கொடேன், என்று கை நீட்டியது. ஆனால், அவளோ, மாட்டேன். உனக்கு கொடுத்தால் மற்ற குழந்தைகளும் கேட்கும். போய்விடு, என்று விரட்டி விட்டாள். இதைக் கவனித்த தீட்சிதர் அவளைக் கூப்பிட்டார். அவளும் வேகமாக எழுந்து சென்றாள். அவளிடம், உனக்கு குழந்தையே பிறக்காது, என்றார் தீட்சிதர். மேலும்,என்ன மனசு உனக்கு. இனாமாகப் பெற்ற கடலையில் இருந்து ஒரு குழந்தைக்கு கொஞ்சம் கூட கொடுக்க மனமில்லையே! அன்பு இல்லாத உனக்கு ஆண்டவன் எப்படி குழந்தை வரம் தருவார்? என்றார் தீட்சிதர். அவள் தலைகுனிந்து நின்றாள். அன்பு செலுத்த தெரியாதவர் கடவுளிடம் அன்பை எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? கடவுள் கொடுத்ததெல்லாம் நமக்கே சொந்தம் என்று சுயநலத்துடன் வாழ்வதில் அர்த்தமில்லை. நம்மிடம் உள்ளதை பிறருக்கு கொடுத்து மகிழ்வோம்! அனைவரிடமும் அன்பு செலுத்துவோம்! ஆண்டவன் அருளால் அனைத்தும் நலமாய் நடக்கும்.

Tuesday, November 25, 2014

க்ஷோடச உபச்சாரங்களும்', தேவதைகளும்;

க்ஷோடச உபச்சாரங்களும்', தேவதைகளும்;
1),தூபம் - அக்னி
2),மகாதீபம் - சிவன்
3),ரிஷபதீபம் - தர்ம தேவதை
4),புருஷாமிருகதீபம் - மஹாவிஷ்ணு
5),பூர்ணகும்பம் - ருத்ரர்
6),பஞ்சதட்டு - பஞ்ச பிரம்மா
7),நக்ஷத்ர்தீபம் - 27 நட்சத்திரங்கள்
8),மேருதீபம் - பன்னிரெண்டு சூரியன்
9),விபூதி - பரமேஸ்வரர்
10),கண்ணாடி - சூரியன்
11),குடை - சந்திர பகவான்
12),சாமரம் - ஶ்ரீமகாலட்சுமி
13),விசிறி - வாயு
14),ஆலவட்டம் - பிரம்மா
15),கற்பூரம் - அக்னி

எல்லா உயிரிலும் கடவுள்!

எல்லா உயிரிலும் கடவுள்!
உயிர்களை எக்காரணம் கொண்டும் வதைக்கக் கூடாது. ஜனமேயஜயர் மகாராஜாவின் கதை தெரிந்தால், மற்ற உயிர்கள் மீது நமக்கு கை வைக்கவே தோன்றாது.அர்ஜுனனுக்கும், சுபத்ரைக்கும் அபிமன்யு பிறந்தார். அபிமன்யுவுக்கும் அவரது மனைவி உத்தரைக்கும் பிறந்தவர் பரீட்சித்து மகாராஜா. பரீட்சித்துவுக்கும் அவர் மனைவி மாத்ரவதீக்கும் பிறந்த மகனே ஜனமேஜயர். அதாவது அர்ஜுனனின் கொள்ளுப்பேரர். இவருக்கு சிருதசேனர், உக்ரசேனர், பீமசேனர் என்ற சகோதரர்கள் இருந்தனர்.ஜனமேஜயருக்கு யாகங்களைச் செய்வதில் அலாதிப்ரியம். இதன் மூலம் நாட்டு மக்களுக்கு பலவித நன்மைகள் நடந்தன. ஒருமுறை தீர்கஸத்ரம் என்னும் அரிய பலன்களைத் தரும் யாகத்தை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு நாய்க்குட்டி யாக குண்டம் அருகே வந்து விட்டது. அது அசுத்தம் செய்து விடுமோ என்ற பயத்தில், ஜனமேஜயரின் சகோதரர்கள் அதை அடித்து விரட்டினர். அது வலி தாங்காமல்,தன் தாயிடம் போய் முறையிட்டது. நாயின் தாய் ஜனமேஜயரிடம் போய், எனது குட்டி அசுத்தம் செய்து யாகத்துக்கு பங்கம் ஏற்பட்டிருந்தால் அதை அடித்திருக்கலாம்.
அப்படி ஏதும் செய்யாமல், யாக குண்டம் அருகே நின்று வேடிக்கை பார்த்ததற்காக உங்கள் சகோதரர்கள் அடித்திருக்கிறார்கள். எனவே அவர்கள் மீது நீங்கள் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். எனக்கு நீதி வேண்டும், என்றது.நாயின் கோரிக்கையை ஜனமேஜயர் கண்டுகொள்ளவில்லை.இதன் விளைவாக அந்த நாய், என் குட்டியை அநியாயமாக தாக்கிய உன்னை எந்நேரமும் பயம் ஆட்டிப் படைத்துக் கொண்டே இருக்கும், என சாபம் கொடுத்து விட்டது. அதன் பிறகு தான் பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்தார் ஜனமேஜயர் . நாய் சாபமிட்டபடியே, இனம் புரியாத பயம் அவரை எந்நேரமும் வாட்டி வதைத்தது.பயம் நீங்க அவர் பல யாகங்களைச் செய்தார். ஆனால், நீங்கவில்லை. ஒரு உயிரை தேவையின்றி துன்புறுத்தி, எத்தனை யாகங்கள், பிரார்த்தனைகள் செய்தாலும் இறைவன் அதைக் கண்டுகொள்ள மாட்டார் என்பதைப் புரிந்து கொண்டார்.இந்நேரத்தில் வைசம்பாயனர் என்னும் மகான் வந்தார். இவர் மகாபாரதத்தை இயற்றிய வியாசரின் பிரதம சீடர்.ஜனமேஜயா! பாரதக் கதையைக் கேட்டால் பயம் நீங்கும். மகாபாரதத்தில் பாண்டவர்கள் கிருஷ்ணரின் அருளால் பயமின்றி இருந்தனர், என்றார். அந்தக்கதையை அவரே கூறக்கேட்டு பயம் நீங்கப்பெற்றார்.அதன்பின், எந்த ஒரு பிராணிக்கும் துன்பம் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இவரது தந்தை பரீட்சித்து மகாராஜா பாம்பு தீண்டி தன் 60ம் வயதிலேயே இறந்து விட்டார். எனவே, பாம்புகளுக்கு தீங்கு செய்யாதவரை அவற்றிடம் இருந்து மனிதர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் வகையில் யாகம் ஒன்றை நடத்தினார். ஜரத்காரோர் ஜரத்கார்வாம்ஸமுத்பந்நோ மஹாயசா:!ஆஸ்திகஸ ஸத்யஸந்நோ மாம்பந்நேகப்யோபிரக்ஷிது!! என்னும் மகாபாரதத்திலுள்ள ஸ்லோகம் ஒன்றைச் சொன்னால், பாம்புகள் கடிக்கக்கூடாது என்ற வரத்தை பாம்புகளின் தலைவனான தட்சகனிடம் பெற்றார். இனியாவது, எல்லா உயிர்களையும் கடவுளாகவே பாருங்கள். அவற்றுக்கு துன்பம் இழைக்கத் தோன்றாது.