Friday, January 9, 2015

விரதம் ஏன் எது எப்படி எப்போது?


விரதம் ஏன் எது எப்படி எப்போது?
‘வயிறு நிறைந்திருக்கும்போது விரதம் பற்றி யோசிப்பதும் பேசுவதும் சுலபம்’ என்பார்கள். அது எவ்வளவு உண்மை என்பது உணர்ந்தவர்களுக்குத் தெரியும். பெண்களையும் விரதத்தையும் பிரிக்க முடிவதில்லை. எந்தக் கடவுளும் பட்டினி இருந்து, தன்னை வேண்டச் சொல்வதில்லை. ஆனாலும், பெண்கள் தம்மை வருத்தி, உணவைத் தவிர்த்து, பசியை சகித்துக் கொள்கிற விரதங்கள், அவர்களது பிரார்த்தனையின் முக்கிய அங்கம். கடவுளின் பெயரைச் சொல்லிக் கடைப்பிடித்தாலும், விரதம் என்பது ஆரோக்கிய வாழ்க்கைக்கு அவசியமான ஒன்றுதான்.
விரதம் என்பது மதத்துக்கு மதம், மக்களுக்கு மக்கள் வேறுபடுகிறது. சிலருக்கு ஒரு வேளை உணவு.... இன்னும் சிலருக்கு இருவேளை உணவு. வெறும் பழங்களை சாப்பிடுவது, உப்பு தவிர்த்து இனிப்பு மட்டும் எடுத்துக் கொள்வது, அசைவம் மட்டும் தவிர்ப்பது... இப்படி விரதங்கள் பல விதம். ஏன் விரதமிருக்க வேண்டும்? எது சரியான விரதம்? யாரெல்லாம் விரதமிருக்கலாம்? விரதமிருக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? விரிவாகப் பேசுகிறார் உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரான ஷைனி சந்திரன்.
‘‘நாம் உண்கிற உணவானது செரித்து, அதன் பிறகு அதிலுள்ள கொழுப்பு ஆற்றலாக மாற்றப்பட குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் தேவை. அந்த நேரத்தை அனுமதிக்காமல், அதற்குள் அடுத்த வேளை சாப்பாட்டை உள்ளே தள்ளுவதால், உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்பானது, உடலியக்கத்துக்குத் தேவையான ஆற்றலாக உபயோகப்படுத்தப்படுவது தடுக்கப்பட்டு, அப்படியே தேங்கிப் போகும். தினமுமே அடுத்த வேளை உணவுக்கு இடையில் போதிய இடைவெளியை அனுமதிப்பது கூட ஒரு வகையில் விரதம்தான்...
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வாரம் ஒரு முறை விரதமிருப்பது சரியானது. சிலர் வாரம் இரண்டு முறைகூட விரதமிருப்பதுண்டு. 
வாரத்தில் எல்லா நாள்களும் மூன்று வேளைகளும் வயிறு முட்ட சாப்பிட்டுப் பழகி விட்டு, திடீரென ஒரு நாள் விரதத்தைக் கடைப்பிடிப்பார்கள் சிலர். அது தவறு. விரதத்துக்கு இரண்டு நாள்களுக்கு முன்பிருந்தே காரம் குறைவான, பருப்பு, சாதம் மாதிரி நன்கு வெந்த உணவுகளையும், ரசம் சாதம், மோர் மற்றும் பழங்களையும் சாப்பிட வேண்டும்.
அடுத்த நாள், இளநீர், மோர், துளசி சேர்த்த தண்ணீர் மற்றும் பழச் சாறுகள் என திரவ உணவுகளாக சாப்பிடலாம். அதற்கடுத்த நாள், காலை மற்றும் இரவு உணவுக்கு வெறும் பழங்களையும், மதிய உணவுக்கு மிதமான காரமற்ற உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம். மூன்றாவது நாளில் இருந்து வழக்கமான உணவுப்பழக்கத்துக்கு மாறலாம். இது ஒரு வகையான விரதம். இன்னொரு முறையில், மாலை வரை வெறும் பழங்களையும் திரவ உணவுகளையும் மட்டும் எடுத்துக் கொண்டு, இரவுக்கு மிதமான உணவு சாப்பிடுகிற முறை.
இது தவிர இன்று விதம் விதமான விரத முறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள் மக்கள். சிலர் வெறும் பழங்களை மட்டுமே சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிடும் போது, உடலுக்குள் போகும் உப்பின் அளவு குறைவாக இருக்கும். எனவே உடலில் தண்ணீர் சேராது. நடிகைகள், மாடல் போன்றவர்கள், போட்டோ ஷூட்டுக்கு முன்னால், 3 நாள்களுக்கு பழ விரதம்தான் இருப்பார்கள். அதன் விளைவாக அவர்களது முகத்தில் பொலிவு கூடும். உடலில் தண்ணீர் தேக்கம் இருக்காது என்பதே காரணம்.
கண்களுக்கு அடியில் வீக்கமும் இருக்காது. இங்கிலாந்தில் இப்போது 5:2 டயட் என்பது ரொம்பப் பிரபலம். இதில் வாரம் 2 நாள்கள் விரதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். விரத நாளன்று ஆண்களுக்கு 600 கிலோ கலோரிகளும், பெண்களுக்கு 500 கிலோ கலோரிகளும் மட்டுமே அனுமதி. எடை குறைக்க விரும்புகிற பலரும் இதையே பின்பற்றுகிறார்கள். வாரம் ஒரு முறை விரதமிருந்தாலே உடலிலுள்ள நச்செல்லாம் வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாகும்.
விரதத்தை முடிக்கும் போது பழரசம் குடிப்பது ஏன்?
சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் போன்றவர்கள் உண்ணா விரதமிருக்கும் போது, கடைசியில் பழச்சாறு குடித்து, அதை முடிப்பதைப் பார்த்திருக்கிறோம். அது ஏன் தெரியுமா? பழச்சாறு செரிமானமாவதில் சிக்கல் இருக்காது. அது விரைவில் ரத்தத்துடன் கலந்து, குளூக்கோஸுக்கு இணையாக உடனடியாக உடலுக்கு சக்தியைக் கொடுக்கக் கூடியது. நீண்ட நேரம் உண்ணாமல் இருக்கும் போது, பழச்சாறு குடிப்பதன் மூலம் இழந்த சக்தியை சுலபமாகத் திரும்பப் பெற முடிகிறது. பழங்களில் வைட்டமின்கள், கனிமங்கள் என எல்லாம் இருப்பதால், அது ஆரோக்கியமானதும்கூட. விரதத்தை முடிக்கிற போது, பழச்சாறுதான் குடிக்க வேண்டும் என்றில்லை. இளநீர் கூட மிக நல்லது.
விரதமிருக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை?
செரிமானத்துக்குக் கடினமான எந்த உணவும் விரத நாள்களில் தவிர்க்கப்பட வேண்டும். பால், மசாலா சேர்த்த உணவுகள், அசைவம், அரிசி மற்றும் கோதுமை உணவுகள், அதிக உப்பு, காரம் சேர்த்த உணவுகள், செயற்கை உணவுகள் கூடவே கூடாது. செரிமானத்துக்கு மெனக்கெடுவதைத் தவிர்த்து, உள் உறுப்புகளை சுத்தம் செய்வதற்கு உடல் அந்த நேரம் எடுத்துக் கொள்ளும். முதுமை தள்ளிப் போகும். இன்சுலின் எதிர்ப்பு சக்தி மேம்படும். விரத நாள்களில் மிதமான, பாதகமில்லாத உணவுகளை எடுத்துக் 
கொள்வதன் விளைவாக, ஆரோக்கியம் மேம்படுவதுடன், ஆயுளும் கூடும்.
விரதம் இருந்தால் உடல் இளைக்குமா?
விரதமிருக்கும் போது பெரும்பாலும் பழங்கள் அல்லது திரவ உணவுகளையே எடுத்துக் கொள்கிறோம். அரிசி சாதம், ரொட்டி, இட்லி, தோசை, சட்னி, ஊறுகாய், அப்பளம், காரசார புளியோதரை, காரக்குழம்பு போன்றவை தவிர்க்கப்படுவதால் உடலில் தண்ணீர் சேர்வதும் தவிர்க்கப்படுகிறது. நமது உடலானது தசைப்பகுதிகளில் தண்ணீரைச் சேர்த்து வைத்திருக்கும். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை உண்ணும்போது, அவற்றில் உள்ள உப்பும், தன் பங்குக்கு தண்ணீரை சேமிக்கும். எனவே விரதமிருக்கும் போது எடை பார்த்தால், அதில் சில கிலோ குறைவாகத்தான் காட்டும். ஆனால், அது கொழுப்பு கரைந்ததாக அர்த்தமாகாது!
விரதத்தை முடித்து விட்டு விருந்து சாப்பிடலாமா?
அது அத்தனை மணி நேரம் விரதம் இருந்த பலனையே கெடுத்து விடும். விரதம் என்பது உணவு சார்ந்த ஒருவித ஒழுக்கக் கட்டுப்பாடு. குறைந்த கலோரி உணவுகளை உண்ணும்போது, ஆயுள் அதிகரிக்கிறது. அதன் விளைவாக முதுமைத் தோற்றமும் தள்ளிப்போடப்படுகிறது. எனவே, விரதத்தை முடித்த பிறகும், மிதமான உணவுகளை அளவோடு எடுத்துக் கொள்வதுதான் நல்லது.
யாரெல்லாம் விரதம் இருக்கக் கூடாது?
குழந்தைகள், டைப் 1 நீரிழிவு பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிகள்... தசை நலிவு நோயால் பாதிக்கப்பட்டோர்.

No comments:

Post a Comment