Thursday, March 12, 2015

உயிர் இருப்பதால் தாவர உணவும் அசைவம்தானே?




உயிர் இருப்பதால் தாவர உணவும் அசைவம்தானே? 




புலால் மறுப்பை ஒரு முக்கியக் கொள்கையாக பேசுகிறது நம் வள்ளுவம். திருக்குறளின்இருபத்தாறாம் அதிகாரம் ‘புலால் மறுத்தல்’ என்ற தலைப்பிலேயே அமைந்துள்ளது. மாமிச உணவு வேண்டாம் வேண்டாம் என்று பத்து முறை அறைகூவுகிறார் வள்ளுவர்.  சமணர்கள் ஜீவகாருண்யத்தைப் போற்றுபவர்கள்.







மாமிச உணவை முற்றிலும் தவிர்த்து வாழ்பவர்கள். (ஈ, எறும்புக்கு கூட கெடுதல் நேரக் கூடாது என்று மயிலிறகால் தரையைப் பெருக்கியவாறு நடப்பவர்கள். இரவு உணவுண்டால், தெரியாமல் நுண்ணுயிர்களை உண்ண நேரும் என்பதால் பகலில் மட்டுமே உண்பவர்கள்.) 

புலால் மறுத்தலை வலியுறுத்தும் காரணத்தால் கருணை மனம் படைத்த வள்ளுவரும் சமணராக இருக்கக் கூடும் என்று வாதிடுபவர்களும் உண்டு. ஆனால், அனைத்து வகையான வாதங்களையும் மீறி வள்ளுவர் எல்லா மதத்தினருக்கும் பொதுவானவராகத் திகழ்கிறார் என்பதுதான் அவரது தனிச்சிறப்பு. ‘கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்’ என்பது வள்ளுவ அடிகள் சொன்ன திருக்குறள். வள்ளுவரை அடியொற்றி மாமிச உணவைத் தவிர்த்து வாழும் தமிழர்கள் இன்று பெருகி வருகிறார்கள். 

உலக அளவில் தாவர உணவின் பெருமையைப் பேசும் மாநாடுகள் அவ்வப்போது நடப்பதையும் செய்தித் தாள்கள் அறிவிக்கின்றன. தாவர உணவு உண்ணும் வகையிலேயே மனித உடல் படைக்கப்பட்டிருக்கிறது என்றும் மாமிச உணவை உண்பதற்கேற்ப மனிதனின் பற்கள் முதலான உடல் உறுப்புகள் அமையவில்லை என்றும் தாவர உணவாளர்கள் வாதிட்டு நிறுவுகிறார்கள். 

‘மாமிச உணவில் கொழுப்புச் சத்து அதிகம், ஆகையால் அதை அதிகம் சாப்பிடுகிறவர்களுக்கு இதயநோய் வரும் வாய்ப்பும் மிகுதி’ என்கிறது இன்றைய மருத்துவ விஞ்ஞானம். பறவைக் காய்ச்சலால் உலகே அவதிப் பட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில், புலாலை ஒதுக்குவதே நல்லது என்ற கோட்பாடு வலுப்பெற்று வருகிறது. 

புலால் மறுப்புக்கு அடிப்படையாக அமைவது உயிர் நேயம். ‘நான்கு கால் உயிர்களையும் இரண்டு கால் உயிர்களையும் தவிர்த்துவிட்டு ஒருகால் உயிரை மட்டும் உண்ணுங்களேன்’ என்கிறது ஒரு வெளிதேசப் பழமொழி. நான்கு கால் உயிர் என்பது விலங்கினம். இரண்டு கால் உயிர் என்பது பறவையினம்.

 ஒருகால் உயிர் எது தெரியுமா? தாவரம் தான்! மரங்களும் செடிகொடிகளும் ஒற்றைக் காலில்தானே, ஆணிவேரில்தானே நிற்கின்றன! ஜீவ காருண்யம் தழைக்க வேண்டும் என்று அவை ஒற்றைக் காலில் இறைவனை நோக்கித் தவம் செய்கின்றனவோ! 

 மனிதர்களில் விலங்குகளைச் சாப்பிடுகிறவர்கள் உண்டு. விலங்குகளில் யானை, ஆடு, மாடு போன்ற சில விலங்குகள் நீங்கலாக, ஒன்றையொன்று சாப்பிட்டு வாழும் விலங்குகள் பல உள்ளன. பறவைகளிலும் மாமிச பட்சினிகள் பல. ஆனால், தாவரங்கள் ஒருபோதும் மாமிச உணவைச் சாப்பிடுவதில்லை. 

(விதிவிலக்காக ஆப்பிரிக்கக் காடுகளில் தன் அருகே வரும் விலங்குகளைத் தன் கிளைகளால் வளைத்து அவற்றின் சாற்றை உறிஞ்சி வாழும் மரங்கள் சில உண்டு என்கிறார்கள் தாவரவியல் விஞ்ஞானிகள். தாவரம் மாமிசம் உண்ணும் அதிசயம் அது.)

ஆனால், நான்குகால், இரண்டுகால் உயிரினங்கள் மேல் மட்டுமல்லாமல், ஒருகால் உயிரினமான தாவரங்கள் மேலும் கருணை கொண்டார் வள்ளல் பெருமான். ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று பாடவேண்டுமானால் எத்தகைய கருணை உள்ளம் படைத்திருக்க வேண்டும்?  புலால் உணவை உண்ணலாகாது என்று வள்ளுவர் மரபில் தொடர்ந்து அறைகூவிய அண்மைக்கால உண்மை ஞானி வள்ளலார்தான். 

முல்லைக்குத் தேரீந்த கடையெழுவள்ளல்களில் ஒருவனான பாரி, தாவரங்களை நேசித்தவன். (என்றாலும்  அவன் முல்லைக்குக் கொடையாகக் கொடுத்த தேர் மரத்தால் தானே செய்யப்பட்டிருக்கும், தேருக்காக அவன் மரங்களை வெட்ட அனுமதித்தது மட்டும் நியாயமா என்று எதிர்க்கேள்வி எழுப்புகிறார்கள் மரங்களைக் காப்பாற்றும் இயக்கத்தைச் சார்ந்தவர்கள்!)

தாவரங்களை மட்டுமல்லாது களிமண்ணையும் நேசித்தது பாரசீகக் கவிஞன் உமர்கயாமின் கவிதை உள்ளம். உமர்கயாம் கவிதைகளை தமிழாக்கிய கவிமணியின் பாடல் ஒன்று, உமர்கயாமின் களிமண் நேசத்தைப் பற்றிப் பேசுகிறது.

ஒரு குயவன் களிமண்ணால் பானை வனைந்துகொண்டிருந்தான். அவன் அருகே நின்று அந்தச் செயலைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் உமர்கயாம். அந்தக் களிமண்ணின் குரலைக் கேட்கிறது கவிஞரின் கருணையுள்ளம். அது என்ன சொல்கிறது எனக் கூர்ந்து கவனிக்கிறார் கவிஞர். அவர் கண்களில் கண்ணீர் தளும்புகிறது. கவிதை இதோ:

‘மண்ணை எடுத்து ஒரு குயவன் 
மயக்கிப் பிசையும் வேளையிலே 
 திண்ணை அருகே சென்றிருந்தேன்! 
செய்யும் செயலும் கண்டிருந்தேன்! 
‘அண்ணா! மெல்ல மெல்ல’ என 
அமைந்த அழுகைக் குரல் கேட்டேன்! 
கண்ணில் காணாத் தன் நாவால் 
களிமண் கரைவது என 

உணர்ந்தேன்!’ என்ற வரிகளைப் படிக்கும்போது களிமண்ணுக்காக நம் கண்களும் கூடக் கசியத்தான் செய்கின்றன. புதுச்சேரி ஸ்ரீஅன்னை இதைப் போலவே சிந்தித்தவர். எல்லா ஜடப் பொருட்களுக்கும் கூட உயிர் உண்டு, அவற்றைத் துன்புறுத்தக் கூடாது என்ற கொள்கையுடையவர் அவர். 

ஜடப்பொருட்கள் கூட அணுக் களால் ஆனவைதானே? அணுக்களில் ப்ரோட்டான், நியூட்ரான் போன்றவை எல்லாம் ஓயாமல் சுற்றிச் சுற்றி இயங்கிக்கொண்டுதானே இருக்கின்றன? இயக்கம் உள்ளதெல்லாம் உயிர் உள்ளதுதானே? மேஜை, நாற்காலி போன்ற ஜடப்பொருட்கள் உயிரில்லாதவை போல் வெளிப் பார்வைக்குத் தோன்றினாலும் அடிப்படையில் அவற்றில் உள்ள அணுக்கள் இயங்கிக் கொண்டே இருப்ப தால் அவற்றையும் உயிர் உள்ளவையாகத்தான் கொள்ள வேண்டும் என்பது அன்னையின் வாதம்.  

அன்னையை ஓர் அலுவலகத்திற்கு விஜயம் செய்யும்படிக் கேட்டுக் கொண்டார்கள். அவர் உடனே அங்கு வர ஒப்புக் கொண்டார். அலுவலகத்தினர் அவசர அவசரமாக அலுவலகத்தை ஒழுங்கு செய்தார்கள். அன்னை வருகை தந்ததும் பூரண கும்பம் கொடுத்து அன்னையை உள்ளே அழைத்துச் சென்றார்கள். உள்ளே சென்ற அன்னை சற்று நின்றார். எங்கிருந்தோ சன்னமான ஓர் அழுகுரல் தனக்குக் கேட்பதாகச் சொன்னார். பின் அந்த அழுகுரல் எங்கிருந்து வருகிறது என மெல்ல உட்புறம் நடந்து சென்று ஆராய்ந்தார். 

பூட்டப்பட்டிருந்த ஒரு அலமாரியிலிருந்துதான் அழுகைக் குரல் கேட்டது. அலமாரியைத் திறக்கச் செய்தார். அன்னை வருகிறார் என அவசர அவசரமாக அலமாரியின் உள்ளே அள்ளித் திணித்திருந்த கோப்புகள் (ஃபைல்கள்) எல்லாம் தடதடவெனக் கீழே விழுந்தன. தான் கேட்டது அந்தக் கோப்புகளின் அழுகுரல்தான் என்றார் அன்னை. கோப்புகளை ஒழுங்காக அடுக்கி வைக்கச் சொன்னார். இப்போது அவற்றின் அழுகை நின்றுவிட்டது எனவும் தெரிவித்தார். 

ஜடப் பொருட்கள் என்று நாம் கருதுகின்றவற்றைக் கூட நாம் சீராகப் பராமரித்தால் அவை மகிழ்ச்சி அடையும் என்றும் அவை நமக்குக் கூடுதலாகப் பணிபுரியும் என்றும் அன்னை கருதுகிறார். பழைய செருப்பைத் தூக்கி எறியும்போது கூட, அதை ஒரு காகிதத்தில் சுற்றி ‘நீ இத்தனை காலம் எனக்குப் பாதசேவை செய்தாய், உனக்கு நன்றி’ என்று எண்ணியவாறு குப்பைத் தொட்டியில் போடவேண்டும் என்கிறார். அப்படியானால் வரும் புதுச்செருப்பு கூடுதலான நாட்கள் பணிபுரியும் என்பது அன்னையின் கருத்து. 

ஜடப் பொருட்களையே கனிவோடு கையாள வேண்டும் என்றால் புலால் உணவைத் தவிர்க்க வேண்டும் என்பது, தானே தெளிவாகிறதல்லவா?‘தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்று விஞ்ஞானி ஜகதீஷ் சந்திரபோஸ் கண்டுபிடித்திருக்கிறார், அப்படியானால் தாவரங்களையும் சாப்பிடக் கூடாதுதானே?’ என்று வாரியாரிடம் விதண்டாவாதமாகக் கேள்வி எழுப்பினார் ஓர் இளைஞர். வாரியார் நகைத்தவாறே பதில் சொன்னார்: 

‘அவரைக்காயைப் பறித்தாலோ கீரையைக் கிள்ளினாலோ அந்தச் செடி மறுபடி வளர்கிறது, ஆனால், ஆட்டின் கழுத்தை வெட்டினாலோ கோழியின் கழுத்தைத் திருகினாலோ ஆட்டின் தலையும் கோழியின் தலையும் திரும்ப முளைத்து வளர்வதில்லை அப்பனே! அதுதான் வித்தியாசம்!’ 

‘அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று’என்பது திருக்குறளில் புலால் மறுத்தல் அதிகாரத்தில் உள்ள ஒரு முக்கியமான குறள். விலங்குகளை பலியிட்டு வேள்வி நிகழ்த்துவதை விட, புலால் உண்ணாதிருப்பது நல்லது என்கிறார் வள்ளுவர். இந்தக் குறளுக்கான நேரடி விளக்கமாக அமைந்துள்ளது புத்தர் வாழ்வில் வரும் ஒரு நிகழ்ச்சி. ஆசிய ஜோதி என்ற தலைப்பில் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய கவிமணியின் கவிதையில் மிக அழகாக அந்நிகழ்ச்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. 

கானகத்தில் புத்தர் நடந்துசெல்லும்போது ஏராளமான ஆடுகளை ஓர் இடையன் மேய்த்து செல்வதைப் பார்த்தார். அவை மன்னன் பிம்பிசாரன் நிகழ்த்தும் வேள்வியில் பலியிடுவதற்காக அழைத்துச் செல்லப்படுகின்றன என்பதை அறிந்தார். 

அந்த ஆட்டு மந்தையில் ஒரு சின்ன ஆடு கால் ஊனமானதால் தடுமாறியவாறே நடந்துகொண்டிருந்தது. மல்லிகைப் பூ மாலை போல் இருந்த அந்த வெள்ளை ஆட்டுக்குட்டியை கருணையோடு தன் ரோஜாப்பூ போன்ற கரங்களில் தூக்கிக் கொண்டார் புத்தர். ஆடுகளோடு அவரும் பிம்பிசாரன் அரண்மனைக்குச் சென்றார். 

உயிர்க் கொலை தவறு என்பதை மன்னனுக்கு அறிவுறுத்தினார். ஆயிரம் ஆடுகளை வெட்டி வேள்வி நிகழ்த்துவதை விட ஓர் உயிரைக் கொல்லாமல் இருப்பது நல்லது என்றார். தன் கருத்தை நிறுவுவதற்கு அருமையான ஒரு வாதத்தை முன்வைத்தார். அந்த வாதத்தைக் கேட்டு மன்னன் திடுக்கிட்டான்.  ‘நீ இறைவனுக்கு ஆடுகளைப் பலியிடுவதாகச் சொல்கிறாயே? இறைவன் இந்த மாமிசத்தை உண்பானா? யோசித்துப் பார். 

மனிதர்களும் ஆடுகளும் இறைவனின் குழந்தைகள். ஒரே ஒரு வித்தியாசம்தான். மனிதர்கள் வாயுள்ள பிள்ளைகள். ஆடுகள் வாயில்லாப் பிள்ளைகள். வாயுள்ள பிள்ளை வாயில்லாப் பிள்ளையை அரிந்து கறி சமைத்தால் அதைக் கருணை நிறைந்த தந்தை உண்டு களிப்பாரா?’ என்று வினவினார் புத்தர். இந்த வாதத்தால் பதைபதைத்துப் போன பிம்பிசாரன் உடனே உயிர்ப்பலியைத் தடுத்து நிறுத்தினான். தன் நாட்டு மக்கள் புலால் உண்ணலாகாது என்றும் சட்டமியற்றினான். 

கவிமணியின் கவிதையில் புத்தர் வாதிடும் பகுதி இதோ:
‘ஆட்டின் கழுத்தை அறுத்துப் பொசுக்கி நீர்
ஆக்கிய யாகத்து அவியுணவை 
ஈட்டும் கருணை இறையவர் கைகளில்

ஏந்திப் புசிப்பரோ கூறுமையா!
மைந்தருள் ஊமை மகனை ஒருமகன் 
வாளால் அரிந்து கறி சமைத்தால் 
தந்தையும் உண்டு களிப்பதுண்டோ இதைச் 
சற்று நீர் யோசித்துப் பாருமய்யா!’   
புலால் மறுப்பை நீதி நூல்கள் தொடர்ந்து 

வலியுறுத்தியதால் தெய்வச் செயல்களில் புலால் படைப்பது மெல்லக் குறையத் தொடங்கியது. உயிர்களைத் தெய்வத்திற்குப் பலியிடும் வழக்கத்திற்கு பதிலாக வேறு வழக்கம் தோற்றுவிக்கப்பட்டது. மாமிசம்போல் தோற்றமளிப்பது சதைப்பற்று நிறைந்த பூசணிக்காயின் உள்பகுதி. அதை வெட்டி அதில் குங்குமம் தடவி, குங்குமத்தைக் குருதிபோல் பாவித்து பூசணிக்காயை விலங்குகளுக்குப் பதிலாக வெட்டத் தொடங்கினார்கள். 

அமாவாசை தோறும் பல கடைகளின் முன்னால் பூசணிக்காய், திருஷ்டி தோஷம் நீங்குவதற்காக என்று வெட்டிப் போடப் பட்டிருப்பதைப் பார்க்கிறோம். நடுத்தெருவில் அவை கிடக்கும்போது இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாவதையும் காண்கிறோம்.   ‘பூசணிக்காய் உடைத்துப் போடப்படு வதால் இருசக்கர வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகின்றனவே? பூசணிக்காய் உடைக்கும் இந்த இந்துமத மூட நம்பிக்கை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்று இஸ்லாமியரான முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் ஒரு தொலைக்காட்சியில் வினா எழுப்பப்பட்டது. மெல்லிய முறுவலுடன் அமைதியாக பதில் சொன்னார் அப்துல்கலாம்:

 ‘அதை நம்பிக்கை என்று சொல்லுங்கள். மூட நம்பிக்கை என்று நாம் எப்படிச் சொல்ல முடியும்? ஏனென்றால் இதுபோன்ற நம்பிக்கைகள் இந்து மதத்தில் மட்டுமல்ல, எல்லா மதங்களிலும் இருக்கின்றன. எண்ணற்ற மக்களின் நம்பிக்கைகளை தேவையில்லாமல் விமர்சனத்திற்கு உட்படுத்துவது சரியல்ல. ஆனால் இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாவதை நாம் தடுக்க வேண்டியது மிக அவசியம். 

எனவே பலியிடப்பட்ட பூசணிக்காய்களை பின்னர் ஞாபகமாக தெருவோரத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் எடுத்துப் போட்டுவிடுமாறு நாம் அறிவுறுத்தலாம்!’ அப்துல் கலாமின் பக்குவமான இந்த பதிலைக் கேட்டு நேயர்கள் மகிழ்ந்தார்கள்.வள்ளுவரின் புலால் மறுப்புக் கொள்கை இப்போது உலகெங்கும் வலுப்பெற்று வருகிறது. வள்ளுவரது கோட்பாட்டின் வெற்றி என்பது தமிழர்களின் வெற்றி அல்லவா? எனவே அதுகுறித்து நாம் மகிழலாம். - See more at: http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=2354&id1=53&id2=0&issue=20141216#sthash.5RIGrt3J.dpuf

No comments:

Post a Comment