Monday, April 6, 2015

மனதை நிறைத்த மாணவர்கள்


பாண்டவர்களும், கவுரவர்களும் துரோணாச்சாரியாரின் மாணவர்களாக இருந்தனர்.
ஒருமுறை அவர்களிடம், ""உங்கள் இரு அணியினரையும் சந்திக்க நான் நாளை வருவேன். அப்போது உங்கள் மாளிகைகள் பரிபூரணமாக நிறைந்திருக்க வேண்டும்,'' என்றார்.
துரியோதனன் தன் சகோதரர்களுடன் ஆலோசித்தான். மாளிகை நிறைந்திருக்க வேண்டும் என்றால், யாரும் மாளிகைக்குள் நுழைய முடியாத அளவுக்கு பொருட்களைக் கொண்டு நிரப்புவது என்று முடிவெடுத்தான். மாளிகை முழுவதையும் பஞ்சால் நிறைத்தான். அங்கு சென்ற துரோணர், ""சரியான முறையில் உன் மாளிகையை நிறைத்திருந்தாய்!'' என்று பாராட்டிவிட்டு, பாண்டவர்கள் மாளிகைக்கு சென்றார்.
பாண்டவர்கள் அவரை பன்னீர் தெளித்து வரவேற்றனர். வீடு முழுவதும் தீபங்கள் எரிந்தன. மாளிகை முழுவதும் ஒளி நிறைந்திருந்தது. தர்மரிடம் துரோணர், ""உன் வீட்டை நிறைத்து வை என்று சொல்லியிருந்தேனே. நீ அப்படி செய்ததாகத் தெரியவில்லையே,'' என்றார்.
""குருவே! என் மாளிகை முழுவதையும் இந்த விளக்கின் ஒளி பரிபூரணமாக நிறைத்திருக்கவில்லையா?'' என்று திருப்பிக் கேட்டார்.
தர்மரின் சமயோசிதமான பதிலால் குருவின் உள்ளம் நிறைந்தது.

No comments:

Post a Comment