Friday, April 24, 2015

புடம் போடப் போடத்தான் தங்கமும் மின்னும்

உதங்க முனிவர் என்பவர் பிருகு முனிவரின் பரம்பரையை சேர்ந்தவர். அவர் ஞானம் நிறைந்தவர். பெரும் புகழ் பெற்று இருந்தவர். தமது இளம் வயதிலேயே குருகுல வாசம் செய்து வேத கல்வியில் பாடம் பயின்றவர். ஒருமுறை அவர் குருகுலத்தில் பயின்றபோது அவர் காட்டிற்குச் சென்று சமையலுக்காக விறகு பொறுக்கிக் கொண்டு இருந்தார். தனது தலையில்
அதை வைத்துக் கொண்டு வந்து ஆஸ்ரமத்திற்கு வந்து அதை கீழே இறக்கியபோது அந்த விறகின் ஒரு சிறகு அவர் தலை முடி சடையுடன் தலை பகுதியில் இருந்த தோலைக் கிழித்து விட, கிழிந்த தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமல் தனது குருவிற்கு சமையலை செய்யப் போனவரை குரு அன்புடன் அழைத்து தலையை வருடிக் கொடுக்க ரத்தம் வருவது நின்றது. அது மட்டும் இல்லாமல் பிற காலத்தில் அவருக்கு தனது மகளையே மணம் செய்து கொடுத்தார்.

மகாபாரதப் போருக்குக் பின்னர் கிருஷ்ணர் உதங்க முனிவர் வசித்து வந்த வனத்தின் வழியே ஒருநாள் தனிமையில் நடந்து வந்து கொண்டு இருந்தார். உதங்க முனிவர் உண்மையில் கிருஷ்ணனே என்பதை அறிந்து கொள்ளாமல் அவரை பாண்டவர்களுக்கு உதவியவர், ஆயிரக்கணக்கான கௌரவர்களை அழித்தவர் என்று எண்ணிக் கொண்டு அவரைக் கண்ட மாத்திரத்திலேயே அவரை சபிக்க முயன்றதும், கிருஷ்ணர் அவருக்கு தான் யார், தான் எதற்காக அந்தப் பிறவியை எடுத்தேன் என்பதை எடுத்துக் கூறிய பின் தனது விஸ்வரூபத்தைக் காட்டினார். தனது தவறை உணர்ந்த உதாங்க முனிவர் அவரிடம் மன்னிப்புக் கேட்டார்.

அப்போது கிருஷ்ணர் அவருக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அந்த முனிவரும், தாம் அங்கும் இங்கும் ஷேத்ராடனம் சென்று கொண்டே இருப்பதினால் பாலைவனப் பகுதிகளில் தான் பயணிக்கும்போது தமக்கு தாகமாக இருந்தால் உடனே அங்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்தால் போதும் என்றார். கிருஷ்ணரும் அந்த வரத்தை அவருக்கு அருளினாலும், அவருடைய கர்வ பங்கத்தை அடக்க தக்க தருணம் வரட்டும் எனக் காத்து இருந்தார்.

ஒருமுறை உதங்க முனிவர் பாலைவனம் ஒன்றின் வழியே சென்று கொண்டு இருந்தார். வழிக்கு அவர் கொண்டு சென்று இருந்த கையில் இருந்த அனைத்து தண்ணீரும் செலவழிந்து விட்டது. தாகம் எடுத்தது. கிருஷ்ணரை நினைத்தார். கிருஷ்ணனும் உடனே இந்திரனை அவருக்கு தண்ணீர் தருவதற்கு அங்கு அனுப்பினார். இந்திரனிடம் அந்த முனிவருக்கு தாகமே அங்கு எடுக்காமல் இருக்க நீருடன் அமிருதத்தைக் கலந்து கொடுக்குமாறு கூறி அனுப்பினார். இந்திரனும் தன்னை ஒரு சண்டாளன் உருவில் மாற்றிக் கொண்டு அந்த பாலைவனத்தில் சென்று உதங்க முனிவர் கண்களில் படுமாறு அமர்ந்து கொண்டார். அவர் பக்கத்தில் ஒரு சுனையில் நிறைய தண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது. அது இந்திரனால் மாயையாகப் படைக்கப்பட்ட நீர் சுனையாகும். அதில் அமிருதம் கலந்த நீரைக் கொட்டிக் கொண்டு இருந்தது .

தண்ணீரைத் தேடி அந்த சண்டாளரின் அருகில் சென்றதும், சண்டாளர் உருவில் இருந்த இந்திரன் இறைச்சிகளை பதப்படுத்திக் கொண்டு இருந்ததைக் கண்டு இந்த சண்டாளன் அருகில் உள்ள சுனையில் இருந்து தண்ணீர் குடிக்கக் கூடாது என எண்ணியவாறு, அங்கிருந்து நகர்ந்தார். சற்று தூரம் சென்றதும் மயக்கம் அடைந்து விழுந்தார். சிறிது நேரம் கழிந்தது. தன முகத்தில் யாரோ ஒருவர் தண்ணீர் அடிப்பதைக் கண்டு மயக்கம் தெளிந்து எழுந்தவர் முன்னால் கிருஷ்ணர் நின்று கொண்டு இருந்தார். அவரைக் கண்டதும் எழுந்து நின்று அவரை வணங்கிய உதங்க முனிவர் தனக்கு நேர்ந்த கதியைக் கூறினார். அதைக் கேட்டு சிரித்த கிருஷ்ணரும் அவருடைய அறியாமையை எடுத்துக் காட்டினார்.

''பல புனித நதிகளிலும் குளிக்கும்போது அதில் குளித்தவர்கள் யார் யார் என்று குல கோத்திரமா பார்க்கின்றாய்?. மழையினால் நிலத்தடிக்குச் செல்லும் நீர் எத்தனைபேர்களுடைய உடம்பில் பட்டு பூமிக்குள் இறங்குகின்றது. அந்த தண்ணீரை பருகும்போது அது யார் மீதெல்லாம் பட்டு பூமியில் இறங்கிற்று என்றெல்லாம் எண்ணிப் பார்க்கின்றாயா? இல்லை நிலத்தில் பயிரிடப்படும் உணவு தானியங்களுக்கு தண்ணீர் ஊற்றி யார் விளைவித்தார்கள் என்று பார்க்கின்றாயா? ஆபத்துக்கு உதவுபவர் யாராக இருந்தால் என்ன, மனித நேயத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே தவிர அவர்கள் சார்ந்துள்ள இனத்தைப் பார்ப்பது தவறு. அதனால்தான் அறியாமையினால் உனக்கு நான் இந்திரன் மூலம் அனுப்பிய அமிர்தத்தையும் உன்னால் அடைய முடியவில்லை. சரி, நடந்தது நடந்து விட்டது. இனி இந்த உண்மையை உணர்ந்து நடப்பாய் '' என்று அவரை ஆசிர்வதித்தார். அது முதல் அந்த முனிவர் தண்ணீர் வேண்டும் என நினைத்து வேண்டினால் அவர் உள்ள இடத்தில் மழை நீர் கொட்டும் என்று கூறிவிட்டுச் சென்றார். முனிவர் வெட்கி தலை குனிந்தார்.

ஒருமுறை அவர் தனது மனைவியுடன் கங்கையில் நீராடிக்கொண்டு இருந்த போது அவரது மனைவியை ஒருமுதலை இழுத்துக்கொண்டு போய் விட்டது. அப்போது தான் குரு குலத்தில் சேர்ந்த போது அவருடைய குரு முதன்முதலில் அவருக்கு உபதேசித்த போதனைகள் நினைவில் வந்தன. அவர் குரு கூறிஇருந்தார் '' வாழ்க்கையில் என்ன செய்தாலு ம், எங்கிருந்தாலு ம், எப்படி இருந்தாலும் நமக்கு என்ன முடிவு வரவேண்டும் என்ற விதி உள்ளதோ அதுவே நடக்கும். ஆகவே நம்முடைய கடமைகளை நாம் தொடர்ந்து செய்துகொண்டு இருக்கவேண்டும். மற்றதை நம்மை படைத்தவர் பார்த்து கொள்வார்''.

ஆனாலும் மனைவியை முதலை இழுத்துக்கொண்டு ஓடியப்பின்னர் மனத்துயரம் தாங்காமல் சிறிதுநேரம் அழுத போது, சற்று தூரத்தில் இறந்தவர் ஒரு வருடைய உடலை அவருடைய உறவினர்கள் மந்திரங்களை ஓதியவா ரே கங்கையில் வீசி விட்டுச் செல்வதைக்கண்டார். அப்போது தான் அவர் சுய உணர்வை அடைந்து உண்மையை புரிந்துகொண்டார். மோட்ஷம் தரும் கங்கையில்_அல்லவா தாம் தனது மனைவியை கங்கையில் முதலை_மூலம் அவளை படைத்தவரிடமே திருப்பி அனுப்பிவிட்டோம், அவளுக்கு ஏற்பட்டுள்ள விதிப்படியே தான் அவளுக்கு முடிவு_வந்துள்ளது. இல்லை என்றால் இந்த கங்கையில்_வந்து நான் ஏன் குளித்தேன்?

இந்த உண்மையை முனிவர் என கூறிக் கொள்ளும் நான் கூடப்புரிந்து கொள்ளவில்லையே என மனம் வருந்தினார். அதன்_பின்னர் உதங்க முனிவர் பல் வேறு இடங்களுக்கும் சென்று விட்டு தென்பகுதியை அடைந்தவர் உறையூரில் இருந்த பஞ்ச வர்ணேஸ்வரர் ஆலயத்துக்கு வந்து சிவனை_வழிபட்டார். அவர் தவத்தை மெச்சிய சிவ பெருமானும் காலை வழி பாட்டில் ரத்தின லிங்கமாகவும், உச்சிக்கால வழிபாட்டில் ஸ்படி லிங்கமாகவும், மாலை வழிபாட்டில் பொன்லிங்கமாகவும், முதல் ஜாம வழிபாட்டில் வைர லிங்கமாகவும், அர்த்த ஜாமவழிபாட்டில் சித்திர லிங்கமாகவும் அவருக்கு காட்சியளித்தார்.

நீதி: புடம் போடப் போடத்தான் தங்கமும் மின்னும் என்பதைப் போல அனுபவங்களே நல்வாழ்க்கைக்கு வழி வகுக்கும்.

No comments:

Post a Comment