Friday, April 24, 2015

ஒரு மாமனிதன் வாழ்ந்தான். அவன் பெயர் இராமன்.

அவனை தெய்வமென்றும், அவதார புருஷனென்றும், பெரும் சக்ரவர்த்தி என்றும் சொல்வார்கள். இவை எல்லாவற்றுக்கும் மேல் அவன் ஒரு சிறந்த மனிதன். இராமனின் சிறப்பே அவன் தன்னை தெய்வம் என்று காட்டி கொள்ளாமல் ஒரு சாதாரண மனிதனாய் வாழ்ந்து அனைத்து துன்பத்தின் இடையிலும் தர்மத்தில் இருந்து வழுவாமல் இருந்த‌தே.
அதனால்தான் கோடானு கோடி மக்களால் அவன் மதிக்கப்படுகிறான். அவன் இந்நாட்டின் ஒப்பற்றவன். அப்போது அவன் பிறந்த பூமி ?

ஒரு கொள்ளைக்கூட்ட தலைவன் நம் நாட்டுக்குள் ஊடுறுவி, நம் மக்களை அழித்து, நம் அவதார புருஷன் பிறந்த பூமியில் அவனுக்காக எழுப்பப்பட்டிருந்த கோவிலை தகர்த்து எறிந்து ஒரு கட்டிடத்தை எழுப்பி வைத்தான். ஆனால் அந்த இடத்தில் நமது வரலாற்று நாயகனுக்கு ஒரு மாபெரும் கோவில் இன்னும் நம் கணவுகளில் மட்டுமே உள்ளது ?

சென்ற வாரம் நான் அயோத்தி சென்றேன் சில வெளிநாட்டு நண்பர்களுடன். ஒருவர் ஸ்பானியர், மற்றவர் செக் குடியரசு, நான் நடந்தவற்றை விளக்கியதும் அவர்கள் கேட்டார்கள் "உங்கள் சரித்திர நாயகனுக்கு கோவில் எழுப்ப, உங்களை யார் தடுக்க முடியும் ? ஏன் ஜனநாயகத்தை நீங்கள் பெரும்பாலான ஹிந்துக்கள் சரியாக பயன்படுத்தவில்லை ? இதை குறித்து ஏன் நீங்கள் ஒரு பெரும் விழிப்புணர்வை அறிவார்ந்த நிபுணர்களோடு செய்யவில்லை எனக் கேட்டார்கள். "வோட்டு வங்கி அரசியலை" பற்றி நான் விளக்கியது அவர்கள் மிகவும் வருத்தப்பட்டார்கள்.

அயோத்தியின் செல்வாக்கு மிகுந்த ஒருவர் எங்களுக்கு ஒவ்வொன்றையும் சுற்றி காண்பித்தார். அவர் சொன்னார் "அயோத்தியில் முஸ்லீம்கள் மிகக் குறைவு, அவர்களும் இராமபிரானுக்கு கோவில் அமைவதையே விரும்புகின்றனர், ஆனால் வெளியில் உள்ளவர்கள்தான் இதை எதிர்க்கிறார்கள்" என்றார். நான் நம்பாமல் அரை மனதோடு தலையாட்டினேன்.

அயோத்தியில் பணிபுரியும் இரானுவ வீரர்கள் உள்பட அனைவரும், இராமருக்கு கோவில் வேண்டும் என்று ஆணித்தரமாய் விரும்புகிறார்கள். ஸ்ரீ ராமனை தரிசிக்க வரிசையில் செல்கையில் ஏழு முறை பரிசோதிக்கப் படுகிறோம். 10 அடி உயர மின் வேலியும், காவல் கோபுரங்களும், சிறப்பு காவல் படையுமாக பாதுகாப்பு நிலவுகிறது. எல்லாம் தாண்டி உள்ளே செல்கையில், இத்தனை கோடி மக்களின் வரலாற்று நாயகன் ஒரு சிறிய தற்காலிக அமைபின் இடையே நமக்கு தம்பிகளோடு தரிசனம் தருகிறார். "இராமா நீ எளிமையைதான் விரும்பினாய் ஆனால் உனக்கு ஒப்பற்ற ஒரு கோவிலை உருவாக்கி தருவது எங்களின் முழுமுதல் கடமை அல்லவா ? எங்களுக்காக அதை நீ செய்து கொடு" என்று வேண்டினேன்.

புறப்படும்போது சவாரி செய்த ஆட்டோ ஓட்டுனரிடம் ஹிந்தியில் கேட்டேன் அடுத்த முறை நாங்கள் வரும் பொழுது இராமர் கோவில் வந்திருக்குமா என்று. "நிச்சயம் வர வேண்டும், வரும், நம்புங்கள், நம்பிக்கைதான் வாழ்க்கை" என்றார். இராமர் கோவில் வந்தால் அயோத்தி மிகப்பெரிய திருத்தலமாக மாறிவிடும், அதனால் அயோத்திவாசிகள் மிகவும் பயனைடைவார்கள் என்றார். விடைபெறும் போது "உங்கள் பெயர்" என்றேன். "அப்துல் நசீர்" என்றார். ஆட்டோவுக்கு முன்னே அப்போதுதான் பார்க்க நேர்ந்த "மாஷா அல்லா" என்ற வாசகமும் அதை உறுதி செய்தது.

No comments:

Post a Comment