Friday, April 24, 2015

ஜனக மகராஜாவின் நேர்மை

முன் ஒரு காலத்தில் விதர்ப தேசத்தில் நிர்மால்ய ரிஷி என்றொரு ரிஷி இருந்தார். அவர் வனத்தில் தங்கி இருந்தார். அந்த கால ராஜா மகாராஜாக்கள் அவரிடம் தமது பிள்ளைகளை அனுப்பி குருகுல வாசம் செய்ய வைத்து அதன் பின்னரே ஆட்சி பீடத்தில் அவர்களை அமர்த்துவார்களாம். அதற்குக் காரணம் ஆச்சாரங்களை அனுஷ்டிக்க வேண்டும் என்பது அல்ல, அந்த குருகுலத்தில் வளரும் பிள்ளைகள் மனதில் ஒழுக்கமும் பக்தி நெறியும் நிறைந்து இருக்கும்போது அவர்கள் மனதில் தூய்மையான எண்ணங்கள் மட்டுமே நிறைந்து இருக்கும்.
அதனால் அவர்கள் நாட்டு மக்கள் நலனையே தம் நலமாகக் கருதி நெறி தவறாமல் ஆட்சி செய்வார்கள் என்ற எண்ணம் இருந்தது. நிர்மால்ய ரிஷி தன் குருகுலத்தில் நான்கு அல்லது ஐந்து மாணவர்களைத் தவிர அதிகமாக யாரையும் சேர்த்தது இல்லை. ஒருவிதத்தில் பார்த்தால் அந்த குருகுலம் ராஜ பரம்பரையை உருவாக்கும் இடமாகவே அமைந்து இருந்தது. தினமும் காலையில் நிர்மால்ய ரிஷி ஒரு கதையைக் கூறுவார். அன்று மாலை அந்த கதைக்கான தாத்பர்யத்தை அவரவர் மனதில் எண்ணிய விதத்தில் கூற வேண்டும். அதைக் கொண்டே அவர்கள் மன நிலையை புரிந்து கொண்டு அடுத்த நாள் கதை அமையும்.

அன்றும் எப்போதும் போல தனது குருவிடம் சென்ற சிஷ்யர்கள் அவரைப் பணிந்து நிற்க குரு ஒரு கதையைக் கூறலானார்.''சீதையின் தந்தையான ஜனக மகராஜா நேர்மை தவறாமல் ஆட்சி புரிந்தவர்". நல்ல ஒழுக்கமும் பண்புகளும் நிறைந்தவர். அவருக்குத் தேவையான -செல்வம், சந்தானம், சூழ்நிலை மற்றும் சுகங்கள் என- அனைத்தும் இருந்தது. யோகக் கலையில் வல்லுனராக இருந்தார். ஆலயங்களுக்கு சென்றே வணங்க வேண்டும் என்ற நியதியை வைத்திருக்கவில்லை.
தான் இருந்த இடத்தில் அமர்ந்தவாறே கடவுட்களின் பெயரை உச்சரித்தவண்ணம் இருப்பார். அவரைப் பொறுத்தவரை மக்களுக்கு செய்யும் சேவையே கடவுளுக்கும் செய்யும் சேவை என நினைத்தவர். இத்தனை இருந்தும் அவருக்கு மனதில் அமைதி இல்லை. இராமாயண யுத்தமும் முடிந்து இருந்தது. ராமபிரானை தெய்வமாகவே அனைவரும் கருதினார்கள். அவர் நாமத்தை அனைவரும் உச்சரித்த வண்ணம் புண்ணியத்தை சேர்த்துக் கொண்டு இருந்தார்கள். இப்படியான சூழ்நிலையில் நாட்கள் செல்லச் செல்ல இது என்ன வாழ்க்கை என மனதில் எண்ணியவர் ஒருநாள் யாரும் எதிர்பாராத வகையில் தனது யோகக் கலையைக் கொண்டு தன் உயிரை நீக்கிக் கொண்டார்.
மரணம் அடைந்த அவரது ஆத்மாவை தேவலோகத்தில் இருந்து வந்த விமானம் தன்னுள் ஏற்றிக் கொண்டு மேலுலகத்துக்குச் செல்லத் துவங்கியது.அவர்கள் சென்ற வழியில் யமலோகம் வந்தது. ஜனக மகராஜா அங்கிருந்து வந்த பெரும் ஓலத்தைக் கேட்டு தனது தேரை நிறுத்து என்று கூறி விட்டு அதில் இருந்து இருந்து இறங்கி யம லோகத்தின் வாயிலை அடைந்தார். அவர் இறங்கிய இடமோ நரகம்.அவர் அந்த நரகத்தின் வாயிலை அடைந்ததுதான் தாமதம், அங்கிருந்து வந்து கொண்டு இருந்த அழுகையும் ஓலமும் நின்று விட்டது. என்ன வினோதம் இது, நான் இந்த வாயிலில் வந்த உடனேயே ஓலமும் அழுகையும் நின்று விட்டதே என எண்ணியவர் உள்ளே எட்டிப் பார்த்தார்.
அந்த நரகத்துக்குள் அவரால் யமராஜரின் அனுமதி இல்லாமல் நுழைய முடியாது என்பதினால் அங்கேயே நின்று கொண்டு இருந்தார். மெல்லியக் காற்று இதமாக வீசிக் கொண்டு இருக்க அவர் உடலைத் தொட்டபடி சென்ற காற்று உள்ளேயும் வீசியது. உள்ளே இருந்த ஆத்மாக்கள் வாயிலுக்கு வந்து வாயிலின் உள்ளே இருந்து அவரைக் கைகூப்பி வணங்கிக் கூறின 'ஐயா, நீங்கள் இந்த வாயிலை அடைந்த உடனேயே நாங்கள் படும் துயரங்கள் அனைத்தும் நீங்கி விட்டதை உணர்கின்றோம். எங்களுக்கு தரப்பட்டு உள்ள தண்டனை - சுட்டெரிக்கும் எண்ணைக் கொப்புரையில் எங்களை போட்டு இருந்தாலும், சாட்டை அடியை ஏற்றுக் கொண்டு இருந்தாலும், தலை கீழாக தொங்க வைத்து கீழே தணலை எரிய விட்டு இருந்தாலும் , அவை எதுவுமே எங்களுக்கு எந்த விதமான வலியையும் தரவில்லை. அதற்குக் காரணம் உங்கள் மீது பட்டுக் கொண்டே வரும் காற்று எங்களை தழுவும்போது அது சுகத்தை அல்லவா தருகிறது. ஐயா தயவு செய்து நீங்கள் எங்களுடைய இடத்தின் வாயிலிலேயே அமர்ந்து இருந்தால் போதும், எங்களுக்கு வேறு எதுவுமே தேவை இல்லை'.
அதைக் கேட்ட ஜனகரின் மனம் நெகிழ்ந்தது. அவர்கள் படும் துயரைக் கண்டவர் அப்படியே அவர் வாயிலிலேயே அமர்ந்து கொண்டார். சில மணி நேரம் கடந்ததும் யமராஜர் அங்கு வந்தார். வாயிலில் அமர்ந்து இருந்த ஜனக மகராஜவைக் கண்டு திகைத்துப் போய் அவரை மிக்க மரியாதையுடன் உள்ளே அழைத்துச் சென்றார். அவர் அங்கு அமர்ந்து கொண்டு இருந்ததற்கான காரணத்தைக் கேட்டதும் யமதர்மராஜர் கூறினார் ' மரியாதைக்குறிய ஜனக மகராஜாவே, நீங்கள் இந்த ஜீவன்களுக்காக இரக்கப்படலாமா? இவர்கள் யார் தெரியுமா? சொந்த மனைவியையும், கட்டியக் கணவனையும் வஞ்சித்தவர்கள், நல்ல நட்புடன் இருந்த நண்பர்களின் மனைவிகளை கற்பழித்தவர்கள், செல்வத்திற்காக தமது குடும்பத்தினரை கொலை செய்தவர்கள், ஏழைகளையும் ஏமாற்றியவர்கள். வாழ்நாளில் ஒரு கணம் கூட கடவுளை துதிக்காதவர்கள். ஆகவேதான் நீதிக்கு ஏற்ப அவர்களுக்கு இந்த தண்டனை தரப்பட்டு உள்ளது. அவர்களுக்காக நீங்கள் வருந்தலாமா?' எனக் கேட்க ஜனகர் கூறினார் '
யமதர்மராஜாவே, நீங்கள் நீதியை நிலை நாட்ட செய்தவை போதும். இவர்களின் அழுகுரல் என் நெஞ்சத்தைப் பிளந்து விட்டது. ஆகவே இவர்களை எனக்காக விடுதலை செய்து அவர்கள் திருந்தி வாழ இன்னொரு முறை அவர்களுக்கு வாழ்க்கை தந்து பாருங்கள்'. அதைக் கேட்ட யமதர்மராஜா கூறினார் ' ஐயா இவர்கள் செய்த பாவத்துக்கு பரிகாரமாக இவர்களுக்கு ராம நாம புண்ணியப் பலன் கிடைத்தால் மட்டுமே இவர்களை நான் விடுவிக்க முடியும்' என்றார். ஜனகர் சற்றும் யோசனை செய்யவில்லை. அவர் மனம் எப்போதுமே மக்களின் நலனில் மட்டுமே இருந்ததினால் தான் அதுவரை செய்து இருந்த புண்ணியங்கள அனைத்தையும் அங்கேயே யமராஜனிடம் தந்து விட்டு அவர்களை விடுவித்து தம்முடன் சொர்கத்திற்கு அழைத்துச் சென்றார்'

நீதி

இதைக் கூறி விட்டு இதன் தாத்பர்யம் என்ன என்று கேட்டார். யாராலும் சரியான விடையை தர இயலவில்லை. ஆகவே அந்தக் கதையின் தாத்பர்யத்தை தனது சிஷ்யர்கள் சரிவர அறிந்து கொள்ளாததினால் நிர்மால்ய ரிஷி அந்தக் கதையின் தாத்பர்யத்தைக் கூறினார் "ஜனக மகராஜா தனது புண்ணியங்கள் அனைத்தையும் நரகவாசிகளுக்கு கொடுத்து அவர்களை சொர்கத்திற்கு அழைத்துச் சென்றதின் தாத்பர்யம் என்ன என்றால், ஜனக மகராஜா நரகத்தில் இருந்து மீட்டுச் சென்றவர்களில் சிலர் அவருடைய வம்சாவளியிலும் பிறப்பு எடுக்கலாம். ஜனக மகராஜா செய்துள்ள நல்ல காரியத்தின் பலனாக அப்படி பிறப்பு எடுப்பவர்கள் மனதில் நல்ல எண்ணமே நிறைந்து இருக்கும். அதனால் ஜனகரின் வம்சாவளியினரும் நல்லெண்ணம் படைத்தவர்களாகவே வாழ்ந்து இந்த பூமிக்கு பெருமை சேர்ப்பார்கள். ஆகவே நாம் ஒவ்வொருவரும் எந்த ஒரு நிலையில் இருந்தாலும் நல்லதையே செய்ய வேண்டும். அப்படி செய்பவர்கள் நிலத்தில் உள்ள மண்ணிற்கு சமம் ஆனவர்கள். அந்த நிலத்தை உழுது எதை பயிரிட்டாலும் அது விளைந்து நல்ல பலனை அல்லவா தரும்''.

No comments:

Post a Comment