Monday, April 6, 2015

நாம் சிவராத்திரி விரதம் இருக்காமல் தவற விடலாமா!

அங்குலன் என்னும் வேடன் எதிரில் எந்த ஒரு விலங்கும் நடமாட முடியாது. சாதுவான பிராணி என்றாலும் கொன்று விடுவான். அப்படிப்பட்ட அங்குலனுக்கும் இறைவன் அருள்புரிய நினைத்தார்.
ஒருநாள்.....
அங்கலன் தன் வழக்கப்படி வலைகளை விரித்து விட்டுக் காத்திருந்தான். ஆனால், என்னவோ அன்று ஒரு சின்னஞ்சிறிய அணில் கூட அகப்படவில்லை. பசியோடு பகல்பொழுது போனது. அவன் சிரமத்தைப் பார்க்கப் பிடிக்காதவன் போல, சூரியன் மறைய ஆரம்பிக்க எங்கும் இருள் சூழ்ந்தது.
"காலை முதல் எதுவும் கிடைக்கவில்லை. வெறுங்கையோடு வீட்டிற்குப் போனால் மனைவி-பிள்ளைகளின் முகத்தில் எப்படி விழிப்பேன்? இரவு இங்கேயே ஏதாவது ஒருமரத்தின் மீது தங்கி, காலையில் போக வேண்டியது தான்'' என்று சிந்தனை ஓடியது. ஒரு மரத்தின் மேலேறி உட்கார்ந்தான்.
அது வில்வமரம் என்பது அங்குலனுக்குத் தெரியாது. அந்த மரத்தின் அருகில் ஒரு குளம் இருந்தது. இரவு நேரத்தில் ஏதாவது விலங்குகள் குளத்தில் நீர் குடிக்க வரும். அடித்து விடலாம் என்ற எண்ணத்தில் தோளில் இருந்த வில்லை எடுத்த அங்குலன் குளம்
தன் பார்வையில் நன்றாகத் தெரிய வேண்டும் என்பதற்காக.....
முன்னால் கிளைகளில் இருந்த வில்வ இலைகளை எல்லாம் உதிர்த்தான். அவை அனைத்தும் மரத்தின் கீழே இருந்த சிவலிங்கத்தின் மேல் விழுந்தன. குளம் தெளிவாகத் தெரிந்தது. நேரம் போனதே தவிர, ஒரு விலங்கு கூட வரவில்லை. ஆனால், அங்குலனுக்குத் தூக்கம் வந்தது.
""அடடா! இப்போது பார்த்துத் தூக்கம் வருகிறதே! தூங்கிக் கீழே விழுந்து விட்டால், உணவு தேட வந்த நான், விலங்குகளுக்கு
உணவாகி விடுவேனே. தூக்கத்தை விரட்ட என்ன செய்யலாம்? என்று எண்ணிய அங்குலன், மரத்தில் இருந்த வில்வ இலைகளைப்
பறித்து ஒவ்வொன்றாகக் கீழே போட்டான். அவையெல்லாம் கீழிருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன. பொழுது புலர்ந்தது. ஒரு விலங்கு கூட அகப்படவில்லை. பகல் முழுவதும் உண்ணாமலும், அதனால் இரவு தூங்காமலும் வீடு திரும்பினான்.
அந்த நாள் சிவராத்திரி என அறியாமலேயே அங்குலன் செய்த செயல்களை, சிவன், சிவராத்திரி வழிபாடாக ஏற்றுக் கொண்டு அவனுக்கு அருள் புரிந்ததார். அதன் பலனாக.....சிவகணங்களின் ஒருவனாக ஆகும் பேறு அங்குலனுக்குக் கிடைத்தது.
தெரியாமல் செய்தாலும் கூட, நல்ல செயல்களுக்கான நன்மை கிடைத்தே தீரும்.  இப்படி ஒரு கதை தெரிந்தும், நாம் சிவராத்திரி விரதம் இருக்காமல் தவற விடலாமா! அதனால் தான் முன்னதாகவே இந்தக் கதையைத் தந்து விட்டோம்.  

No comments:

Post a Comment