Monday, April 6, 2015

தேவர்களின் தெய்வீக சக்தியை விட, கற்பின் சக்தி மகத்தானது

வசிஷ்டரின் மனைவியான அருந்ததி கற்பில் சிறந்தவள். அவளது கற்புத்திறனை உலகத்திற்கே தெரிய வைக்க வேண்டும் என்ற ஆவலுடன், இந்திரன், சூரியன், அக்னி ஆகியோர் பூலோகம் வந்தனர்.
அருந்ததி தண்ணீர் எடுப்பதற்காக, இடுப்பில் குடத்துடன் நின்று கொண்டிருந்தாள். வசிஷ்டர் அப்போது ஆஸ்ரமத்தில் இல்லை. இந்திரன் அவளிடம் ""அருந்ததியே! உன் புகழ் தேவலோகத்தையே எட்டி விட்டது. எனவே உன்னைப் பார்க்க வந்துள்ளோம்,'' என்றான்.
""நான் தண்ணீர் எடுத்து வரும் வரை ஆஸ்ரமத்தில் காத்திருங்கள். வந்து விடுகிறேன்,'' என்று சொல்லி புறப்பட்டாள்.
"ஆற்றுக்கு செல்ல வேண்டாம். தானாகவே தண்ணீர் குடத்தில் நிரம்பட்டும்,'' என்று சொல்லி சூரியன் கையைக் காட்ட, குடத்தில் கால்பங்கு நிரம்பியது.
இந்திரன் தன் பங்குக்கு கால் பங்கு தண்ணீரை நிரப்ப, அரைகுடம் ஆனது. அக்னியால் முக்கால்பங்கை எட்டியது. அதன் பின் மூவரும் எவ்வளவோ முயற்சித்தும் குடம் முழுமை அடையவில்லை.
அருந்ததி அவர்களிடம்,"" தேவர்களின் தெய்வீக சக்தியை விட, கற்பின் சக்தி மகத்தானது '' என்று சொல்லி முழுக்குடமும் நிரம்பட்டும் என்றாள். அது நிறைகுடம் ஆனது. கற்புக்கரசியான அவளே நட்சத்திர அந்தஸ்து பெற்று வானில் மின்னிக் கொண்டிருக்கிறாள். திருமண நாளன்று மணமக்கள் அருந்ததியை வணங்குகின்றனர்.

No comments:

Post a Comment