Monday, April 6, 2015

ராம நாமத்தின் மகிமையால் தான்! இவனை சொர்க்கத்தில் சேர்ப்பதை தவிர வேறு வழியில்லை

வெங்கடாஜலபதிக்கு ஒரே மகன். அவரது மகன் வாசுதேவனுக்கு பக்தி சிறிதும் இல்லை. துறவி ஒருவரிடம் மகனின் நிலையைச் சொல்லி, ""சுவாமி! நீங்கள் தான் அவனுக்கு வழி காட்ட வேண்டும்'' என்று வேண்டினார்.
""கவலைப்படாதே! நான் பார்த்துக் கொள்கிறேன்,'' என்றார் துறவி.
மறுநாள் வெங்கடாஜலபதியின் வீட்டுக்கு வந்து, ராம நாமம் ஜெபித்தபடி பூஜை செய்தார். வாசுதேவன் தனது அறைக்குள்ளேயே
இருந்தான்.
இதையறிந்த துறவி, அறையை வெளிப்புறமாகப் பூட்டினார்.
உள்ளிருந்த வாசுதேவன் கதவைத் திறக்கும்படி கூச்சலிட்டான்.
""அடேய்! வீட்டிலே பூஜை நடக்குது! அதில் கலந்துகிடாமே உள்ளேயே இருக்குறியே! உனக்கு பொறுப்பிருக்கா! சரி...சரி...ராமா.. ராமான்னு பதினொரு தடவை சொல்லு... திறக்கிறேன்,'' என்றார் துறவி.
உள்ளிருந்த வாசுதேவன், ""ராமான்னு தானே சொல்லணும்...11 தடவை என்ன! 101 தடவை கூட சொல்றேன்... கதவைத் திறங்கய்யா சாமி!'' என்றான்
""அவ்வளவு லேசிலே திறக்க மாட்டேன்! தினமும் நீ ராமநாமம் சொல்லணும்! உன் விதி முடிந்து, நீ எமலோகம் சென்ற பிறகு எமன் அந்த புண்ணியத்தின் பலனைக் கேட்பான். ஆனால், நீ அதைக் கொடுக்க மாட்டேன் என பிடிவாதம் பிடிக்கணும். இதை நான் காரணமாத்தான் சொல்றேன்,'' என்றார்.
""இந்த சாமியாருக்கு பைத்தியம் போலும்! செத்த பிறகு, நடக்கப் போறதெல்லாம் இவருக்கு எப்படி தெரியும்? சரி..சரி..இப்போ கதவைத் திறந்தாகணும்! அவர் சொல்றதுக்கு தலையை ஆட்டி வைப்போம்,'' என சிந்தித்த வாசுதேவன், அவர் சொல்கிறபடி நடப்பதாக வாக்களித்தான்.
துறவி கதவைத் திறந்து விட்டார். காலம் கடந்தது. வாசுதேவனும் இறந்து போனான்.
எமலோகத்தில் சித்ரகுப்தர் ஏட்டைப் புரட்டி, ""பிரபு! பக்தி இல்லாத இந்த வாசுதேவன், நரகம் செல்ல வேண்டியவன். ஆனால், ஒரே ஒரு முறை நிர்ப்பந்தத்தின் பேரில் ராம நாமம் சொல்லியிருக்கிறான். அதற்கான புண்ணிய பலனை இவனிடமிருந்து தாரை வார்த்து பெற்றால் தான், இவனை நரகத்துக்கு அனுப்ப முடியும், '' என்றார்.
அப்போது தான்,"எதற்காகவும் ராம நாம பலனை எமதர்மனுக்கு கொடுக்கக்கூடாது' என்று துறவி சொன்னது அவனது நினைவுக்கு வந்தது.
"" எமதர்மனே! ராமநாம பலனை எக்காரணம் கொண்டும் தரமாட்டேன். வேண்டுமானால், என்னை நரகத்தில் இப்போதே தள்ளுங்கள்,'' என்று பிடிவாதமாகச் சொல்லி விட்டான்.
சித்ரகுப்தர்,""புண்ணிய பலன் இருக்க, ஒரு ஜீவன் நரகம் செல்ல முடியாது'' என்றார்.
என்ன செய்வதென புரியாத எமதர்மன் இந்திரன் உதவியை நாடினான்.
குழம்பிய இந்திரன், "" பிரம்மாவிடம் தீர்வு கேட்போம்'' என்றான்.
பிரம்மாவோ,""விஷ்ணுவிடம் இவனை ஒப்படைப்போம்'' என்றார் .
வைகுண்ட வாசலில் நின்றபடி, "" நாராயணா! இந்த ஜீவன் அடைய வேண்டிய கதி தான் என்ன? ஒரு முறை ராமநாமம் சொன்ன இவனை என்ன தான் செய்வது? '' என ஓலமிட்டனர் அனைவரும்.
""சித்திரகுப்தன், எமதர்மன், இந்திரன், பிரம்மா, நாராயணனாகிய நான் என நம் அனைவரின் தரிசனமும் ஒன்று சேர இவனுக்கு கிடைத்ததே ராம நாமத்தின் மகிமையால் தான்! இவனை சொர்க்கத்தில் சேர்ப்பதை தவிர வேறு வழியில்லை,'' என்று நாராயணன்
சொன்னார். வாசுதேவனுக்கு சொர்க்கத்தின் கதவு திறக்கப்பட்டது. 

No comments:

Post a Comment