Monday, April 6, 2015

நீயே நிஜமான தர்மவான்'

மன்னன் விக்ரமாதித்தன் குதிரையில் சென்று கொண்டிருந்தான். வழியில், ஒரு பசுமாட்டின் அபயக்குரல் கேட்டது. குரல் வந்த திசை நோக்கிச் சென்ற மன்னன், சேற்றில் அது சிக்கிக் கிடப்பதைக் கண்டான். பசுவை காப்பாற்ற எவ்வளவோ முயன்றும், விக்ரமாதித்தினால் முடியவில்லை.
என்ன செய்வதென தெரியாமல் திகைத்து நின்ற போது, ஒரு சிங்கம் ஒன்று வந்தது. பசுவின் மீது பாய முயன்றது. வாளை உருவிய விக்ரமாதித்தன் சிங்கத்தை விரட்ட முயற்சித்தான். சிங்கமோ விடுவதாக இல்லை.
அங்கு இருந்த பெரிய ஆலமரத்தில் கிளி ஒன்று வசித்தது. அது விக்ரமாதித்தனிடம், ""மன்னா! பசுவோ சேற்றில் உயிர் விடப் போவது உறுதி. அதைச் சிங்கத்திடமே விட்டு விடு. அதைக் காப்பாற்றுவதாக எண்ணிக் கொண்டு உன் உயிரை ஏன் பணயம் வைக்கிறாய்? சிங்கம் உன்னைக் கொன்று விட்டால் என்ன செய்வாய்?' என்று கேட்டது.
அதற்கு அவன், ""கிளியே! அதர்ம வழியில் சிந்திக்காதே. வலிய மிருகம் எளிய மிருகத்தின் உயிரைப் பறிக்க நினைப்பது இயற்கையே! எனினும், பிறர் உயிரைக் காப்பாற்ற தன்னுயிரை அளிப்பவனே பாக்கியசாலி. கருணையால் செய்யும் எந்த செயலும் கடவுளுக்குரியதே,'' என்று பதில் அளித்தான்.
இதைச் சொன்னதும் பசு தர்மதேவதையாகவும், இந்திரன் சிங்கமாகவும், பூமாதேவி கிளியாகவும் தோன்றினர்.
"நீயே நிஜமான தர்மவான்' என்று புகழ்ந்து ஆசியளித்தனர்.

No comments:

Post a Comment