Friday, April 24, 2015

பார்க்கும் பார்வையில் இருக்குது அழகு----தெனாலி ராமன்

பணக்காரனோ அல்லது ஏழையோ, எவராயினும் சரி; மனிதராய்ப் பிறந்த அனைவருக்குமே வாழ்வில் ஏற்றத் தாழ்வுகள் வருவது சகஜமே. அரசனாக இருந்தாலும்கூட, இதுபோன்ற நிகழ்வுகளிலிருந்து தப்பிக்க இயலாது. விஜயநகர ராஜாவான கிருஷ்ண தேவராயருக்கும் இதுபோன்ற ஒரு நிலைமை ஒருநாள் ஏற்பட்டது!
இன்னிசையைக் கேட்டும், நர்த்தகிகள் ஆடலைக் கண்டும், அரசவை விதூஷகன் எவ்வளவோ வேடிக்கை காட்டியும்கூட அவரது மனப் பாரம் அன்று சற்றும் குறையவே இல்லை. அவர்கள் அனைவரும் பல வழிகளில் முயன்று பார்த்தும், அவரை மகிழ்ச்சியடையச் செய்ய முடியவில்லை. வேறு ஏதாவது கலை நிகழ்ச்சிகளைக் காணச் சொல்லி, சிலர் ஆலோசனை சொன்னார்கள். ராஜாங்க வேலைகளை சற்று ஒதுக்கிவிட்டு, வெளியில் எங்காவது சென்றுவரும்படி சிலர் அறிவுறுத்தினர். அவரைப் பீடித்திருக்கும் துர்த்தேவதைகளை விரட்ட ஒரு யாகம் செய்யலாமே எனச் சிலர் யோசனை கூறினர்.
இறுதியாக, தெனாலி ராமன் ஒரு யோசனை சொன்னான். "அரண்மனைக்கு வெளியே நான் சில வெகு அழகான மலர்களைப் பார்த்தேன், மஹாராஜா! நீங்கள் மட்டும் சம்மதம் தந்தால், நான் உங்களை அங்கே அழைத்துச் சென்று அவற்றை உங்களுக்குக் காட்டுவேன். அதனாலாவது உங்கள் மனக்கவலை குறைகிறதா எனப் பார்க்கலாமே' என அரசரைப் பார்த்துப் பணிவாகச் சொன்னான். சற்றே சலிப்புடன், வேண்டா வெறுப்பாக 'சரி, இதையும்தான் முயற்சி செய்து பார்ப்போமே' என தேவராயர் அதற்குச் சம்மதித்தார்.
மறுநாள் காலை, அரசரும், தெனாலி ராமனும் ஒரு ரதத்தில் ஏறி அரண்மனையை விட்டு வெளியே வந்தனர். நகரின் எல்லைப்புறத்தருகே சில சிறுவர்கள் அங்கே விளையாடிக் கொண்டிருந்தனர். அங்கிருந்த சேற்றில் சில சிறுவர்கள் குதித்தனர்; சிலர் அதில் புரண்டு விழுந்து, எழுந்து ஆடிக் கொண்டிருந்தனர்; சிலர் சேற்றை ஒருவர் மீது ஒருவர் எறிந்து கும்மாளம் போட்டனர்; இன்னும் சில குழந்தைகள் அமைதியாக அமர்ந்து, சேற்றைக் குழைத்து, அவரவர்க்கு பிடித்தமான வடிவங்களைச் செய்துகொண்டிருந்தனர்.
.
இவற்றையெல்லாம் ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டிருந்த கிருஷ்ண தேவராயர் முகத்தில் கொஞ்சம்கொஞ்சமாக ஆனந்தம் மலரத் தொடங்கியது. ரதத்தை விட்டுக் கீழிறங்கி, அவர்களுடன் தாமும் கலந்து கொண்டார். அந்தச் சிறார்களுடன் சமமாக அமர்ந்துகொண்டு, தானும் சேற்றைக் குழைத்து, அழகழகான வடிவங்களைச் சமைத்து, அந்தக் குழந்தைகள் கைகளில் கொடுத்து மகிழ்ந்தார். அப்போதுதான் அவருக்கு 'அது' நினைவுக்கு வந்தது!
மலர்களைக் காட்டத்தானே தெனாலி ராமன் இங்கே என்னை அழைத்து வந்தான். ஆனால், இங்கேயோ ஒரு பூவைக் கூடக் காணோமே! குழப்பத்துடன் அவனைப் பார்த்து, எங்கே நீ காட்டுவதாகச் சொன்ன அழகிய மலர்கள்? இங்கே ஒண்ணுமே இல்லையே?' என்றார்.

"அரசே! இவ்வுலகைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல், கள்ளமின்றி இப்படிச் சிரித்துக்கொண்டு ஆடிக்கொண்டிருக்கும், இந்தப் பச்சிளம் பாலகர்களைக் காட்டிலும் அழகான மலர்கள் இருக்க முடியுமா? எனக்கென்னவோ இவர்கள்தான் கடவுள் படைத்த மலர்களிலேயே மிகவும் அழகான மலர்களாகத் தோன்றுகிறது' எனத் தெனாலி ராமன் பதிலிறுத்தான்.

அதைக் கேட்ட தேவராயர், தெனாலி ராமன் கூற்றிலிருக்கும் உண்மையைப் புரிந்து கொண்டார். இனி, இதுபோல அடிக்கடி வெளியே வந்து, தனது கவலைகளை மறக்கவும் முடிவு செய்தார்

No comments:

Post a Comment