Monday, April 6, 2015

குழந்தை சிவன்

ராவணனின் மனைவியான மண்டோதரி, திருமணத்துக்கு முன்பே சிவராத்திரி விரதத்தை தவறாது மேற்கொள்வாள். சிவன் நேரில் காட்சி அளித்து, ""மண்டோதரி! என்ன வரம் வேண்டும்?'' எனக் கேட்டார்.
""சுவாமி! நான் விரும்பும் நேரமெல்லாம் நீங்கள் தரிசனம் அளிக்க வேண்டும்'' என்றாள்.
""அப்படியே ஆகட்டும்'' என்றார் சிவன்.
மண்டோதரிக்கும், ராவணனுக்கும் திருமணம் நடந்தேறியது.
ஒருநாள் இரவு தூக்கம் வராமல் தவித்த மண்டோதரி, சிவதரிசனம் பெற விரும்பினாள்.
சிவனும் பள்ளிக்குப்பாயம் என்னும் உடை அணிந்து, காவலர் போல அவளுக்கு காட்சியளித்தார். "பள்ளி குப்பாயம்' என்பது இரவில் காவலர்கள் அணியும் உடை. சிவதரிசனம் கண்ட மண்டோதரி, ராவணன் கட்டிலில் தூங்கிக் கொண்டிருப்பதையும் மறந்து சிவனைத் துதித்துப் பாடத் தொடங்கினாள்.
பாடல் கேட்ட ராவணனுக்கு தூக்கம் கலைந்தது.
""யாரங்கே! மண்டோதரி யாருடன் பேசிக் கொண்டிருக்கிறாய்?'' என்று கட்டிலில் இருந்து எழுந்தான்.
சிவபெருமானோ காவல்வீரன் கோலத்தை மறைத்து, குழந்தையாக தன்னை மாற்றிக் கொண்டார். குழந்தையைக் கண்ட ராவணன், ""யார் இந்த குழந்தை? இரவில் இதோடு என்ன பேசுகிறாய் மண்டோதரி!'' என்று ஆச்சர்யத்துடன் கேட்டான்.
""பணிப்பெண்ணின் குழந்தை இது. என்னிடம் அடைக்கலமாகக் கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறாள்,'' என்று சொல்லி ராவணனை மண்டோதரி சமாதானப்படுத்தினாள்.
ராவணன் தூங்க ஆரம்பித்ததும், குழந்தை சிவன், மண்டோதரியிடம் இருந்து விடைபெற்று கைலாயம் புறப்பட்டார்.
இந்த நிகழ்ச்சியின் அடிப்படையில், திருவாசகத்தின் குயில்பத்து பாடலில் "மண்டோதரிக்கு அருள்புரிந்த சிவபெருமானே' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment