Sunday, April 26, 2015

இராமாயணத்தில் வாழ்வியல் தர்மங்கள்!

இராமாயணத்தில் வாழ்வியல் தர்மங்கள்!
மாலா பரதன்
வியாஸ பகவான் மஹாபாரதத்தை எழுத நினைத்தாலும் ஸ்ரீமஹா கணபதியின் தந்தத்தை ஒடித்து எழுத ஒப்புக்கொண்டதால் தான் நமக்கு மஹாபாரதம் என்னும் காவியம் கிடைக்கப்பெற்றது.
“கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம்
ஆருஹ்ய கவிதா சாகம் வந்தே வால்மீகி கோகிலம்”
இராம இராம என்னும் இனிய சொல்லை இனிமையாகக் கூவிக்கொண்டு கவிதையாகிற கிளையில் ஏறி அமர்ந்திருக்கும் வால்மீகி என்னும் குயிலை வணங்குகிறேன்.
வால்மீகி மஹரிஷி இயற்றிய ஆதிகாவ்யமான ஸ்ரீமத் இராமாயணம் ‘காந்தா ஸம்மிதம்’ என்கிற முறையிலேயே போதிக்கிறது. உலகில் நாம் அனுஷ்டிக்க வேண்டிய தர்மங்களை போதிப்பதற்கு வேதமும், ஸ்மிருதிகளும் இருந்தாலும் அதே விஷயங்களை அறிவுறுத்துவதற்கு இராமாயணத்தில், பிரபு ஸம்மிதம், ஸீஹருத் ஸம்மிதம், காந்தா ஸம்மிதம் என்ற மூன்று போதனா க்ரமத்தில், காந்தா ஸம்மிதம் என்னும் முறையையே தீவிரமாக போதிக்கிறது.
யஜமானன் சேவகனைப் பார்த்துக் கட்டளையிடும் கிரமம் முதல் முறை (பிரபு ஸம்மிதம்) இதில் சேவகன் யஜமானனைப் பார்த்து ஏன் கட்டளை இடுகிறீர்கள்? என்று கேட்க முடியாது.
ஒரு சிநேகிதன் இன்னொரு சிநேகிதனைப் பார்த்து, “உனக்கு இந்த வேலையைச் செய்தால் இதனால் அனுகூலம் உண்டாகும். வேறு விதமாகச் செய்தாயேயானால் கெடுதல் ஏற்படும்” என்று சொல்வது ஒரு முறை. இதில் சொல்கிறவனும், கேட்கிறவனும் சமமான அந்தஸ்தில் இருந்தாலும், ஒருவன் தெரிந்தவன், மற்றொருவன் தெரியாதவன் என்கிற வித்யாஸம் உண்டு. சொல்கிறவன் தெரிந்தவனாகவும், சிநேகிதனாகவும் இருக்கிறபடியால் நம்முடைய ஹிதத்தையே சொல்வான் என்கிற விஸ்வாசத்துடன் அவன் சொல்வதைக் கேட்கத்தோன்றும். இது இரண்டாவது முறை. வேதம் இடும் கட்டளைகள் பிரபு ஸம்மிதத்திலும் தர்மசாஸ்திரங்கள், மனுஷ்யர்கள் சிரேயஸ்ஸை அடையவேண்டுமென்று எடுத்துச் சொல்லும் சாதனங்கள் இரண்டாவது முறையான ஸீஹ்ருத் ஸம்மிதத்திலும் சேரும். தனக்கு ஆசை இருப்பதைக் காட்டிக் கொள்ளாமல் அகஸ்மாத்தாக (தற்செயலாக) ப்ரஸ்தாவம் செய்து ஒரு ஸ்திரீ தன் பர்த்தா மூலம் தன்னுடைய மனோரதத்தைப் பூர்த்தி செய்து கொள்வது ‘காந்தா ஸம்மிதம்’. மனிதர்களுக்கு லகுவான வழியில் தர்மவிஷயமான ஞானம் ஏற்படுவதற்கு வழிவகுக்கும் முறையாகும்.
இராமாயணத்தில் வரும் மஹரிஷிகள் வானப்ரஸ்தர்களாகவும், கிருஹஸ்தர்களாகவும் இருந்திருக்கிறார்களே தவிர, ஒருவரும் ஸந்யாஸியாக இல்லை. தவிர ஸத்கதி அடைந்ததாக இராமாயணத்தில் சொல்லப்படும் எல்லாரும் உத்தமமான லோகங்களுக்குப் போனதாகச் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, ஒருவரும் வைராக்யமடைந்து ஆத்மஞானம் பெற்று இங்கேயே கைவல்யமாகிற பரம முக்தியை அடைந்ததாகக் காணவில்லை. தர்மானுஷ்டானம், யக்ஞ யாகாதிகள், தபஸ், யோகம், உபாஸனை முதலான கர்ம காண்டத்தில் அடங்கிய ஸாதனங்களையே அதிகமான கதாபாத்திரங்கள் கையாளுவதால் கர்ம காண்டபரமான இராமாயணத்தில், ஆத்மவிசாரம், ச்ரவண, மனன, நிதித்யாஸனாதிகள் ஆகியன எடுத்துச் சொல்லப்படவில்லை.
தசரத சக்ரவர்த்தி தன் நான்கு புத்ரர்களுள் ஸ்ரீஇராமரிடம் காட்டிய வாத்ஸல்யம் ஒரு தாய் தன் குழந்தையிடம் காட்டும் அன்பை விட மேலாக இருந்தது. மஹா தேஜஸ்வியான விஸ்வாமித்ரர் யாக ஸம்ரக்ஷணத்திற்காக ஸ்ரீஇராமரைத் தன்னுடன் அனுப்புமாறு கேட்டவுடன் தசரதர் மூர்ச்சையடைந்தவர் போல் ஆனார். “பதினாறு வயது கூட ஆகாத என் இராமன் அரக்கர்களுடன் போர் புரியும் வல்லமை படைத்தவனல்லன் என் அரசவையிலிருந்து வேண்டிய அளவு சேனையுடன் நானே அவ்வரக்கர்களுடன் போர் புரிய உங்களுடன் வருகிறேன்” என்று சொன்னார். காரணம் இராமனை விட்டுப் பிரிவது அவருக்கு அவ்வளவு துக்கத்தை அளிப்பதாக இருந்த காரணம்தான். பின்னர் வசிஷ்டரால் விஸ்வாமித்ரரின் தவ வலிமையும் தர்ம சிந்தனையும் விளக்கப்பட்டவுடன் சஞ்சலம் நீங்கி இராமரை அனுப்ப ஒப்புதல் அளித்தார்.
மிதிலை மன்னர் ஜனகரின் மந்திரிகள் இராமர், ‘சிவதனுசு’வை நாணேற்றி நடுவில் உடைந்த செய்தியையும் அதன் பலனாக அவ்வரசரின் மகள் சீதா தேவியை விவாஹம் செய்து கொடுக்க சங்கல்பித்திருப்பதையும், அயோத்திக்கு வந்து தெரிவித்தவுடன், தசரதர் பரம சந்தோஷமடைந்து, வசிஷ்டர், வாமதேவர், மற்ற மந்திரிகள் எல்லாரிடமும், “ஜனகருடைய நகரத்திற்கு நாம் சீக்கிரமே போகலாம். காலம் கடத்த வேண்டாம்” என்று ஆணையிட்டார். பல மாதங்கள் பிரிந்திருந்த இராமரைச் சந்திக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியே இதில் முதலிடம் வகிக்கிறது.
இராம பட்டாபிஷேகம், கைகேயி கேட்ட வரத்தினால் தடைபட்டுப் போக தசரதர் புலம்பி அழுது பலவாறாகக் கெஞ்சியும், கோபமடைந்து கைகேயியை கண்ணால் சுட்டெரிப்பவர் போல் பார்த்தும் துக்கம் மேலிட்டவராய்க் கூறும் வார்த்தைகளில் “கொடிய விஷப் பாம்பைப் போன்ற உன்னை அரசகுமாரியெனக் கருதி என்னுடைய அழிவுக்காக அறியாமையால் என் மனைவியாக்கிக் கொண்டேன். சூரியனில்லாமல் உலகமும், தண்ணீரில்லாமல் பயிரும் ஒருக்கால் வாழக்கூடும். ஆனால் இராமனை விட்டுப் பிரிந்தால் என் உயிர் உடலில் தங்காது. உன்னைக் கும்பிடுகிறேன். உன் கால்களைத் தொடுகிறேன்” என்றெல்லாம் தன்னிலை மயங்கிப் பேசினார்.
திஷ்டேல்லோகோ வினா ஸூர்யம் ஸஸ்யம் வா ஸலிலம் வினா
ன து ராமம் வினா தேஹே திஷ்டேத்து மம ஜீவிதம்
ஆனால் இதற்கெல்லாம் கைகேயி சிறிதளவும் வருந்தவுமில்லை, மனம் மாறவுமில்லை. கடைசி பிரயத்தனமாக இக்ஷ்வாகு குல மன்னர் சுமந்திரரிடம், ஸ்ரீஇராமனைத் தொடர்ந்து செல்ல நான்கு வகைப் படைத்தொகுதி யொன்றும், தானிய கோசமும், தன கோசமும் ஜன ஸஞ்சாரமற்ற வனத்தில் வசிக்கப் போகும் இராமனுடன் அனுப்பும்படி சொன்னார். யாகங்கள் செய்து நிறைய தக்ஷிணைகளைக் கொடுத்து ரிஷிகளுடன் வனத்தில் சுகமாக வாழட்டும் என்ற எண்ணத்தில். இவை சாதாரணமாக ஒரு தாயாருக்குத்தான் தோன்றும். தன் மகன் தன்னை விட்டுப் பிரிந்து போகும் பொழுது தோன்றும். ஆனால் கௌஸல்யா தேவி நடந்த கொடூரங்களைக் கண்டு கலங்கி அழுதாலும்,இராமபிரானின் ஆறுதல் வார்த்தைகளால் தன் துக்கத்தைக் கட்டுப்படுதிக் கொண்டு தேன், தயிர், அக்ஷதை, நெய் ஆகியவற்றால் ‘ஸ்வஸ்த்யயனம்’ என்னும் சாந்தி ஹோமத்தையும், ஆயுராரோக்ய ஹோமத்தையும் புரோகிதர்களைச் செய்யச் சொல்லி ஸ்ரீஇராமனின் வனவாஸத்திற்கு க்ஷேமத்திற்காக ஆசீர்வாதம் செய்வித்தாள். எல்லாவற்றிற்கும் மேலாக சுமித்ரை, தன் மகன் லக்ஷ்மணனை இராமனின் நிழலாக அனுப்பி வைத்தாள். இதை
‘ஆகாதது அன்றால் உனக்கு; அவ்வனம் இவ்வயோத்தி
மாகாதல் இராமன் நம் மன்னவன், வையம் ஈந்தும்
போகா உயிர்த்தாயர் நம் பூங்குழல் சீதை - என்றே
ஏகாய், இனி இவ்வயின் நிற்றலும் ஏதம் என்றாள்.
பின்னும் பகர்வாள், மகனே! இவன் பின் செல்; தம்பி
என்னும்படி அன்று, அடியாரின் ஏவல் செய்தி
மன்னும் நகர்க்கே இவன் வந்திடின் வா; அது அன்றேல்
முன்னம் முடி’ என்றனள் வார்விழி சோர நின்றாள்
என வர்ணிக்கிறார் கவி.
மேலும், சீதை, இராமர், லக்ஷ்மணன் மூவரும் சுமந்திரர் தேரோட்ட வனவாசத்திற்குப் புறப்பட்டதும், தசரதர் ஸ்ரீஇராமருடைய தேர்ப் பாதையில் தூசிகளைக் கூடக் காணாத பொழுது மனவேதனையால் சோர்ந்து பூமியில் வீழ்ந்துவிட்டார். கௌஸல்யா தேவி துன்பமே உருக்கொண்டு பெருமூச்செறிய அழுதாள். ஆனால் தருமத்தில் நிலைபெற்ற சுமித்ரை பின் வருமாறு பேசினாள். “ஸ்ரீஇராமன் சூரியனுக்கு சூரியனாகவும், அக்னிக்கு அக்னியாகவும், பிரபுக்களுக்கெல்லாம் பிரபுவாகவும் ஸ்ரீக்கு ஸ்ரீயாகவும், கீர்த்திக்கும் முதலில் கீர்த்தியளித்தவனாகவும், பொறுமைக்கும் முதலில் பொறுமையாகவும் ஆவான். அப்படிப்பட்டவனுக்கு என்ன குணக்குறைவு? வனத்திலிருந்தாலென்ன? நகரத்திலிருந்தாலென்ன? மரவுரி உடுத்திச் செல்லும் வெல்ல முடியாத வீரனை சீதை வடிவில் லக்ஷ்மி தேவியே பின்பற்றிச் செல்கிறாள். அவனுக்கு அடைய முடியாதது ஏதேனுமுண்டோ? வனவாசத்திலிருந்து மீண்டும் திரும்பி வரும் அவனை நீங்கள் காண்பீர்கள். சோகத்தையும், மோகத்தையும விட்டுத் தள்ளுங்கள் உங்களுக்கு நான் கூறுவது ஸத்தியம் என்றாள்.
இராம லக்ஷ்ணர்கள், குஹன் ஸ்தலபதியாக ஆண்டு கொண்டிருக்கும் இடத்திற்கு வந்ததும் அவர் மிகுந்த சந்தோஷமடைந்தார். அயோத்தி மன்னர் சக்ரவர்த்திக்கு இவர்கள் சிற்றரசர்கள் ஆனதால் நல்வரவு கூறி பக்ஷணங்களும் பானங்களும் உபசாரப் பொருள்களும் கொண்டு வந்து வைத்தார். வனவாசத்திற்கு வந்திருந்தபடியால் அவை எதையும் ஏற்றுக்கொள்ள முடியாதென்று நிராகரித்துவிட்டு, குதிரைகளுக்கு மட்டும் தீனி கொடுக்குமாறு கேட்டார். மறுநாள் கங்கையைக் கடந்து போக ஏற்பாடு செய்யும்படி சொல்லிவிட்டு சுமந்திரரை, விரைவில் திரும்பிப் போகுமாறு பணித்தார். “அயோத்திக்குச் சென்று இங்கு நானும், சீதையும், லக்ஷ்மணனும், சந்தோஷமாக இருப்பதாகத் தெரிவித்து மன்னர் வருத்தப்படாமலிருக்குமாறு செய்யுங்கள்” என்றார். “தாயாரிடம் வந்தனம் தெரிவியுங்கள். பரதனை இளவரசராக அபிஷேகம் செய்தபின் எங்களைப் பிரிந்த தாபம் உங்களை அதிகம் வருத்தாது” என்று பேசிக்கொண்டே போனார். சுமந்திரரோ, “காகுஸ்தா! உங்களுடைய பிரிவால் புத்ரனைப் பிரிந்த தாய்போல் வருந்தும் அந்த நகரத்திற்கு நான் மட்டும் தனியே போகமாட்டேன். வனவாசம் முடித்து இதே தேரிலேயே உங்களை மீண்டும் நகரத்திற்கு அழைத்துப் போகிறேன்” என்று மீண்டும் மீண்டும் கெஞ்சினார். உடனே இராமர் “நீங்கள் நகரத்திற்குத் திரும்பியதைக் கண்டால்தான் என் சிற்றன்னை கைகேயி இராமன் வனவாஸம் போய்விட்டான் என்ற நம்பிக்கையை அடைவாள். நான் வனத்திற்குச் சென்று விட்டதால் த்ருப்தி அடைந்த தேவியார் பிறகு தார்மிகரான அரசரைச் சொன்ன சொல் தவறியதாகச் சந்தேகிக்க மாட்டாள். தூதுவராக என்னென்ன செய்திகள் யார் யாருக்குச் சொல்ல வேண்டுமோ அவ்வவ்வாறு சொல்லுங்கள்” என்று அனுப்பி வைத்தார்.
‘மனித மனத்திற்கு முகமே கண்ணாடி’ என்று சொல்வார்கள். தீங்கிழைத்தவர்களின் மனம் தான் பிறருக்குச் செய்த தீங்கை அவர்கள் அனுபவிக்கிறார்களா? என்றும் பார்க்கத் தோன்றும், இதையே வால்மீகி கைகேயியின் மனநிலையாக வர்ணிக்கிறார். மேலும் இராமர் ‘பித்ரு வாக்ய பரிபாலனம்’ செய்தவர் இம்மியளவும் அவர் கைகேயிக்குக் கொடுத்த வாக்கிலிருந்து மீற விரும்பவேயில்லை.
இராம லக்ஷ்மணர்கள் வனவாசத்தின் பொழுது ஸீதாபஹரணத்திற்குப் பின் ஜடாயு மூலம் சுக்ரீவனிருக்குமிடம் தேடி அழைந்தார்கள். சுக்ரீவ ஸக்யத்திற்குப்பின் அவர் ஸீதை, அரக்கனால் கவர்ந்து செல்லப்பட்டதைப் பார்த்ததாகவும், அவள்தான் சீதை, சந்தேகமில்லை என்றும் கூறிவிட்டு அவனால் எறியப்பட்ட உத்தரீயத்தில் உள்ள அழகான ஆபரணங்களை பத்திரப்படுத்தி வைத்திருப்பதாக எடுத்துக் கூறி அவற்றைக் காட்டினார். இராமர் அவற்றை மார்புடன் அணைத்து, மிகுந்த பெருமூச்செறிந்தார். கண்ணீருடன் புலமிக் கொண்டே லக்ஷ்மணனைப் பார்த்து, “சீதையால் எறியப்பட்ட இந்த ஆபரணங்களைப் பார்” என்று சொன்னவுடன்
ந ஜானாமி கேயூரம் ஞ ஜானாமி குண்டலே
நூபுரே த்வபி ஜானாமி நித்யம் பாதாபி வந்தனாத்
“கேயூரங்கள் நான் அறியேன், குண்டலங்களையும் பார்த்திலேன், பாதங்களை அபிவாதனம் செய்த பழக்கத்தால் சிலம்புகளை மட்டும் நான் அறிவேன்” என்று கூறுகிறார். ‘பிறன் மனை நோக்காமை’ என்ற தர்மம் இங்கு போதிக்கப்படுகிறது.
இது மாதிரி ‘வாழ்வியல் தர்மங்கள்’ இராமாயணத்தில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் போதிக்கப்படுகின்றன. நாமும் முடிந்த வரை அனுஷ்டிப்போமாக.

No comments:

Post a Comment