Monday, April 6, 2015

இரங்குவான் இறங்குவான்

அதிசயம் அநேகமுற்ற பழநி' என அருணகிரிநாதரால் பாடப்பட்ட பழநி ஆண்டவன் சந்நிதியில் மூன்று வயது குழந்தையைக் கிடத்தி விட்டு பெற்றோர் அழுதனர்.
""பழநியாண்டவா! நீயே இப்படி செய்யலாமா? எங்கள் குழந்தையைக் காப்பாற்று! உன்னை விட்டால் எங்களுக்கு வேறு யார் துணை?'' என்று கதறினார்கள். இரவு வந்தது. அங்கேயே படுத்து விட்டனர்.
மறுநாள் காலை அதிசயம் நிகழ்ந்திருந்தது.
குழந்தையின் உடம்பில் இருந்த முத்துக்கள் குறைந்து இருந்தன. ஆம்! வைசூரியால் பாதிக்கப்பட்ட குழந்தைக்காகவே அதன் பெற்றோர் முருகனிடம் வேண்டிக் கொண்டிருந்தனர்.
பாதிப்பு குறைந்ததும் வீடு திரும்பினர். முத்துக்கள் மெல்ல மெல்ல காய்ந்து உதிரத் தொடங்கியது. ஆனால், குழந்தைக்கு பார்வை போய் விட்டது. அதற்காகப் பெற்றோர் வருந்தினாலும், "இந்தமட்டில் உயிர் பிழைத்ததே' என்று ஆறுதல் அடைந்தனர்.
அந்தக்குழந்தை தான் பிற்காலத்தில் தலைசிறந்த மாம்பழக் கவிச்சிங்க நாவலர் என்று பெயர் பெற்றவர். இவர் எழுதிய பாடல்கள் பலவும் இன்று பழநியில் பாடப்படுகின்றன. பக்திச்சுவையுடன் பாட வல்ல இவர், ஒருநாள் பழநியாண்டவன் சந்நிதியில் பாடிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில், பால்காவடி சுமந்து வந்த பக்தர்கள் சிலர் சந்நிதியில் கூடியிருந்தனர்.
"பழநியாண்டிக்கு அரோகரா' என்ற குரல் எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது. அதைக் கேட்ட நாவலருக்கு ஆனந்தக்கண்ணீர் பெருகியது.
அப்போது சிலர், ""கண் படைத்தவர்களுக்கே பழநிஆண்டவன் தரிசனம் சுலபமில்லையே! அப்படியிருக்க பார்வை இல்லாத இவர் இங்கு எதைப் பார்க்கப் போகிறார்?'' என்று ஏளனமாகப் பேசினர்.
இதைக் கேட்டு வருந்திய நாவலர், ""சகல வசையும் ஒதுக்கி எனைக் காப்பது என்ன மலை உனக்கு! அசைவில் மனத்தர் தொழும் பழனாபுரி ஆண்டவனே,'' என்று பாடினார்.
பழநியாண்டவனுக்குச் செய்யப்படும் பால், பஞ்சாமிர்த அபிஷேகம், விபூதிக் காப்பு அனைத்தும் நாவலரின் மனக்கண்ணில் அப்படியே "நேரலை' போலத் தெரிந்தது. அப்புறம் என்ன!
சந்நிதியில் நடக்கும் ஒவ்வொன்றையும் அப்படியே அவர் சொல்ல ஆரம்பித்தார். இதைக் கேட்ட பக்தர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். வம்பு பேசியவர்கள் வாயடங்கி தலை குனிந்தனர். அர்ச்சகர் பிரசாதம் கொண்டு வந்து நாவலரிடம் அளித்தார்.
வம்பு பேசும் மனிதர்களை யாரும் பொருட்படுத்த தேவையில்லை. உண்மை பக்தர்களுக்காக பழநியாண்டவன் இரங்குவான். ஏன் மலையை விட்டும் கூட இறங்கியும் வருவான்

No comments:

Post a Comment