Monday, April 6, 2015

பாரதியார் --சக்திதாசன்'

பாரதியார் "மாதா பராசக்தி' என்று அம்பிகையைப் போற்றி பாடுவார். சக்தி வழிபாட்டில், தனக்குரிய ஈடுபாட்டை வெளிப்படுத்தும் விதத்தில், நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்துக் கொள்வது அவரின் வழக்கம். "சக்திதாசன்' "காளிதாசன்' என்று புனைப்பெயர்களில் கவிதை எழுதுவார்.
அவரது மகளான பாப்பா ஒருநாள், "" அப்பா! நம் நாட்டில் சிவனை வழிபடும் சைவமும், பெருமாளைக் கும்பிடும் வைணவமும் தானே பிரபலமாக இருக்கின்றன! ஆனால், நீங்களோ எப்போதும் பராசக்தியை மட்டுமே பூஜிக்கிறீர்களே? நானோ, என் இஷ்ட தெய்வமாக பிள்ளையாரையே வழிபடுகிறேன். இதெல்லாம் சரிதானா?'' என்று கேட்டாள்.
குழந்தையின் சந்தேகத்திற்கு நீண்ட விளக்கம் அளித்தார் பாரதியார். ஆதிசங்கரர் வகுத்த ஷண்மதம் என்னும் ஆறுவிதமான வழிபாடுகளைக் கூறினார். விநாயகர்- காணாபத்யம், முருகன்- கவுமாரம், சூரியன்- சவுரம், சிவன்- சைவம், விஷ்ணு- வைணவம், பராசக்தி- சாக்தம். இவ்வாறு நம் தேசத்தில் ஆறு வழிபாட்டு முறைகளுக்கும் தனித்தனி பெயருண்டு. நம் வீட்டில் உன் அம்மா மட்டும் தான் சைவம், நானோ சாக்தம், நீயோ காணாபத்யம். இப்போது உனக்குப் புரிஞ்சிருக்குமே! இது ஒரு சர்வசமய தேசம்,'' என்று சொல்லி சிரித்தார்.

No comments:

Post a Comment