Monday, April 6, 2015

யாரையும் பழி சொல்வது எளிதான விஷயம். ஆனால், அதை மீண்டும் சரி செய்து நல்லெண்ணத்தை உருவாக்குவது என்பது முடியாத காரியம்.

துறவி ஒருவர் பக்தர்களுக்கு சூரியனைப் பற்றிய கதை சொல்வது வழக்கம். அவரின் செல்வாக்கைக் கண்டு பொறாமை கொண்ட இளைஞன் ஒருவன், ஊருக்குள் துறவியின் ஒழுக்கம் பற்றி அவதூறான விஷயங்களைப் பரப்பினான். சிலர் இதை நம்பவும் செய்தனர்.
காலப்போக்கில், அவனுக்கு பல கஷ்டங்கள் வந்தன. துறவியைப் பற்றி அவதூறு பரப்பியதால் தான், இவ்வாறு தனக்கு நிகழ்கிறது என உறுதியாக நம்பிய அவன், துறவியிடம் மன்னிக்குமாறு வேண்டினான்.
துறவி இளைஞனிடம், ""நான் சொல்வதைக் கேள். வீட்டுக்குச் சென்று நீ ஒரு தலையணையை எடு. அதைக் கிழித்து நாலாபுறமும் பறக்கவிடு. பிறகு என்னிடம் வா!'' என்றார்.
துறவி சொன்னதை அப்படியே செய்து விட்டு ஓடி வந்தான் இளைஞன். ""பஞ்சைக் காற்றில் பறக்க விட்டேன் சுவாமி! அடுத்து வேறென்ன நான் உங்களுக்குச் செய்ய வேண்டும்!'' என்றான் இளைஞன்.
""பறக்க விட்ட பஞ்சு முழுவதையும் ஒன்றாக்கி கொண்டு வா!'' என்றார்.
திகைத்து நின்ற இளைஞனிடம்,""தம்பி! காற்றில் பறந்த பஞ்சைப் போலவே, யாரையும் பழி சொல்வது எளிதான விஷயம். ஆனால், அதை மீண்டும் சரி செய்து நல்லெண்ணத்தை உருவாக்குவது என்பது முடியாத காரியம். எப்போது செய்ததை எண்ணி வருந்தினாயோ அப்போதே மன்னிக்கப்பட்டு விட்டாய். இனியாவது நல்லவனாக வாழ்,'' என்று சொல்லி அனுப்பி வைத்தார்

No comments:

Post a Comment