Friday, April 24, 2015

இந்து மதம் பிற மதங்களை வெறுப்பதில்லை

இந்து மதம் பிற மதங்களை வெறுப் பதில்லை எல்லா மதங்களையும் நேசிக்கசொல்கிறது !! இந்து மதம் பிற மதங்களை வெறுப்ப தில்லை. சொல்லப் போனால் எல்லாமதங்களையும் தன்னோடு சமமாகவே கருதுகிறது.
மதத்துவேஷம், எந்தக்காலத்திலும், இந்துக்களால் ஆரம்பிக்க பட்டதில்லை.

அதன் பரந்தகரங்கள், அத்தனை மதங்களையும் அணைத்துக் கொண்டே வளர்ந்திருக்கின்றன.

ஓர் ஏரியின் நீரைப் போல் பரம் பொருளையும், அதில் இறங்குகின்ற பல படித்துறைகளைப் போல் எல்லா மதங்களையும் பரம ஹம்சர் காணுகின்றார்.அன்பின் மூலம் அன்பு வளர்வதைப் போல், வெறுப்பின்மூலம் வளர்வதில்லை என்கிறது இந்து மதம்.

வெறுப்பு ஒருகுறுகிய கூட்டுக்குள் சதிராடுகிறது.

அன்போ, வானையும் கடலையும் போல், அறிவை விரியச்செய்கின்றது.

நிலத்தைப்பங்கு போட்டுக்கொள்வது போல் வானத்தைப் பங்குபோட முடிவதில்லை. 'நிலம்' என்பது_மதம்; 'வானம்' என்பது பரம் பொருள் என்கிறார் பரம ஹம்சர்.

'சமண மதம் பரவிக்கிடந்த காலத்தில் அதைக்கருவறுத்து, சமணர்களை கழுவிலேற்றிய கூன் பாண்டியனும், மங்கையர்க்கரசியும் தான் பிற மதங்களை துவேஷித்த முதலாவதும் கடைசியுமான இந்துக்கள்.' அவர்களுக்கு முன்னும் சரி, பின்னும் சரி, இந்து மதம் யாரையும் வெறுத்ததில்லை.

"வீட்டின் உச்சிமுகட்டுக்குப் போக ஏணி, மூங்கில்படி, கயிறு இவற்றில் ஏதேனும் ஒன்றின் உதவியைக்கொண்டு ஏறலாம். அது போலப் பரம் பொருளை அடைவதற்கு வேறுவேறு மார்க்கங்கள் உண்டு. உலகத்திலுள்ள ஒவ்வொரு மதமும் அப்படிப்பட்ட மார்க்கங்களில் ஒன்றை தான் காட்டுகிறது.

மின்சாரவிளக்கின் ஒளி மங்கலாகவோ, பிரகாச மாகவோ வெவ்வேறு இடங்களில் வெவ்வேறுவிதமாக தோன்றுமாயினும், மின்சாரம் ஒரே இடத்திலிருந்து தான் வருகிறது.

அது போலவே, வெவ்வேறுகாலத்தில் தேசந்தோறும் தோன்றிய மதபோதகர்கள் அனைவரும், சர்வசக்தியுள்ள ஒரேயொரு மூலப் பொருளிடமிருந்து இடை விடாது பெருகிக்கொண்டிருக்கும் ஒளியை வெளியிடும் தீப ஸ்தம்பம் போன்றவர்களே" என்றார் பரமஹம்சர்.

எல்லா மதங்களாலும் போற்றப் படும் இறைவன் ஒருவனாகவே இருந்தால் ஏன்_அவனை பல மதங்களும் பலமாதிரி வர்ணிக்கின்றன?

இங்கு பரமஹம்சரின் பதில்:

"நீ வீட்டு எஜமான்; உனது மனைவிக்கு கணவன்; உனது மகனுக்கு தந்தை; உனது வேலைக் காரனுக்கு முதலாளி; ஆனாலும் நீ ஒருவன் தான்.

அவர வரும் உன்னிடம்கொண்ட உறவு முறையை வைத்து உன்னை பார்ப்பது போல், பல மதத்தவரும் ஆண்டவனைப் பலவிதத்தில் பார்க்கிறார்கள்." ராம கிருஷ்ணரின் இந்த வாக்கு இந்துவின் விரிந்தஞானத்துக்கு எடுத்துக்காட்டு.

இந்துமதத்திற்கு எதிராகப் பலகட்டங்களில் தோன்றிய நாத்திகவாதம், தானாகவே மடிந்து போனதற்குகாரணம் இதுதான்.

சகிப்புத்தன்மையையும், அரவணைப்பையும் இந்துமதம் வலியுறுத்துகிறது. "உடலில்பட்ட காயம் மறைந்து விடும்; உள்ளத்தில்பட்டால் மறையாது. ஆகவே, நீ பிறரை புண்படுத்தாதே" என்கிறது இந்துமதம்.

தண்டனையை கடவுளின்பொறுப்பில் விட்டு விடுவதால், நடைமுறைகளை தாங்கிக்கொள்கிற சக்தி இயற்கையாகவே வந்து விடுகிறது."காலப் போக்கில் ஒவ்வொன்றும் மாறுகிறது" என்ற விஞ்ஞான உண்மையை, வேதாந்த உண்மையாக இந்துக்கள் எப்போதோ சொல்லி விட்டார்கள்.

'மாறும் வரை பொறுத்திரு' என்பதே இந்துமதத்தின் உபதேசம்.

மனப்பக்குவம் இல்லாதவன், நினைத்த படி எல்லாம் நடக்கிறான்.

வழியில்கிடைக்கும் அனுபவங்கள், அவனுக்கு அந்தப்பக்குவத்தை உண்டாக்கி விடுகின்றன.

'வெறுப்பை வளர்ப்பவனும் என்றோ ஒருநாள் பக்குவம்பெறுவான்; அதுவரை அவனை நாம் சகிப்போம்' என்பதே இந்துமதத்தின் சாரம்.இவற்றை நான் குறிப்பிடுவதற்குக்காரணம் இந்தத்தொடர் கட்டுரையில், நான் பிறமதங்களை மதிக்கவில்லை என்று குற்றம்சாட்டி வந்த கடிதமே.

இந்துமதத்தின் சிறப்பியல்புகளை நான் விவரித்துக்கொண்டு போகும்போது, வேறுமதங்களுக்கு அந்தச் சிறப்பில்லை என்று கருதக்கூடாது.

நான் ஓர் இந்து என்றமுறையில், எனது_மதத்தின் மேன்மைகளை நான் குறிப்பிடுகிறேன்.

அவை பிறமதங்களில் இருக்கலாம்; நான் மறுக்கவில்லை.

உதாரணமாக 'கல்லானாலும் புல்லானாலும்' எனும் கட்டுரையில் இந்துப்பெண்களின் கற்பியல்புகளை நான் விவரித்ததை படித்து விட்டு, "எங்கள் மதத்தில் கற்புள்ளபெண்கள் இல்லையா?" என்று ஒருகிறிஸ்துவ நண்பர் எனக்கு எழுதியிருக்கிறார்.

நான் அப்படிச் சொன்னேனா?

'கற்பைவலியுறுத்தும் கதைகள் இந்து மதத்தில் அதிகம்' என்று தான் குறிப்பிட்டிருக்கிறேன்.

எனது மூதாதையர்கள் எப்படி எந்தமதத்தையும் வெறுக்கவில்லையோ, அப்படியே நானும் வெறுக்க மாட்டேன்.

"சாதாரண மனிதன் தன்அறியாமையால் தன்மதமே பெரியது என்று எண்ணி ஆரவாரம் செய்கிறான்.

உண்மை ஞானம் உதித்து விட்டால், பிற மதங்களை அரவணைக்கிறான்" என்கிறார் பரமஹம்சர்.

உண்மை ஞானம் எனக்கு இன்னும் உதிக்க வில்லை. அது உதிக்கும் முன்னாலேயே எல்லாமதங்களையும் நேசிக்கும் அறிவை நான் பரமஹம்சரிடம் இருந்து பெற்றுக்கொண்டிருக்கிறேன்.

ஆகவே, இந்தக்கட்டுரையில், தொடர்ச்சியாக இந்து மதத்தின் மேன்மையை நான் குறிப்பிடும்போதெல்லாம், பிறமதங்களில் அவை இல்லை என்று சொல்வதாகக் கருத கூடாது.

'என்னுடைய மனைவி அழகானவள்' என சொன்னால் 'அவன் மனைவி கோரமானவள்' என அர்த்தமல்ல!

No comments:

Post a Comment