Monday, April 6, 2015

அனுசரித்து நடக்கலாமே!

ஒரு இளைஞன் மின்னல் வேகத்தில் காட்டுப்பாதையில் நடந்து கொண்டிருந்தான். ஓரிடத்தில் ஒரு துறவி அவனை பார்த்தார். அவன் போகும் இடத்தை தெரிந்து கொண்டார்.
""தம்பி! நானும் நீ செல்லும் இடத்திற்கே வர வேண்டி உள்ளது. சற்று பொறு; சேர்ந்து போகலாம்,'' என்றார்.
அவன் அவரை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டு, மின்னல் வேகத்தில் போய்விட்டான். குறிப்பிட்ட தூரம் தான் அவனால் வேகமாக செல்ல முடிந்தது. அவ்வளவு தான்! கால்கள் வலிக்க ஆரம்பித்தன.
ஒரு கட்டத்தில், கால்கள் கடுமையாக வீங்கி நடக்க முடியாமல் ஆகிவிட்டது. அங்கேயே படுத்துவிட்டான். நாக்கு வறண்டது. குவளையை எடுத்துக் கொண்டு சற்று தூரத்தில் தெரிந்த குளத்துக்குக் கூட போக முடியவில்லை.
பின்னால் வந்த துறவி அந்த இடத்தைக் கடந்தார். தன்னை உதாசீனம் செய்துவிட்டு நடந்த இளைஞனின் நிலைமையைப் புரிந்து கொண்டார். அவனை மெதுவாகத் தூக்கி தன்னிடமிருந்த தண்ணீரைக் கொடுத்தார். இளைஞனுக்கு மூச்சு வந்தது.
"தம்பி! நாம் அடைய வேண்டிய இலக்கை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எட்ட வேண்டியது அவசியம் தான்! உன் வேகம் பாராட்டத்தக்கது. ஆனால், நம்மைச் சார்ந்துள்ளவர்களை அனுசரித்து செல்லும் விவேகத்தைக் கற்றுக் கொண்டால் தான், அந்த இலக்கு சாத்தியமாகும்,'' என்றார்.

No comments:

Post a Comment