Wednesday, April 22, 2015

வியாழக் கிழமைக்குக் குரு வாரம் என்று பெயர் வரக் காரணம் என்ன

வியாழக் கிழமைக்குக் குரு வாரம் என்று பெயர் வரக் காரணம் என்னவென்றால், தேவர்களுக்குக் குருவான ஸ்ரீபிரகஸ்பதியும், அசுரர்களுக்கு குருவான ஸ்ரீசுக்ரரும், குரு மூர்த்திகளாகத் தோன்றிய புனித நாளாகும். ஸ்ரீசுக்கிரருக்கு உரிய கிழமை வெள்ளி என்றாலும், நவக்கிரகச் சுக்கிர மூர்த்தி அம்சங்களைக் கொண்டவரும், அசுரர்களுக்கு குருவும் ஆன சுக்கிரர்கள் வெவ்வேறு மூர்த்திகள் ஆவர். இதே வகையில் சென்னை திருமயிலைச் சுயம்பு மூர்த்தியாகிய ஸ்ரீவெள்ளீஸ்வரச் சுயம்பு லிங்கச் சிவபெருமானை
வழிபட்டுத் தாம் இழந்த கண்ணைப் பெற்றச் "சுக்கிரரும்" பல சுக்கிர அம்சங்களைப் பூண்டவர் ஆவார். எனவே, வியாழன் என்பது தேவ குரு, அசுர மூர்த்திகளின் அமிர்த அனுகிரகப் பொழிவு நாளாகும்.

தேவர்கள், அசுரர்கள் என்ற வகையாக நாம் புராணங்களில் கண்டாலும், கலியுலகில், பெரும்பான்மையான மக்கள், தேவ குணங்களாகிய நற்குணங்கள், அசுர குணமாகிய தீய ஒழுக்கங்கள் கலந்தவர்களாகவே இருக்கின்றனர். எனவே நற்குணங்கள் விருத்தியாக ஸ்ரீபிரகஸ்பதியையும், பகைமை, குரோதம், பொறாமை போன்ற தீய அசுர குணங்கள் அகல ஸ்ரீசுக்கிரரையும் ஆகிய இரு குருமூர்த்திகளையும் வழிபட வேண்டிய குருஅம்சத் திருநாளாக இன்றைய வியாழக் கிழமை துலங்குகின்றது.

இன்று கூடும் ஆயில்ய நட்சத்திரமானது, சிறப்பான மருத்துவ அம்சங்களைப் பூண்டதாகும். உடல் நோய்களுக்குத் தக்க மருந்துகளையும், மன உடலில் உள்ள நோய்களான பொறாமை, விரோதம், குரோதம் போன்ற மனவகை நோய்களையும் தீர்க்க வல்ல மாமருந்து நட்சத்திர நாளே ஆயில்ய நட்சத்திரத் திருநாளாகும்.

திதிகளில் புனித சக்தியை அபரிமிதமாகப் பொழிந்து தருவது ஏகாதசித் திதியாகும். சிம்ம ராசியில் சந்திர மூர்த்தி அமர்ந்து, குரு மூர்த்தியை யோக மூர்த்தியாகப் பூஜிக்கும் நன்னாளும், ஏகாதசி குருவாரமும், ஆயில்ய நட்சத்திரமும் கூடுகின்ற விசேஷமான நாளும் இதுவேயாம்.

இவ்வாறு நாளுக்கு நாள் எத்தனையோ விசேஷ அம்சங்கள் பொதிந்து இருக்கின்றன. இவற்றை, இவ்வகையில், விளக்க வல்லவரே சற்குரு ஆவார். இதில் சித்த யோக அம்சங்களும் கூடுவதால், மிக வலிமையான, புனிதமான தெய்வீக சக்திகள் தீர்த்தப் பூர்வமாகப் பூவுலகில் சுரக்கும் திருநாள் இதுவே.

இத்தகைய அரிய பலா பலன்களைக் கொண்ட நாளின் தெய்வீக சக்திகளை எவ்வாறு பெறுவது ?

குருவார விரதம், ஏகாதசித் திதி விரதம் இணைந்து வரும் நாளாதலின், துளசி, வில்வம் இரண்டையும் புனிதமான புண்ணிய தீர்த்த நீர் அல்லது ஊற்று நீரில் ஊற வைத்து, மூங்கில் குவளை, வெள்ளித் தம்ளர், சுரைக் குடுவை போன்றவற்றில் நிரப்பி, இதனை மட்டும் அருந்தி விரதம் இருந்து, பெருமாள், சிவ மூர்த்திகள் இரண்டும் உள்ள ஆலயங்களில் பூஜிப்பது மிகவும் விசேஷமானது.(திருநெடுங்களம் ஸ்ரீநெடுங்களநாதர் + ஸ்ரீவரதராஜர், உத்தமர்கோவில், திருஅண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் + ஸ்ரீவேணுகோபாலர்). இவ்வாறு வழிபட்டு, அங்கப் பிரதட்சிணம், நடைப் பிரதட்சிணம் கடைபிடித்தல் விசேஷமானது ஆகும்.

பொதுவாக அடிக்கடி மனக்கிளர்ச்சி ஏற்படுபவர்கள், மனோபலம் இல்லாதவர்கள், மனபயம் உள்ளவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள் இந்த சக்தி வாய்ந்த நாளை நன்கு பயன்படுத்திக் கொண்டு தற்காப்பு சக்திகளைப் பெற வேண்டும்

No comments:

Post a Comment