Wednesday, July 29, 2015

மூல நட்சத்திரக்காரர் களைத் திருமணம் செய்தால் மாமனார்- மாமியாருக்கு ஆகாது என்பதுவும் தவறான வாதம் ஆகு

மூல நட்சத்திரம் உயர்வானது. ஆஞ்சநேயருடைய நட்சத்திரம்.
மிகப்பெரிய கல்வியில் சிறந்தவர்கள் பிறந்த நட்சத்திரம். மிகப்பெரிய பிரபலங்கள் ,உழைப்பால் உயர்ந்த கோடீஸ்வரர்கள் பிறந்த நட்சத்திரம்.
எந்த நட்சத்திரமனாலும் அவரவர் பூர்வ ஜென்ம பாவ புண்ணியம் அடிப்படையில் தான் நிகழ் காலம் அமைகிறது.
ஆண் மூலம் அரசாளும்;
பெண் மூலம் நிர்மூலம்!
ஆண்டாண்டு காலமாக மக்கள் மத்தியில் நிலவிவரும் தவறான நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று.
'மூல நட்சத்திரப் பெண்ணா? வேண்டவே வேண்டாம்!’ என்று நட்சத்திரத்தைப் பார்த்ததுமே அவர்களின் ஜாதகத்தை ஒதுக்கித் தள்ளும் வேதனையான வழக்கம் இன்றும் தொடர்கிறது.
இது தவறு எனில், இப்படியான நம்பிக்கை ஏற்படக் காரணம் என்ன? நெருப்பில்லாமல் புகையாதே?!
இதற்கான பதிலை மிக நுணுக்கமாக ஆய்ந்தறிய வேண்டும்.
ஜோதிட சாஸ்திரத்தில் மிதுன ராசியில் சூரியன் இருக்கும் மாதமே ஆனி மாதம். மிதுனம் ஆண் ராசி. இந்த மாதத்தில் வரும் மூல நட்சத்திரம் பெரும்பாலும் பௌர்ணமி திதியை ஒட்டியே வரும். சூரியன் கன்னி ராசியில் இருக்கும் மாதம் புரட்டாசி. கன்னி- பெண் ராசியாகும். இந்த மாதத்தில் வரும் மூலநட்சத்திரம் பெரும்பாலும் அஷ்டமி திதியுடன் சேர்ந்து வரும்.
எப்போதுமே நல்ல காரியங்களுக்கு பௌர்ணமி திதியே ஏற்றதாகக் கொள்ளப்படும்; அஷ்டமி திதியை பெரும்பாலும் தவிர்த்துவிடுவார்கள். ஆக, பௌர்ணமி திதியை ஒட்டி ஆனி மாதம் மிதுன (ஆண்) ராசியில் சூரியன் இருக்கும்போது வரும் மூல நட்சத்திரம் சுப திதியில் வருவதால், ஆனி மூலத்தை ஏற்றனர். அதுவே ஆண் மூலம் எனப்பட்டது. பௌர்ணமி என்பது யோக திதி என்பதால், இன்னும் திரிபு ஏற்பட்டு 'ஆண் மூலம் அரசாளும்’ என்றாகிவிட்டது.
அதேபோன்று, கன்னி மாதமாகிய புரட்டாசியில், மூல நட்சத்திரம் அஷ்டமியோடு சேர்ந்து வருவதால், அந்த நாளில் சுப காரியங்கள் தவிர்க்கப்பட்டது. அன்று துவங்கும் நற்காரியங்கள் விருத்தியாகாது எனும் பொருள்படும்படி 'கன்னி மூலம் நிர்மூலம்’ எனச் சொல்லி வைத்தார்கள். இதில் கன்னி ராசி மறக்கப்பட்டு, கன்னிப் பெண்கள் எனத் தவறாகப் பொருள் கொண்டு 'பெண் மூலம் நிர்மூலம்’ என்றாகிவிட்டது.
எனவே, மூல நட்சத்திரம் என்பது இருபாலருக்கும் பெருமை சேர்க்கும் நட்சத்திரமே! அதேபோன்று, மூல நட்சத்திரக்காரர் களைத் திருமணம் செய்தால் மாமனார்- மாமியாருக்கு ஆகாது என்பதுவும் தவறான வாதம் ஆகும்.
- மாஸ்டர் ஸ்ரீநிவாஸ், தஞ்சாவூர்
நன்றி: சக்தி விகடன்

No comments:

Post a Comment