Wednesday, July 29, 2015

கடவுளுக்காக கொடுக்கப் படும் பலி

கடவுளுக்காக கொடுக்கப் படும் பலியும் மனிதனுக்காக கொடுக்கப் படும் பலியும் (முக்கிய விளக்கங்கள்):
*
இந்து தர்மத்தின் ஆணிவேராக விளங்குவது அகிம்சை. 'அகிம்சா பரமோ தர்ம' (அகிம்சையே உச்ச பட்ச தர்மம்) எனும் பிரமாண வாக்கியத்தை மகாபாரதத்தில் பற்பல இடங்களில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார் வியாசர். இந்து தர்மத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் பலரும் ஆலயங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் உயிர் பலி இடுகின்றனர்.
*
இது போன்ற செய்திகளைக் கேள்வியுறும் பொழுது நம்மில் பலரும் ஆலயங்களில் பலியிடுவோரை மிகக் கடுமையாக நிந்திப்பதைக் காண்கிறோம். எனினும் புலால் உண்பவர்கள் அத்தகைய விமரிசனத்துக்கு உள்ளாவதில்லை. மேலும் பல நேரங்களில் ஆலய பலியினை எதிர்ப்பவர்களே அசைவ வழக்கத்தினை மேற்கொள்பவராக இருக்கின்றனர். இது புதிரன்றோ?.
*
உயிர் பலியிடுபவரோ 'புலால் உண்பதே கொடிய பாவம்' என்றும் புலால் உண்பவரோ 'ஆலயங்களில் உயிர் பலியிடுவதே கொடும் பாவமென்றும்' வாதிடுவர். இதற்கு முடிவு தான் என்ன? எவ்வகையிலும் உயிர்க் கொலை ஞாயமாகாது. தர்மங்களை நம் விருப்பத்திற்கு ஏற்ப வகுத்துக் கொள்வதை விடுத்து அருளாளர்களின் அறிவுரைகளைச் செவி மடுப்பதே நன்மை பயக்கும்.
*
பிள்ளைப் பெரு விண்ணப்பம் - 63,64ஆம் பாடல்கள் (திருவருட்பா 6ஆம் திருமுறை):
பலிதர ஆடு பன்றி குக்குடங்கள்
பலிக்கடா முதலிய உயிரைப்
பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே
புந்தி நொந்து உளம் நடுக்குற்றேன்
-
துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத்
தொடங்கிய போதெலாம் பயந்தேன்
கண்ணினால் ஐயோ பிறஉயிர் பதைக்கக்
கண்ட காலத்திலும் பதைத்தேன்
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி
வகைகளும் கண்ட போதெல்லாம்
எண்ணி என் உள்ளம் நடுங்கிய நடுக்கம்
எந்தை நின் திருவுளம் அறியும்!!
*
மேற்குறிப்பிட்ட பாடல்களில் பலியிட எடுத்துச் செல்லப் படும் உயிர்களைக் கண்டு பதை பதைக்கிறார் வள்ளலார். பாடலில் 'குக்குடம்' என்ற பதம் கோழியைக் குறிக்கும். மேலும் மீன் பிடிக்க உதவும் தூண்டில்; வலை இவைகளைக் கண்டால் (அவ்வுயிர்களின் நிலையினை எண்ணி) பயந்து நடுங்குகிறார் வள்ளல் பெருமானார்.
*
நம் நாட்டில் ஆலயங்களில் பலியிடப்படும் பிராணிகள் சுமார் 5 லட்சம் என்று வைத்துக் கொண்டாலும், உலக நாடுகள் முழுவதும் சேர்த்து ஒரு ஆண்டுக்கு மனித இனத்துக்காக (உண்ணும் பொருட்டு) பலியிடப் படும் பிராணிகளோ 65 பில்லியன் (அதாவது சுமார் 6500 கோடி பிராணிகள்). மீன் முதலிய நீர் வாழ் உயிரனங்கள் இந்த கணக்கில் சேராது.
*
மேற்கூறிய கணக்கில், மக்கள் தொகை மிகுந்துள்ள மூன்று நாடுகளுள் ஒன்றான பாரத நாட்டின் பங்கு 10 சதவிகிதம் என்று கொண்டாலும் 'எத்தனை கோடி பிராணிகள் மனித இனத்திற்காக வதைக்கப் படுகிறது' என்று எண்ணும் பொழுது உள்ளம் பதைக்கும். 'சரி நான் ஒருவன் இன்று புலாலை நிறுத்தினால் உயிர்க் கொலை நின்று விடுமா ?' என்ற கேள்வி தோன்றுவது இயல்பு.
*
உயிர்க்கொலையை முற்றிலும் ஒழித்து விட முடியாது. உண்மை; எனினும் நம்மை நாம் பாவச் செயலில் இருந்து விடுவித்துக் கொள்ள இயலும். நம்மைக் கருணையுள்ளவராக பரிணமித்துக் கொள்ள இயலும். இறைவனின் திருவருளுக்குப் பாத்திரமாக்கிக் கொள்ள இயலும். ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்கிறார் வள்ளலார் (சிவ சிவ)

No comments:

Post a Comment