Monday, August 24, 2015

முடிந்த தானம் செய்யுங்கள். தலைமுறைக்கு புண்ணியம் சேருங்கள்.

தானம் செய்வதற்கு உகந்த நாள் அட்சய திரிதியை. இந்த நாளில் தானத்தின் மகிமை பற்றிய கதையைக் கேளுங்கள்.
தர்ம குணம் படைத்த மன்னன் போஜனிடம் விவசாயி ஒருவர், மகளின் திருமணத்திற்காக பணம் பெற தலைநகருக்கு புறப்பட்டார். வழியில் சாப்பிட ரொட்டி கட்டிக் கொண்டார்.
""கடவுளே! திருமணத்திற்கு வேண்டிய அளவு பணத்தை மன்னர் தர வேண்டும்,'' என வேண்டியபடியே சென்றார். 
வழியில் பசியெடுக்கவே, ஒரு குளக்கரையில் அமர்ந்து ரொட்டியைக் கையில் எடுத்தார். மனதிற்குள் ""இந்த உணவைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி,'' என்றார். 
அப்போது ஒரு நாய் அவர் எதிரில் எலும்பும், தோலுமாக வந்து நின்றது. 
""இரக்கப்பட்ட அவர் ஒரு ரொட்டியை வீசினார். ஒரே விழுங்காக உள்ளே தள்ளிய நாய், மீண்டும் ஆவலுடன் பார்த்தது. அத்தனை 
ரொட்டியையும் கொடுத்து விட்டார். .
"ஒரு நாள் சாப்பிடா விட்டால் உயிரா போயிடும்? ராஜா அவர் தகுதிக்கு தானம் கொடுத்தால், பிரஜையான நாமும் முடிந்ததை செய்வது தானே முறை' என தனக்குள் சொல்லிக் கொண்டார். பசியைப் பொறுத்துக் கொண்டு தலைநகரை அடைந்தார். அங்கிருந்த தர்மசத்திரத்தில் 
சாப்பிட்டார். மன்னனைச் சந்தித்து, தான் வந்த விஷயத்தை தெரிவித்தார்.
போஜன் அவரிடம்,""என்னிடம் தர்மம் கேட்டு வந்துள்ளீர்களே! நீங்கள் ஏதாவது தர்மம் செய்திருந்தால் சொல்லுங்கள். அதை நிறுக்கும் தராசு என்னிடம் இருக்கிறது. அது எந்த அளவு எடை காட்டுகிறதோ, அந்த அளவுக்கு தங்கம் வாங்கிக் கொள்ளலாம்,'' என்றான்.
""தர்மம் செய்யுமளவு பணம் இருந்தால், நான் ஏன் உங்களிடம் வரப் போகிறேன்? வழியில் நாய் ஒன்றுக்கு உணவு அளித்தேன். அதற்கு ஈடாக, உங்கள் சத்திரத்தில் சாப்பிட்டு விட்டேன். எனவே, நான் ஏதும் பெரிதாக தர்மம் செய்ததில்லை,'' என்று அடக்கமாகச் சொன்னார் விவசாயி .
போஜன் தராசைக் கையில் எடுத்தான்.
ஒரு தட்டில் விவசாயி செய்த தர்மத்தையும், மறுதட்டில் தங்கத்தையும் வைக்கச் சொன்னான். கஜானாவில் இருந்த தங்கம் 
முழுவதும் வைத்தும் கூட தராசு சமமாகவில்லை. 
வியந்த மன்னன், ""என்னைச் சோதிக்க வந்திருக்கும் தாங்கள் யார்?'' என்றான். 
""மன்னா! நான் ஒரு விவசாயி. என்னைப்பற்றி சொல்லுமளவு வேறு ஏதுமில்லை,'' என்றார் பணிவுடன்.
அப்போது தர்மதேவதை அங்கு தோன்றினாள்.
""மன்னா! தராசில் நிறுத்துப் பார்ப்பது அல்ல தர்மம். கொடுத்தவரின் மனமே அதன் அளவுகோல். இவர் மனம் மிகவும் பெரியது. அதனால், நீ எவ்வளவு பொன் வைத்தாலும் தராசு முள் அப்படியே தான் இருக்கும். அவர் என்ன கேட்டு வந்துள்ளாரோ, அதைக் கொடு! போதும்,'' என்றாள். 
இதை ஏற்ற மன்னனும், விவசாயிக்கு வேண்டிய அளவு தங்கம் கொடுத்து வழியனுப்பினான். அட்சய திரிதியை நன்னாளான இன்று 
நீங்களும் முடிந்த தானம் செய்யுங்கள். தலைமுறைக்கு புண்ணியம் சேருங்கள்.

No comments:

Post a Comment