Wednesday, August 26, 2015

தலை குனிந்த கர்வம்

பாண்டவர்களின் மனைவி திரவுபதிக்கு கண்ணனின் மீது கொண்ட பக்தியில் தன்னை மிஞ்ச ஆளில்லை என்று கர்வம் உண்டு. 
வெற்றிக்கு தடையாக இருக்கும் கர்வத்தை அகற்ற எண்ணம் கொண்டார் கண்ணன்.
அப்போது பாண்டவர்கள் திரவுபதியுடன் வனவாசத்தில் இருந்தனர். ஒருநாள் திரவுபதியைத் தேடி வந்தார். அவளுக்கு மிக்க மகிழ்ச்சி. 
அவள் கண்ணனிடம், ""அண்ணா! துவாரகையில் இருந்து எப்படி வந்தீர்கள்? தேர், குதிரை, பல்லக்கு என எதையும் காணவில்லையே,'' என்றாள்.
""தங்கையே! உன்னைப் பார்க்கும் ஆவல் உந்தித் தள்ளியது. தங்கை காட்டுக்கு போனாளே, என்ன ஆனாளோ என்று என் அண்ணன் கொஞ்சமாவது என்னைப் பற்றி அக்கறைப்பட்டானா என்று நீ குற்றம் சொல்வாய். அதனால், நடந்தே இங்கே வந்து விட்டேன்,'' என்றார். அதைக்கேட்டு திரவுபதியின் கண்களில் கண்ணீர் அரும்பியது.
""கால்கள் நோக நடந்தே வந்தீர்களா? அவை எந்தளவுக்கு வலிக்கும். சரி.. சரி... நான் வெந்நீர் போட்டுத் தருகிறேன். நீராடுங்கள். உடல் களைப்பு நீங்கும். கால்களுக்கும் இதமாக இருக்கும்,'' என்றாள். 
கண்ணனும் தலையாட்டினார்.
பீமன் தன் பலத்தையெல்லாம் காட்டி, ஒரு பெரிய கொப்பரையை தூக்கி வந்தான். அதில் வெந்நீர் போட்டால் நூறு பேராவது குளிக்கலாம். அதை ஆற்றில் ஒரே அழுத்தாக அழுத்தி தண்ணீர் எடுத்தான். மூன்று பெரிய பாறைகளை உருட்டி வந்தான். அதை அடுப்பாக்கி, 
கொப்பரையை தூக்கி வைத்தான். ஒரு மரத்தையே ஒடித்து வந்து தீப்பற்ற வைத்தான். ஆனால், மதியமாகியும் தண்ணீர் சுடவில்லை. கண்ணன் தங்கையிடம், ""அம்மாடி தங்கச்சி... வெந்நீர் என்னாச்சு?'' என்றார். 
திரவுபதி கண்கலங்க, ""அண்ணா! ஏனோ இது கொதிக்கவில்லை. மாறாக ரொம்பவும் குளிர்ந்திருக்கிறது,'' என்றாள்.
கண்ணன் பீமனிடம், ""பீமா! அந்த தண்ணீரை கீழே கொட்டு,'' என்றார். பீமனும் கொப்பரையை கவிழ்க்க, உள்ளிருந்து ஒரு தவளை ஓடியது.
""திரவுபதி, விஷயம் இதுதான்! அந்த தவளை சுடுநீரில் சிக்கி மாண்டு விடாமல் இருக்க என்னை வேண்டிக் கொண்டே இருந்தது. அதைக் 
காப்பாற்றவே இப்படி செய்தேன். இப்போது புரிகிறதா? இந்த சாதாரண தவளையின் பக்தி எவ்வளவு பெரியதென்று!'' என்றார். திரவுபதிக்கு சுரீரென உரைத்தது. 
ஆகா! என் பக்தியே உயர்ந்ததென நினைத்தேன். இந்த தவளையின் பக்தி அல்லவா உயர்ந்தது! ஒரு ஜந்து, கண்ணன் மீது கொண்ட பக்தி காரணமாக உயிர் பிழைத்து ஓடுகிறதே! அதன் பக்தியை என் பக்தி எப்படி உயர்ந்ததாக முடியும்,'' என்று எண்ணி கண்ணீர் வடித்தாள். 
பக்திக்கு கூட கர்வம் கூடாது என்பது புரிகிறதல்லவா!

No comments:

Post a Comment