Monday, August 24, 2015

ஆனந்த கண்ணீர்!

கதாதர் பட்டர் உள்ளம் உருகும் விதத்தில் பக்தி கதை சொல்வார். ஒருமுறை பணக்காரர் ஒருவர் கதை கேட்க வந்தார். 
அன்று பாஞ்சாலி சபதம் கதையில், திரவுபதியின் புடவையை துச்சாதனன் இழுத்த போதுள்ள நிலையை பட்டர் சொல்லிக் கொண்டிருந்தார். ஊரார் இதுகேட்டு கண்ணீர் விட்டனர். கல்மனம் படைத்த பணக்காரர், தானும் இளகிய மனமுள்ளவன் என்பதைக் காட்ட, ஒரு தந்திரம் செய்தார்.
சிறிது மண்துகளை யாரும் அறியாமல் எடுத்து கண்ணில் போட்டார். உறுத்தலால் கண்ணீர் வழிந்தது. அவரது அருகில் இருந்தவர், "கல்மனம் கொண்ட இவரா கண்ணீர் வடிக்கிறார்' என ஆச்சரியப்பட்டார். பிறகு தான், அவரது கண்ணில் மண் துகள் ஒட்டியிருந்ததைக் கவனித்து, "இப்படியும் கூட மனிதர்கள் இருக்கிறார்களே' என நொந்தார்.
சொற்பொழிவு முடிந்ததும் பட்டரிடம், ""சுவாமி! இந்த பணக்காரரின் தந்திரத்தைக் கேட்டீர்களா!'' என்று நடந்ததைக் கூறினார். 
பட்டர் மேடையை விட்டு இறங்கி, பணக்காரர் முன் விழுந்து வணங்கினார். பணக்காரர் திகைத்தார். 
""என்னை விட அறிவிலும், வயதிலும் பெரியவரான நீங்கள், என்னை வணங்குகிறீர்களே!'' என்றார்.
அதற்கு பட்டர்,""பாஞ்சாலி துன்பப்பட்டதும், கிருஷ்ணர் புடவை கொடுத்ததும் கேட்டு கண்ணீர் வராவிட்டாலும், உங்களுக்கு நீங்களே தண்டனை அளிக்கும் அளவுக்கு, இந்த சம்பவம் உங்களுக்கு துணிச்சலூட்டியதே! அதனால் வணங்கினேன்,'' என்றார்.
இப்போது பணக்காரருக்கு உண்மையிலேயே கண்ணீர் வந்தது. 

No comments:

Post a Comment