Wednesday, August 26, 2015

கிடைக்கவேண்டியது கிடைத்தே தீரும்

விநாயகர் பக்தனான விவசாயிக்கு, வருமானம் குறைவு என்றாலும், நிம்மதிக்கு குறைவில்லை. ஆனால், அவன் மனைவி ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டாள். அவளிடம், ""கவலைப்படாதே! பிள்ளையாரப்பன் பார்த்துக்குவான். அவன் அருளால் கிடைப்பது கிடைக்கட்டும்,'' என்று சொல்வான். 
பிள்ளையார் விவசாயி வாழ்வில் திருவிளையாடல் புரியத் தொடங்கினார்.
ஒருமுறை நிலத்தை உழுத போது, கலப்பையில் ஏதோ தட்டுப்பட விவசாயி அதை எடுத்தான். செப்புக்குடத்தில் தங்க நாணயங்கள் இருந்தன. ஆனால், அதை வீட்டுக்கு எடுத்து வராமல் அங்கேயே புதைத்து வைத்தான். நடந்ததை மனைவியிடம் விவரித்தான். 
""ஏன் கொண்டு வரவில்லை? யாராவது குடத்தை எடுத்துச் சென்றால் என்ன செய்வது?'' என்றாள் மனைவி. 
""நமக்கென பிள்ளையார் அளந்ததை யாரும் எடுத்துச் சொல்ல முடியாது. ஒருவேளை காணாமல் போனால், அதை நமக்கு அளிக்க அவர் விரும்பவில்லை என நினைத்துக் கொள்,'' என்றான்.
திருடன் ஒருவன் இவர்களின் பேச்சைக் கேட்க நேர்ந்தது. உடனே, வயலுக்குச் சென்று குடத்தை தேடினான். 
குடமும் சிக்கியது. ஆவலுடன் வீட்டுக்கு எடுத்து வந்து திறந்தான். உள்ளிருந்த தேள் அவன் கையைப் பதம் பார்த்தது. வலியால் துடித்தான். 
மறுநாள் விவசாயி வயலுக்குச் சென்ற போது, செப்புக்குடத்தைக் காணவில்லை. மனதிற்குள், "பிள்ளையார் கொடுக்க விரும்பவில்லை போலும்' என எண்ணிக் கொண்டு பணியில் ஈடுபட்டான். 
வீடு திரும்பினான் விவசாயி. 
வந்ததும், வராததுமாக மனைவி, "செப்புக்குடத்தைக் கொண்டு வரவில்லையா?'' என்றாள். 
""குடத்தை யாரோ எடுத்துச் சென்று விட்டார்கள். நமக்கு கிடைக்க வேண்டும் என்ற விதி இருந்தால் எப்படியாவது வந்து சேரும்...'' என்றான் இயல்பாக.
""உங்களைப் போல அசடு இந்த உலகத்தில் யார் இருப்பார்கள்? காணாமல் போன செப்புக்குடம் கால் முளைச்சு நம்மைத் தேடியா வரும்?'' என்று கோபத்தில் கத்தினாள். 
அன்றிரவும் தேள் கடி வாங்கிய திருடன், வேவு பார்த்தபடி அங்கே நின்றிருந்தான். 
இருவரும் பேசுவதைக் கேட்டான். தன்னை ஏமாற்றிய விவசாயியைத் தண்டிக்க எண்ணினான். தேளுடன் குடத்தைத் கொண்டு வந்து விவசாயி வீட்டு வாசலில் வைத்து விட்டுச் சென்றான். 
அதிகாலையில் எழுந்த விவசாயி, நீராடி பிள்ளையாரை வழிபட்டு வயலுக்குப் புறப்பட்டான்.
கதவைத் திறந்த போது, வாசலில் குடம் இருந்தது.. 
திறந்து பார்த்தால் குடத்தில் தங்க நாணயங்கள் இருந்தன. அதைக் கண்ட மனைவி, ""கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுகிட்டு கொடுக்கும் என்பார்களே! உங்களுக்காக குடத்தை பிள்ளையார் வீட்டுக்கே அனுப்பி வைச்சுட்டாரே!'' என்றாள். 
""பிள்ளையார் கொடுத்தது நமக்கு மட்டும் சொந்தம் அல்ல. கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுத்து உதவி செய்யணும்,'' என்றான் 
விவசாயி. 
""உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாகவே நடக்கும்'' என்றாள் மனைவி. 
சித்திரத்தில் இருந்தபடி, விநாயகர் விவசாயி வீட்டில் நடப்பதை ரசித்துக் கொண்டிருந்தார்.

No comments:

Post a Comment