Wednesday, August 26, 2015

குருவருள்... திருவருள்

பானு என்னும் நகரத்தை தலைநகராகக் கொண்டு, வல்லவன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவனது மனைவி கமலை. இவர்களுக்கு ஆண்குழந்தை பிறந்தது. பிறக்கும் போதே பார்வை இல்லாமலும், கேட்கும் திறனற்றும் இருந்தது. வளர்ந்த பின் பேச்சும் வரவில்லை. 
போதாக்குறைக்கு அழகும் அறவே இல்லை. இப்படிப்பட்ட குழந்தை இருப்பதை விட இல்லாமல் இருப்பதே மேல் என்று வல்லவன் வருந்தினான். கமலை குழந்தையை பார்த்து பார்த்து அழுதாள்.
""கடவுளே! எனக்கு ஏன் இப்படி விதி செய்தாய்! நான் செய்த பாவம் தான் என்ன?'' என்று முறையிட்டாள்.
அக்குழந்தைக்கு "தக்கன்' என்று பெயரிட்டனர். 12 வயது வரை எத்தனையோ வைத்தியம் செய்தனர். இந்தப் பிள்ளை அரண்மனையில் இருந்தால், அதன் வைத்தியத்திற்கே செல்வம் அனைத்தும் கரைந்து விடும் என்று மன்னனுக்குத் தோன்றியது. ஒருநாள் தன் மனைவி கமலையிடம், ""இவனால் என் நிம்மதி தொலைந்து விட்டது. இனிமேல், நீயும், உன் பிள்ளையும் இங்கு ஒரு வினாடி கூட இருக்கக்கூடாது. எங்காவது போய் விடுங்கள்,'' என்று கத்தினான்.
கணவனின் ஈவிரக்கமில்லாத வார்த்தை கேட்டு கமலை மனம் பதைத்தாள். ""தாட்சண்யமே இல்லாமல், வெளியேறு என்று எப்படி உங்களால் சொல்ல முடிந்தது. பெற்ற பிள்ளையை வெறுக்கலாமா,'' என்று மன்றாடினாள். 
அவன் அவர்களை வெளியேற்றி விட்டான் ""தெய்வமே! நானும் என் பிள்ளையும் எங்கு செல்வோம்?'' என புலம்பி அழுதாள். 
பின், மகனுடன் நடக்க ஆரம்பித்தாள். அன்றிரவு ஓரிடத்தில் தங்கிய போது, ஒருவன் அவளது நகைகளைப் பறித்து விட்டான். 
பசியாலும், தாகத்தாலும் தவித்த கமலை குண்டினபுரம் என்ற ஊரிலுள்ள விநாயகர் கோயிலைக் கண்டாள். அந்த விநாயகரைக் கண்டது, தன் நல்வினைப் பயன் என்று அவள் உள்மனம் சொன்னது.
முற்கலமுனிவர் என்ற மகான் அவ்வூரில் இருந்தார். அவர் விநாயகர் பக்தர். அவரிடம் கமலையும், தக்கனும் அடைக்கலம் புகுந்தனர்.
அவர்,""இனி எல்லாம் சுகமாகிவிடும்! வருந்தாதீர்கள். வினைகளைப் போக்கி விநாயகர் அருள்வார்!'' என்று ஆறுதலாகப் பேசிய முனிவர் தக்கனைத் தொட்டார். 
அப்போதே அவனது உடல் அழகாக மாறியது. காலம் செல்ல செல்ல பார்வை பெற்றான், காது கேட்டது, "அம்மா!' என்று பேசவும் ஆரம்பித்தான். அழைத்தான். பிறர் பேசுவதும் கேட்டது. 
கமலையின் கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருகியது. இந்த விஷயம் வல்லவனுக்கு தெரிந்தது. அவன் ஓடி வந்து கமலையிடம் மன்னிப்பு கேட்டான். முற்கல முனிவரும் அவன் செய்த தவறை மன்னித்து ஏற்கும்படி அறிவுரை வழங்கினார்.
கமலையும் அதை ஏற்றாள். அவர்கள் நாடு திரும்பினர்.

No comments:

Post a Comment