Wednesday, August 26, 2015

வேண்டாம் வேண்டாம் இனியும் வேண்டாம்

கோவையில் ஒரு மாணவி காதல் தோல்வி காரணமாக விரும்பத்தகாத சம்பவத்தில் ஈடுபட்டதை படித்திருப்பீர்கள். 
பெண்கள், தங்கள் திருமண விஷயத்தில் அனுபவம் மிக்க பெற்றோர் சொல் கேட்காததே இதற்கு காரணம். இதோ! 
எத்தனையோ நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. படித்து மனம் திருந்துங்கள்.
காவிரிபூம்பட்டினத்தை கரிகால்சோழன் ஆண்ட காலத்தில், வணிகமணி என்பவர் அவ்வூரில் இருந்தார். அவரது மகள் குண்டலகேசி. அழகில் சிறந்தவள். அரண்மனை அருகில் இருந்த பெரிய வீட்டில் குடியிருந்தாள்.
அப்பகுதியில் வசித்த காளன் என்பவனுக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் திருடத் துவங்கினான். ஒருமுறை கையும், களவுமாக பிடிபட்டான். அவனைக் காவலர்கள் கைது செய்து அழைத்து வந்த போது, குண்டலகேசி அவனைப் பார்த்தாள். அவன் மிகவும் அழகாக இருந்தான். குற்றவாளி என்றும் பாராமல் அவன் மீது காதல் வசப்பட்டாள். 
காளனை மறுநாளே தூக்கில் போட கரிகாலன் உத்தரவிட்டான். இதற்குள் தன் தந்தையிடம் தனது காதலை விவரித்தாள் குண்டலகேசி. 
"ஒரு திருடனைப் போயா காதலிக்கிறாய்?'' என தந்தை கடிந்து கொண்டார். ஆனால், காதல் கண்ணை மறைத்ததால், குண்டலகேசி தனது நிலையில் பிடிவாதமாக இருந்தாள்.
வேறு வழியின்றி மன்னனைக் காணச் சென்றார் வணிகமணி. 
அவருக்கும் சோழனுக்கும் நல்ல பழக்கமுண்டு. அவரை வரவேற்ற மன்னன், ""இரவோடு இரவாக வந்துள்ளீர்களே! ஏதேனும் உதவி வேண்டுமா?'' என்றான்.
"தாங்கள் நான் கேட்பதைத் தருவீர்களா?'' என்றதும், "என்ன கேட்டாலும் தருகிறேன்'' என வாக்களித்து விட்டான் மன்னன்.
தன் நிலையை எடுத்துச் சொல்லி, காளனை விடுவிக்கும்படி வணிகமணி வேண்டினார். 
மன்னனும் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற காளனை விடுதலை செய்து விட்டான். ஒரு நல்லநாளில் குண்டலகேசிக்கும், காளனுக்கும் திருமணம் நடந்தது. ஏராளமான செல்வம் சீதனமாகக் கொடுக்கப்பட்டது. ஆனாலும், காளனுக்கு ஆசை விடவில்லை. மேலும் 
சம்பாதித்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. மீண்டும் திருட்டுத் தொழிலில் இறங்கினான். இதை குண்டலகேசி கண்டித்தாள். இதுகாளனுக்கு பிடிக்கவில்லை. 
ஒருநாள் மலை உச்சியில் சந்தோஷமாக இருந்து வரலாம் எனக் கூறி, அவளை அழைத்துச் சென்றான். அங்கு சென்றதும் அவளைத் தள்ள முயற்சித்தான். அவள் சுதாரித்துக் கொண்டு, "இனியவரே! தங்கள் விருப்பப்படியே என்னைத் தள்ளிக் கொல்லுங்கள். ஆனால், சாகும் முன் கணவனை வலம் வந்து வணங்கும் பெண்கள் பாக்கியசாலிகளாகும் பேறு பெறுவர். அதற்கு அனுமதியுங்கள்,'' என்றாள்.
காளனும் வேண்டா வெறுப்பாய் சம்மதித்தான். இரண்டு முறை வலம் வந்த குண்டலகேசி, மூன்றாம் முறை வலம் வரும்போது மிகவும் விரைவாக தன் கணவனை பாதாளத்தில் தள்ளி விட்டாள். அவன் உயிர் இழந்தான். 
பின்னர் அந்த துரதிர்ஷ்டசாலிப் பெண், "ஆசையே அத்தனை துன்பங்களுக்கும் காரணம்,'' என்ற புத்தரின் போதனையை உலகெங்கும் பரப்பி சில காலம் வாழ்ந்து புத்தரின் திருவடியை எய்தினாள்.
இளம்பெண்கள் தங்கள் யாரைக் காதலிக்கிறோம் என்பது தெரியாமல், காதல் வலையில் விழுந்து தங்கள் வாழ்வை நாசப்படுத்திக் கொள்கிறார்கள். பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளில் மீண்டும் நல்லொழுக்க வகுப்புகள் துவங்க வேண்டும். 
அப்படியானால் தான், இன்னொரு கோவை சம்பவம் நிகழாமல் தடுக்க முடியும்.

No comments:

Post a Comment