Monday, August 24, 2015

எல்லாம் நன்மைக்கே!

அரண்மனையில் மன்னர் ஆர்வமுடன் மந்திரியிடம் பேசிக் கொண்டிருந்தார். அவர் பழம் ஒன்றை நறுக்க கத்தி எடுக்க, தவறுதலாக கையில் பட்டு ரத்தம் வந்தது. அதைக் கண்ட மந்திரி, "எல்லாம் நன்மைக்கே' என்றார் இயல்புடன்.
மன்னர் கோபத்தில், ""என்ன உளறுகிறீர்?'' என கத்தினார். 
""ஆம்! மன்னா! வேலைக்கு ஆயிரம் பேர் காத்திருக்க, தாங்கள் இப்படி கையை நறுக்கி கொண்டால் அதில் ஏதோ அர்த்தம் இருக்கிறது. எல்லாம் நன்மைக்காக!'' என்றார் மந்திரி. 
கொந்தளித்த மன்னர், "" உளறிக் கொட்டும் இவரைச் சிறையில் அடையுங்கள்'' என்று உத்தரவிட்டார். அமைதி தேடி, குதிரையுடன்
தனியாளாகக் காட்டுக்குப் புறப்பட்டார் மன்னர்.
அங்கு காட்டுவாசிகளிடம் சிக்கிக் கொண்டார்.
காளி வழிபாடு செய்யும் அவர்கள், மன்னரை நரபலி கொடுக்க எண்ணி மரத்தில் கட்டி வைத்தனர்.
காட்டுவாசிகளின் தலைவன், மன்னரின் ரத்தக் காயம் கண்டு, ""குறையுள்ள இவனைக் காளிக்கு பலி கொடுப்பது நல்லதல்ல'' என்று அவிழ்த்து விட்டான். மன்னர் அரண்மனை திரும்பினார்.
மந்திரியைக் கண்டு நடந்ததை தெரிவித்தார். 
""மந்திரியாரே! நீங்கள் சொன்னது உண்மையாகி விட்டது. குற்றம் செய்யாத உங்களைச் சிறையில் அடைத்து விட்டேனே'' என்று வருந்தினார். 
""எல்லாம் நன்மைக்கே மன்னா! நானும் வந்திருந்தால் நிலைமை என்னாகும்? காட்டுவாசிகளிடம் நான் அல்லவா சிக்கியிருப்பேன். அதற்காகவே என்னை சிறையில் அடைத்து விட்டீர்கள்!'' என்றார் மந்திரி. 
மந்திரியின் மந்திரச் சொல்லை மன்னரும் அன்று முதல் உச்சரிக்கத் தொடங்கினார்.

No comments:

Post a Comment