Wednesday, August 26, 2015

பச்சை கண்ணாடி

ஒரு பணக்காரருக்கு தீராத வயிற்றுவலி. எவ்வளவோ செலவழித்தும் குணமாகவில்லை. வைத்தியத்தால் குணமாகாது என நினைத்து, தங்கள் ஊருக்கு வந்த சாமியாரிடம் போனார்.
"சுவாமி! விஷயம் இப்படி! நீங்கள் தான் இது குணமாக வழி சொல்ல வேண்டும்,'' என்றார்.
"தம்பி! உன் வயிற்றுவலிக்கு காரணம் கண்கள். கண்ணில் உள்ள கோளாறு வயிறு வரை பாதித்திருக்கிறது. எனவே, நீ பார்க்கும் பொருள்களை எல்லாம் பச்சை வண்ணமாக செய்து கொள். குணமாகி விடும். அடுத்த வாரம் வந்து பார்க்கிறேன்,'' என்றார்.
பணக்காரர் ஊரில் இருக்கும் எல்லா பெயின்டர்களையும் வரவழைத்து, வீட்டிலுள்ள நாற்காலி, கட்டில், சுவர், பாத்திரங்களில் கூட பச்சை பெயின்டை பூசச் சொல்லி விட்டார். எங்கு திரும்பினாலும் பச்சை நிறம். ஒரு வழியாக வலி குறைந்து விட்டது. அடுத்த வாரம் சாமியார் ஊர் எல்லைக்கு வந்தார். அப்போது பத்து பேர் பச்சை வண்ணக்கலவையுடன் ஓடி வந்தனர்.
"சாமி! பணக்காரரை பார்க்கவா போறீங்க!''
"ஆமாம்... ஏனப்பா கேட்கிறீங்க?'
""கொஞ்சம் நில்லுங்க! உங்க அங்கி சிவப்பா இருக்கு. அதை இந்த பச்சை வண்ணத்தாலே மறைச்சுடுதோம்,'' எனச்சொல்லி அவர் மீது வண்ணத்தை வாரி இறைத்து விட்டனர்.
சாமியாருக்கு கடுமையான கோபம் வந்து விட்டது. நேரே பணக்காரர் வீட்டுக்குச் சென்றார்.
"அடேய்! நீ பார்க்கும் இடமெல்லாம் பச்சையாக இருக்கட்டும் என்று தானே சொன்னேன். அதற்காக உன் பொருளையும் நாசம் செய்து, பிறர் பொருளையும் நாசம் செய்கிறாயே! முட்டாளே! உன்னால் நீ நடந்து செல்லும் தரைக்கும், வானத்துக்கும் பச்சை பூச முடியுமா! ஆயிரக்கணக்கில் பணத்தையும் வீணடித்தாயே! நாலு ரூபாய்க்கு இரண்டு பச்சைக் கலர் கண்ணாடி வாங்கிப் போட்டிருந்தால், பார்க்கும் இடமெல்லாம் பச்சையாகத் தெரிந்திருக்கும். இது கூடவா உன் மரமண்டைக்கு ஏறவில்லை' என்றார்.
இந்தக் கதையில் வரும் பணக்காரரைப் போல, உலகிலுள்ள எல்லாருமே ஏதோ ஒரு குறை உடையவர்கள் தான். ஆனால், அதைச் சரி செய்யாமல், மற்றவர்களைக் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மனப்போக்கை மாற்றி, ஒவ்வொருவரும் தங்களை 
சீர்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

No comments:

Post a Comment