Wednesday, August 26, 2015

மறுத்தார் அன்று மருந்திட்டார் இன்று!

றவை பறக்கும் வழி, மீன் நீந்தும் பாதை, மகான்களின் போக்கு இந்த மூன்றையும் யாராலும் அறிய முடியாது. மகான்கள் எப்போது வருவார்கள், எப்படி அருள்புரிவார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அதை விளக்கும் சம்பவம் இது. 
மதுரா நகரில் வாசவதத்தை என்ற அழகி இருந்தாள். ஆடலரசியான அவள் மாளிகையில் ஆடம்பரமாக வாழ்ந்தாள். ஒருநாள் 
உப்பரிகையில் நின்றபடி வீதியை வேடிக்கை பார்த்திருந்தாள். இளமையும், அழகும் ததும்பும் முகத்துடன் புத்த பிட்சு ஒருவர் பிச்சைக்காக வந்தார். 
அவரிடம் மனதைப் பறி கொடுத்தாள் வாசவதத்தை. அதாவது கண்டதும் காதல்..! 
""சுவாமி! நான் உங்களின் உடைமை. இந்த மாளிகையும் உங்களுக்கே சொந்தம். உள்ளே வாருங்கள்,'' என்று கையைப் பிடித்து வரவேற்றாள்.
கையைப் பின்னுக்கு இழுத்த பிட்சு,""அம்மா! இப்போது வர வாய்ப்பில்லை. பின்னொரு நாளில் வருகிறேன்'' என்று சொல்லி நடந்தார். வழி மறித்த வாசவதத்தை, ""பின்னொரு நாள் என்றால் எப்போது?'' எனக் கேட்டாள்.
""வர வேண்டிய தருணத்தில் சரியாக வருவேன்'' என்று சொல்லி விட்டுப் புறப்பட்டார். 
ஆண்டுகள் உருண்டோடின. ஒருநாள்... 
யமுனை நதிக்கரையில் வயதான பெண் ஒருத்தி வீதியில் கேட்பாரற்றுக் கிடந்தாள். அழுக்கு மேனி, கிழிந்த ஆடை, ரத்தக் காயம், துர்நாற்றம் என இருந்த அவளைக் கண்ட அனைவரும் ஒதுங்கிச் சென்றனர். அந்தப் பெண் தான் வாசவதத்தை. அழகும், இளமையும் இருந்த காலத்தில் அவளைச் சுற்றி வண்டு போல கூட்டம் சுற்றியது. தவறான நடத்தையால் நோய் பீடித்த அவளை இப்போது கவனிக்க ஆளில்லை.
ஆனால், இரக்கம் கொண்ட ஒருவர் அவள் அருகில் வந்தார். காயத்தைத் துடைத்து மருந்திட்டார். கண்களைத் திறந்தும் பார்க்க 
சக்தியற்ற வாசவதத்தை,""ஐயா! யார் நீங்கள்?'' என்றாள்.
வந்தவர், ""அம்மா! நான் ஒரு புத்தபிட்சு. என் பெயர் உபகுப்தன். முன்பொரு நாள் வாக்களித்தபடி, இப்போது உதவி செய்ய வந்திருக்கிறேன்'' என்றார். தர்ம உபதேசம் செய்து அவளை நல்வழிப்படுத்தினார்.
உடல், உள்ளத்தை குணப்படுத்தும் மகான்களின் போக்கு நமக்குப் புரியாது.
மனித குலம் தழைக்க அவர்களை ஆதரிக்க வேண்டியது நம் கடமை!மறுத்தார் அன்று மருந்திட்டார் இன்று

No comments:

Post a Comment