Wednesday, August 26, 2015

வசதி போய்விட்டால்!

ஒரு எஜமானன், தன் பயணத்துக்காக ஒரு குதிரையையும், தன் சுமைகளைக் கொண்டு செல்ல ஒரு கழுதையையும் வளர்த்தார். குதிரைக்கு நல்ல வகை உணவு தரப்பட்டது. அலங்கார சேணம், கழுத்தைச் சுற்றி வெள்ளியால் ஆன பட்டையால் அலங்கரிக்கப்பட்டது. தினமும் அதை இளவெந்நீரில் குளிப்பாட்டி, வாசனை திரவியங்களை உடலில் தடவியதால் பெருமையுடன் திரிந்தது.
கழுதையோ வெட்ட வெளியில் நிறுத்தப்பட்டது. சாதாரண உணவு தான் தரப்பட்டது. எப்போதாவது ஒருமுறை தான் ஆற்றிற்கு கொண்டு போய் குளிப்பாட்டுவார்கள்.
இப்படி கஷ்டப்படும் கழுதையை ஏளனமாகப் பார்த்தது குதிரை. "நம் எஜமான் என்னை எப்படி கவனிக்கிறார் பார்த்தாயா?'' என பீற்றிக் கொண்டது. ஒருநாள், எஜமானைச் சுமந்து சென்ற குதிரை, ஒரு பள்ளத்தை தாண்டும்போது, அதனுள் தவறி விழுந்து விட்டது. எஜமானனுக்கும் குதிரைக்கும் பலத்த காயம். ஆத்திரத்தில், குதிரையை நையப்புடைத்து விட்டார். 
இந்தக் குதிரை இனி சவாரிக்கு ஆகாது எனக்கருதி கழுதையைப் போல் மூட்டை சுமக்க வைத்து விட்டார்.
இப்போது குதிரை, ""உன்னைக் கேலி செய்ததற்கான விளைவை அனுபவிக்கிறேன், கஷ்டப்படுபவர்களின் மனதைப் புண்படுத்துவது பெரிய பாவம் என்பதை உணர்ந்து கொண்டேன். என்னை மன்னித்து விடு'' என்றது.
இன்பவாழ்வு நிரந்தரமானதல்ல. நன்றாக இருக்கும் வரை தான் உலகம் வாழ்த்தும். வசதி போய்விட்டால், வசை தான் கிடைக்கும். எனவே, எவ்வளவு பணமிருந்தாலும், அடக்கமாக வாழ கற்றுக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment