Monday, August 24, 2015

இசையால் வசமாகா இதயம் எது?

திருச்செந்தூரில் வசித்த முத்தம்மை சிறுவயதிலேயே முருகன் மீது பக்தி கொண்டவள். அங்கிருந்த கல்யாண மண்டபத்தில் பக்தர்கள் முருகனை பாடி பூஜிப்பதைக் கவனிப்பாள். தானும் அவர்களோடு பாட விரும்பினாள். 
ஒருமுறை பக்தர்களிடம் சென்று, ""பாடும் பணியே பணியாய் அருள்வாய்' என்ற கந்தரனுபூதி பாடலைப் பாட நான் விரும்புகிறேன். அனுமதி கொடுங்கள்,'' என்றாள். பக்தர்களும் சம்மதித்தனர். 
அவளது குரல் இனிமையால் ஈர்க்கப்பட்ட பக்தர்கள் தொடர்ந்து பாட அவளுக்கு அனுமதி அளித்தனர். 
காலம் சென்றது. முத்தம்மைக்கு வயதாகி விட்டது.
ஒருமுறை, ""முருகா! உன்னை எவ்வளவோ காலமாக பாடியிருக்கிறேன். இதை எந்த பலன் கருதியும் நான் பாடவில்லை. ஆனாலும், இந்த கிழவியின் மனதில் ஒரு ஆசை. என் உயிர் பிரிவதற்குள் உன்னை நேரில் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்க வேண்டும், அதை 
அருள்வாயா?'' என வேண்டினாள். 
ஒருநாள், முத்தம்மை பாடிக் கொண்டிருந்த நேரத்தில், யாரோ தன் அருகில் நிற்பது போல இருந்தது. திரும்பிப் பார்த்தாள். இளைஞன் ஒருவன் நின்றான். அவள் தன்னைப் பார்த்ததும், ஒரு தூண் அருகில் சென்று மறைந்து கொண்டான்.
முத்தம்மை அவனிடம்,""மகனே! ஏன் மறைந்து நிற்கிறாய்? அருகில் வந்து கேட்கலாமே!'' என்றாள். அவனோ அங்கிருந்து ஓடி விட்டான்.
என்ன காரணமோ தெரியவில்லை. அவனைப் பார்த்ததில் இருந்து, மூதாட்டியின் மனம் ஆனந்தத்தில் மிதந்தது. 
மறுநாள் பொழுது புலரும் நேரத்தில், யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது.
முத்தம்மை ஜன்னல் வழியாக,""யாரப்பா?'' என்று கேட்டாள். 
மண்டபத்தில் பார்த்த அந்த இளைஞனும், அவன் மனைவியும் வாசலில் சிரித்தபடி நின்றனர். 
""மகனே வா! இவள் தான் உன் மனைவியா? உலகத்து பெண்களின் அழகெல்லாம் இவள் முகத்தில் கொட்டிக் கிடக்கிறதே! உள்ளே வாருங்கள்! நீங்கள் யார்?'' என்றாள்.
""அம்மா! இவ்வளவு காலமாக என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே! இன்னுமா என்னை அடையாளம் தெரியவில்லை! நானும் இதே ஊர் தான். உடனே எங்களுடன் கிளம்புங்கள், '' என்று அழைத்தான் இளைஞன்.
மூதாட்டிக்கு ஏன் என்று கேட்கத் தோன்றவில்லை. 
இளைஞனும், அவன் மனைவியும் முன்னே நடக்க மூதாட்டி பின் தொடர்ந்தாள். 
மூவரும் கல்யாண மண்டபத்தை அடைந்தனர். 
அங்கு இளைஞன் முருகனாகவும், அவன் மனைவி வள்ளியாகவும் மாறி காட்சியளித்தனர்.
""அம்மா! பக்தியுடன் பாடுவோர் இருக்கும் இடத்தில் எல்லாம் நான் இருப்பேன். நீங்கள் என்று பாட ஆரம்பித்தீர்களோ, அன்று முதல் உங்கள் பாடலைக் கேட்டு வருகிறேன். இன்று உங்கள் பார்வையில் சிக்கிக் கொண்டேன்,'' என்று சொல்லிச் சிரித்தார் முருகன். வள்ளி 
அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டாள். 
அந்த அன்பான அணைப்புடன், அவளது உயிர் பிரிய, முருகன் அவளை கந்தலோகத்துக்கு அழைத்துச் சென்றார்.
இப்போது, முத்தம்மையின் பாடல் ஒலி அங்கே கேட்டுக் கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment