Monday, August 24, 2015

பொன்னாசை கொண்டோர்க்கு உள்ளமில்லை

ஒரு வியாபாரி கோடிக்கணக்கில் பணம் வைத்திருந்தான். ஆனால், தர்மசிந்தனை அறவே இல்லை. 
ஒருமுறை, வண்டியில் வெளியூர் செல்லும் போது திடீரென ஞானோதயம் வந்து, பிள்ளையார் கோயில் முன் வண்டியை நிறுத்தினான். 
""பிள்ளையாரே! நான் உனக்கு மாதம் நூறு தேங்காய் உடைக்கிறேன். ஆனால், எனக்கு பத்து லட்சம் வருமானம் வேண்டும்,'' என்று பேரம் பேசினான்.
பிள்ளையார் அவனுக்கு புத்தி கற்பிக்க முடிவு செய்தார். அந்த கோயில் வாசலில் ஒரு பிச்சைக்காரன் இருப்பான். அவனுக்கும் 
மனைவி, குழந்தைகள் உண்டு.
""பிள்ளையாரே! எப்பிறவியில் என்ன பாவம் செய்தேனோ, பிச்சை எடுக்க வைத்து விட்டாய். இது எங்களுக்கு போதவில்லை! என் பாவங்களை மன்னித்து நல்வழிகாட்டு,'' என கண்ணீர் விட்டு பிரார்த்திப்பான்.
ஏழையின் கண்ணீர் விநாயகரின் நெஞ்சைக் கரைத்தது. ஒருநாள் வியாபாரி கோயிலுக்கு வந்தான். அப்போது அவன் காதில் மட்டும் 
விழும்படியாக, ""நான் தான் பிள்ளையார் பேசுகிறேன். அதோ, இருக்கிறானே, பிச்சைக்காரன். அவனுக்கு இன்று மாலைக்குள் ஒராயிரம் பொற்காசு கிடைக்கப் போகிறது,'' என்று அசரீரி ஒலித்தது.
வியாபாரிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. 
அவனுக்கு கிடைக்கும் பொற்காசுகளைப் பறிக்க திட்டமிட்டான். அவனிடம் போய், ""ஏனப்பா! உனக்கு எல்லாரும் சாதாரண நாணயங்களைப் போடுகிறார்கள். நான் ஒரு தங்கக்காசு தருகிறேன். ஆனால், இதன் பிறகு உனக்கு கிடைக்கும் வருமானத்தை எனக்கு தந்து விட வேண்டும்,'' என்றான்.
பிச்சைக்காரனுக்கு சந்தோஷம். "மாலை வரை பார்த்தாலும், ஒரு படி அரிசி வாங்கக்கூட தேறாத அளவுக்கு சில்லறைகள் தான் விழும். இவனோ தங்கமே தருகிறேன் என்கிறான். ஆகா... இதை விற்றால் ஒரு மாதம் சுகமாக வாழலாம்' என கற்பனையில் ஆழ்ந்தான்.
ஆனால் இருட்டும் வரை யாரும் பிச்சைக்காரன் தட்டில் பொற்காசைப் போடவில்லை.
வியாபாரிக்கு கோபம் வந்து விட்டது. பிள்ளையாரிடம் போய், ""ஏ, பிள்ளையாரே! என்னை ஏமாற்றி விட்டாயே,'' எனக்கூறி அவர் முகத்தில் ஓங்கி அடித்தான்.
பிள்ளையார் தன் தும்பிக்கையால் அவன் கழுத்தை இறுக்கிப் பிடித்தார். ""நீ உடனே ஆயிரம் பொன்னை அந்த பிச்சைக்காரனுக்கு கொடு. இல்லாவிட்டால் உன்னை இப்படியே கொன்று விடுவேன்,'' என்றார்.
மனமில்லாவிட்டாலும், உயிரைக் காப்பதற்காக, அவன் ஆயிரம் பொற்காசுகளை கொடுக்க சம்மதித்தான். விநாயகர் பிடியை விட்டார்.
இறைவனிடம் காசு பணம் கேட்டு பிரார்த்திப்பதில் தவறில்லை. ஆனால், அது நம் நியாயமான சுய உழைப்புக்கான பலனாக இருக்க வேண்டும். பேராசையால், அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி!

No comments:

Post a Comment