Wednesday, August 26, 2015

அந்த பண்டிதர் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். பக்கத்தில் ஏராளமான ஓலைச்சுவடிகள் இருந்தன. அறையில் எரிந்த விளக்கில் எண்ணெய் குறையத் தொடங்கியது. அப்போது ஒரு முதிய பெண் அங்கு வந்து எண்ணெய் ஊற்றி திரியைத் தூண்டினார். ஆனால், தவறுதலாக விளக்கு அணைந்து விட்டது. எழுத்துப்பணி தடைபட்டது.அதை உணர்ந்த அந்தப் பெண் அணைந்த விளக்கை உடனே ஏற்றி விட்டு நகர முயன்றார்.தடுத்த பண்டிதர், ""அம்மா! நீங்கள் யார்?'' எனக் கேட்டார்.""சுவாமி! விளக்கு அணைந்ததால் உங்கள் பணி தடைபட்டு விட்டது. இனிமேல், இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வேன். என்னை மன்னியுங்கள். உங்கள் பணியைத் தொடருங்கள்'' என்றார்.பண்டிதர்,""அம்மா! கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் சொல்லவில்லையே! நீங்கள் யாரென்று கேட்டேனே!''. "சுவாமி! நான் உங்கள் மனைவி. "நீங்கள்' என மதிப்புடன் அழைத்து என்னைப் பாவியாக்கி விடாதீர்கள்,'' என வேண்டினார் அந்தப்பெண்.பண்டிதர் அதிர்ச்சியுடன், ""அப்படியா? நமக்கு எப்போது திருமணம் ஆனது?'' எனக் கேட்டார்.""50 ஆண்டுகளுக்கு முன்னால்.....'' என பதில் வந்தது.பண்டிதர் வருத்தத்துடன், ""இத்தனை ஆண்டுகளாக எனக்கு ஏன் நினைவுபடுத்தவில்லை?'' என்றார்.""எப்படி என்னால் முடியும்? எழுதுவதைத் தவிர வேறெதிலும் நீங்கள் கவனம் செலுத்தவில்லை. உங்களைக் கவனிப்பது, நீராட, ஆகாரத்திற்கு ஏற்பாடு செய்வது, எழுத ஓலைகளை எடுத்து வைப்பது என எல்லாவற்றையும் செய்தேன். ஆனால், எந்த சமயத்திலும் நீங்கள் என்னை ஏறெடுத்தும் பார்த்ததில்லை. இன்று விளக்கு அணைந்து எழுத்துப்பணி தடைபட்டதால், என்னைப் பற்றி தெரிந்து கொண்டீர்கள்,'' என்றார்.""இத்தனை காலமாக உணவுக்கு என்ன செய்தாய்?'' என்றார் பண்டிதர்.""பெண் குழந்தைகளுக்கு சங்கீதம் கற்றுத் தருவதால், குரு தட்சணையாக தானியம் தருகிறார்கள். அதைக் கொண்டு இருவருக்கும் சமைத்தேன்'' பண்டிதருக்கு நா குழறியது. ""அம்மா! உன் பெயர் என்ன?'' என்று கேட்டார்.""பாமதி'' என்றார்.""மனைவியைக் காப்பது கணவனின் கடமை. ஆனால், தியாக தீபமாக இருந்து என்னைக் காப்பாற்றி வந்திருக்கிறாய். நான் எழுதியுள்ள இந்த வேதாந்த நூலுக்கு "பாமதி' என்று உன் பெயரைச் சூட்டுகிறேன்...''அந்தப் பெண்ணின் கண்களில் பெருமிதம் மிளிர்ந்தது. இப்படிப்பட்ட உத்தம மனைவி வாய்க்கப் பெற்ற அந்த பண்டிதரின் பெயர் வாசஸ்பதி மிச்ரர்.

No comments:

Post a Comment