Tuesday, October 6, 2015

மாமிசம் சாப்பிடுவது குற்றமா?

அசைவம் தவறா? சைவம் சரியா? இப்படியே ஆளாளுக்கு வாதிட்டு எதைச் சாப்பிடுவது என்று மாறுபட்ட கருத்துக்களோடு இருக்கையில், இதில் சத்குருவின் கருத்தென்ன? வழக்கம் போல் மாறுபட்ட சிந்தனைத் துளிகளை வழங்கியுள்ளார். அறிந்து கொள்ள மேலே படியுங்கள்… சத்குரு: உணவு மேசையில் அமர்ந்திருக்கிறீர்கள்! பலவிதமான பதார்த்தங்கள் நிரம்பி இருக்கின்றன. நீங்கள் உணவருந்தத் தயார். இப்போது உங்களின் மனநிலை எப்படி இருக்கிறது? ஆனந்தமாக இருந்தால், மனசுக்குள் திரைப்பட பாடலொன்று ஓடும். நட்போ, உறவோ அருகில் இருந்தால், அரட்டைக் கச்சேரி ஆரம்பிக்கும். அடுத்தடுத்த வேலைகள் காத்திருந்தால் எதிலும் மனசு லயிக்காது. ஏதேனும் பிரச்சினை இருந்தாலோ, அப்போது உங்களை எரிச்சலும், கோபமும் எடுத்துச் சுவைத்துக் கொண்டு இருக்கும் சரிதானே! இந்த உயிரைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் எதையாவது கொன்றே ஆகவேண்டும். ஒவ்வொரு நாளும், நீங்கள் உயிரைத் தக்க வைத்துக் கொள்வதற்காக கோடிக்கணக்கான உயிரினங்கள் இறக்கின்றன. நீங்கள் படிக்கப் போவது இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மனிதரின் கதை… மஹாவீரர், ஒரு சத்ரியர். மாமிசம் சாப்பிட்டு வந்தார். ஒருநாள் சாப்பிடும்போது, ‘இதுவும் உயிர்தானே, நாம் ஏன் இதைக் கொன்று சாப்பிட வேண்டும்? இது சரியல்லவே’ என்று ஒரு திடீர் சிந்தனை. அப்போதிருந்து மாமிசம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு முழுவதுமாக தாவர உணவுக்கு மாறினார். இது அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. இன்னொரு நாள் அவர் தியானம் செய்துகொண்டு இருந்தபோது, அவர் எந்த மரத்தின் கீழ் உட்கார்ந்திருந்தாரோ, அந்த மரம் அவர் பார்த்த எந்த விலங்கையும்விட, எந்தத் தாவரத்தையும்விட மிகவும் உயிரோட்டமாக இருப்பதை உணர்ந்தார். நான் இன்னும் தவறு செய்கிறேனே. இந்த மரத்திலிருந்து பழத்தைப் பறித்துச் சாப்பிடுகிறேன். இதைச் செய்ய எனக்கு என்ன உரிமை இருக்கிறது? என்று நினைத்தார். அப்புறமென்ன, காய்கறிகளையும் பழங்களையும் உண்ண மறுத்தார். பழம் தானாகக் கீழே விழும் வரை காத்திருந்து, அதன் பிறகே அந்தப் பழத்தை எடுத்துச் சாப்பிட்டார். பழம் விழவில்லையென்றால் அவர் சாப்பிட மாட்டார். காய்கறிகள் உயிர்ப்போடு இருக்கும்போது அவற்றைச் சாப்பிடமாட்டார். அவை அழுக ஆரம்பித்த பிறகே சாப்பிடுவார். இப்படியே சில காலம் கடந்தது. ஒரு நாள் அழுகிய காய் ஒன்றை விழிப்புணர்வுடன் சுவைத்துக் கொண்டு இருந்தார் மகாவீரர். அப்போது அந்த அழுகிய காய்கறி மிகவும் உயிர்ப்புடன் இருப்பதைச் சட்டென உணர்ந்தார். அவ்வளவுதான்… இதுவும் இனி வேண்டாம் என எல்லாம் துறந்து பட்டினியாய் இருக்க ஆரம்பித்தார். 12 வருடங்களில் 11 வருடங்கள் அவர் உண்ணாவிரதம் இருந்தார். அதாவது 11 நாட்கள் சாப்பிடமாட்டார். 12வது நாள் ஒருவேளை உணவு மட்டும் சாப்பிடுவார். மீண்டும் 11 நாட்கள் சாப்பிடமாட்டார். 12வது நாள் உயிரைத் தக்க வைத்துக் கொள்வதற்காக மட்டுமே அந்த ஒருவேளை உணவையும் சாப்பிடுவார். இப்படி 12 வருடங்களில் 11 வருட காலம் அவர் சாப்பிடவே இல்லை. மகாவீரரின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. பிறகு ஒருநாள், ‘தனக்குள்ளும் உயிர் இருக்கிறதே, மற்ற உயிர்களைக் காப்பாற்றுவதற்காக இந்த உயிரை மிகவும் துன்பப்படுத்துகிறோமே! என்று உணர்ந்தார். அதன் பிறகே வழக்கம்போல உணவருந்த ஆரம்பித்தார். இப்போது கேள்வி வருகிறது… எதை நாம் உண்ணலாம். எதைத் தவிர்க்க வேண்டும் என்று நாம் உயிர் வாழ, எதையாவது கொன்றுதான் சாப்பிட்டாக வேண்டும். வாழ்க்கையின் தன்மை அப்படித்தான் இருக்கிறது. தாவரங்களின் தன்மையைவிட விலங்கின் தன்மை மனிதனுக்கு நெருக்கமாய் இருப்பதால்தான், விலங்குகளைத் துன்புறுத்துவதை ‘அஹிம்சை’ என்றும் கருதுகிறோம். ஏனெனில் விலங்குகள் நம்மைப் போல் வாழ்கின்றன. நீங்கள் என் கையை அறுத்தால் ரத்தம் வருகிறது. ஒரு கோழிக்குஞ்சை அறுத்தாலும் ரத்தம் வருகிறது. அதனால்தான் நாம் விலங்கின் தன்மைக்கு நெருக்கமாய் இருப்பதாகக் கருதிக்கொள்கிறோம். உணர்ச்சியின் அடிப்படையில் நாம் அப்படி நினைத்துக் கொள்கிறோம். ஆனால் உண்மையில் விலங்கு, தாவரம் இரண்டுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. நீங்கள் ஒரு விலங்கைத் துன்புறுத்தினாலும் தாவரத்தைத் துன்புறுத்தினாலும் அந்த இரண்டு உயிர்களுக்கும் வலியும் பாதிப்பும் ஒரே விதமாகத்தான் இருக்கும். இந்த உயிரைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் எதையாவது கொன்றே ஆகவேண்டும். ஒவ்வொரு நாளும், நீங்கள் உயிரைத் தக்க வைத்துக் கொள்வதற்காக கோடிக்கணக்கான உயிரினங்கள் இறக்கின்றன. பல தாவரங்கள், கண்களால் பார்க்க முடியாத மிகச் சிறிய உயிரினங்கள் உங்களுக்காகவே இறக்கின்றன. இப்போது செய்ய முடிவது ஒன்றுதான். சாப்பிடுவதையாவது நன்றியுணர்வுடன் சாப்பிடலாம். உணவின் ஒவ்வொரு கவளத்தையும் நன்றியுணர்வுடன் சாப்பிட வேண்டும். ஆம், நன்றியுணர்வுடன் சாப்பிட்டு பாருங்கள். என்ன சாப்பிட்டாலும் அது உடலுக்கு ஆனந்தமாக இருக்கும். உடலுக்குத் தேவையான அளவு மட்டும் சாப்பிடுங்கள். சிறப்பான உடல் நலத்துடன் இருப்பீர்கள். இந்த அணுகுமுறை ஒரு சிறந்த மாற்றத்தைக் கொண்டுவரும். பல உயிர்கள் நமக்காக இறக்கின்றன. சிறிதாவது நாம் நன்றியுணர்வுடன் இருக்க வேண்டாமா? நமக்காக உயிர்விடும் உயிரினங்களுக்காக சிறிதாவது உணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்தானே, நன்றியுணர்வுடன் சாப்பிடுங்கள், நம்மால் செய்ய முடிந்தது அதுதான் – நன்றி

எவ்வகையான உணவு வகைகளை உண்பது நல்லது? அது ஏன் அசைவ உணவு எப்போதும் சர்ச்சைக்கு உரியதாகிறது? மாமிசம் உண்பது குற்றமா, என்ன? உயிர்களை கொன்று உண்பது பாவம் என்றால், சைவ உணவான தாவரங்களும் கூட உயிர்தானே? அதை மட்டும் கொல்லலாமா? இப்படி நீள்கிறது கேள்விப் பட்டியல். இதற்கு சத்குருவின் பதில் இங்கே… சத்குரு: உணவுமுறையில் இப்படி பல கோட்பாடுகள் வைத்ததற்குக் காரணம், உயிர்வதை, வன்முறை கூடாது என்பதால் மட்டுமல்ல. வாழ்க்கையை உற்றுப் பார்த்தால், இங்கு உயிர்வாழ்வதும், ஏன் சுவாசிப்பதும் கூட வன்முறை தான். ஆனால் நீங்கள் தேவையான அளவிற்கு மட்டும் வன்முறை செய்கிறீர்களா, அல்லது எல்லை தாண்டிப் போகிறீர்களா என்பதுதான் கேள்வியே. எது வன்முறை? ஒரு எறும்பாக இருந்தாலும், கரப்பான்பூச்சியாக இருந்தாலும், ஆடாக இருந்தாலும், ஒவ்வொரு ஜீவராசிக்கும், அதன் உயிர்தான் இந்த உலகிலேயே அதற்கு மிகவும் உயர்வானது. நீங்கள் காரட் வெட்டுகிறீர்களோ, ஆப்பிள் வெட்டுகிறீர்களோ அல்லது கோழி, ஆடு வெட்டுகிறீர்களோ அது எதுவாக இருந்தாலும், அது வன்முறைதான். ஒரு எறும்பாக இருந்தாலும், கரப்பான்பூச்சியாக இருந்தாலும், ஆடாக இருந்தாலும், ஒவ்வொரு ஜீவராசிக்கும், அதன் உயிர்தான் இந்த உலகிலேயே அதற்கு மிகவும் உயர்வானது. விலைமதிப்பற்றது. “இது ஓரு ஆட்டின் உயிர்தானே…” என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அந்த ஆட்டிற்கு அப்படியல்ல. அது எத்தனை கர்வத்தோடு நடக்கிறது என்று பாருங்கள். அதைப் பொறுத்தவரை இவ்வுலகிலேயே அதுதான் மிக முக்கியமான உயிர். உங்கள் நினைப்பும் அதுதானே?! மாமிசம் சாப்பிடுவது குற்றமா..? இவ்வுலகில் வாழும் ஒவ்வோர் உயிரும் வெவ்வேறு அளவிலான பரிணாம வளர்ச்சி நிலையில் இருக்கிறது. வெவ்வேறு அளவிலான உணர்வுத்திறன் பெற்றுள்ளது. விஞ்ஞான ரீதியாக பார்த்தால், நாம் உண்ணும் உணவு, பரிணாம வளர்ச்சியில் நாம் இருக்கும் நிலையிலிருந்து வெகு தொலைவில் இருப்பது நல்லது. ஏனென்றால், ஒவ்வொரு ஜீவராசிக்கும், அது பதித்து வைத்துக்கொள்ளும் ஞாபக அளவைப் பொறுத்து, அதன் ஞாபகக் கட்டமைப்பு அமைந்திருக்கும். பரிணாம வளர்ச்சி நிகழ நிகழ, மிக நுண்ணிய விஷயங்களையும் பதித்து வைத்துக் கொள்ளும் வகையில், ஞாபகக் கட்டமைப்பு மேன்மேலும் நுட்பமானது. இந்த பரிணாம வளர்ச்சியின் உச்சநிலையில் மனிதன் இருப்பதால், அவனின் ஞாபகசக்தி மிகமிக நுட்பமாக இருக்கிறது. அவனது ஞாபகக் கட்டமைப்பும் மிக நேர்த்தியாக, மேம்பட்ட நிலையில் உள்ளது. எந்த ஜீவராசிக்கு ஞாபகக் கட்டமைப்பு மிக எளிய நிலையில் இருக்கிறதோ, அதை உணவாக உண்டால், அதை நாம் எளிதாக ஜீரணிக்கலாம். அதாவது, அந்த உணவின் ஞாபகங்களை எளிதாக மாற்றி, அதை நம் உடலோடு எளிதாக இணைத்திடலாம். இரண்டு உயிரணுக்களுடன் தொடங்கிய உங்கள் உடல், இத்தனை மடங்கு வளர்ந்தும் தன் தனித்தன்மையை இழக்காததற்குக் காரணம், அந்த அணுக்களின் ஞாபகத்திறன். அதைக் கொண்டு தான், அது தன்னைப் போன்றே அச்சுகளை உருவாக்குகிறது. பரிணாம வளர்ச்சியில், கீழ்நிலையில் உள்ள தாவரங்களை உட்கொண்டால், அதை கிட்டத்தட்ட 100% ஜீரணம் செய்திடலாம். அதன் ஞாபகங்களை முழுமையாக நீக்கிவிட்டு, உங்கள் ஞாபகத்தை அதன் மீது பதித்திடலாம். ஆனால், உங்களை ஒத்த ஜீவராசிகளை நீங்கள் உண்ணும்போது, அவற்றின் ஆழமான, சிக்கலான ஞாபகங்களை உங்களால் முழுவதுமாய் அழிக்க முடியாது. இப்படிப்பட்ட உணவினை நீங்கள் தொடர்ந்து உண்ணும் போது, உங்கள் ஞாபகத்தை அதன் மீது முழுமையாய் பதிக்கமுடியாமல் போவதால், நாள் ஆகஆக, உங்கள் தனித்தன்மையை நீங்கள் இழக்க ஆரம்பித்துவிடுவீர்கள். 25000 ஆண்டுகளாக உங்கள் மரபணுக்கள் மூலம் நீங்கள் சுமந்து வந்திருக்கும் கலாச்சாரம், நாகரீகம் எல்லாம் தொலைந்து விடும். உண்டாகும் உருச்சிதைவு! இதைத்தான் 2600 ஆண்டுகளுக்கு முன்பே மஹாவீரர் சொன்னார். விலங்குகளை உண்டால், நீங்கள் அவை போலவே ஆகிவிடுவீர்கள் என்று. அதற்காக இன்று நீங்கள் ஆட்டை சாப்பிட்டால், நாளையே ஆடு போல் தோற்றம் கொள்வீர்கள் என்று பொருளல்ல. இதுபோன்ற உணவுகளை உண்டால், சிறிது சிறிதாக ஞாபக ‘உருச்சிதைவு’ உண்டாகும். உங்கள் ஞாபகத்தை தன்மீது முழுமையாய் ஏற்காத, தன் ஞாபகங்களை இன்னும் பிடித்து வைத்துக்கொள்ளும் உணவுகளை (விலங்குகளை) உண்பதால், உங்கள் உடலின் ‘ஞாபகப் பதிவு’களில் குழப்பங்கள் உண்டாகிறது. இந்த ஞாபகக் குழப்பத்தோடு நீங்கள் பிள்ளைகள் பெற்றால், அவர்கள் சற்றே தடுமாற்றத்துடன் தான் இருப்பர். அசைவத்தில் என்ன தான் சாப்பிடுவது? உண்பதற்கு தாவரங்கள் தான் சிறந்தது. ஆனால், கட்டாயம் அசைவம் வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், பரிணாம வளர்ச்சியில் தாவரங்களுக்கு அடுத்த நிலையில் உள்ள கடல்வாழ் உயிரினங்களை உண்ணலாம். அதாவது மீன்களை உண்ணலாம். காரணம், கடல்வாழ் உயிரினங்கள் தான் விலங்கினத்தில் முதல்முதல் தோன்றியவை. ‘நகரும் உயிரினத்தின்’ பரிணாம வளர்ச்சியில், மனிதனைவிட வெகு தொலைவில் இருப்பவை அவை. உயிரின் ஞாபகத்தன்மை பாலூட்டி வகை விலங்குகள் பரிணாம வளர்ச்சியில் மனிதர்களுக்கு மிக அருகே இருப்பதால், அவற்றை நாம் உண்பதில்லை. ஓர் ஆட்டை சாப்பிட்டால் ஆரோக்கியம் வரும் என்றால், அதைவிட மேம்பட்ட உயிரினமான மனிதனை உண்டால், இன்னும் அதிகமாக ஆரோக்கியம் வரவேண்டும் அல்லவா? மனிதனை உண்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? பிரச்சினை, அவர் உங்களைப் போன்றே இருக்கிறார் என்பதால்தான். மனிதர்களைப் போலவே உணர்ச்சிகளும் எண்ணங்களும் கொண்ட விலங்குகளை உண்பது ஏறக்குறைய நரமாமிசம் உண்பது போல. இதை வேண்டாம் என்று சொன்னது, மதம் சார்ந்த கருத்தோ, நல்லொழுக்க சான்றோ அல்ல. இது நம் வாழ்வின் அஸ்திவாரத்தை தடுமாறச் செய்யும் விஞ்ஞானப் பூர்வமான பிரச்சனை. தொடர்ந்து மாமிசமோ, நுட்பமாக ஞாபகப் பதிவை வைத்துக் கொள்ளும் உணவு வகைகளையோ உண்டு வந்தால், ‘மனிதனின்’ தனித்தன்மைகளையே நீங்கள் இழக்க நேரிடும்.

: மாமிசம் சாப்பிடுவது குற்றமா..? 

No comments:

Post a Comment